கவிமணி தேசிக விநாயகம் பிறந்த நாள் 27.7.1876


'கட்டுரை

குமரி நாட்டுப் பெருங் கவிஞர்
"கவிமணி'" தேசிக விநாயகம்

"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை"

கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு மேற்படி கவிதையை கவிதை நடையிலேயே அழகாகச் சொன்னவர் " கவிமணி" தேசிக விநாயகம் ஆவார். இவரைக் குழந்தைக் கவிஞர் என்றே பலரும் அறிமுகப் படுத்துகின்றனர். இது ஒருமுகப் பார்வையாகும். கூர்ந்த மதிநுட்பத்தோடு சிந்திக்கும் ஆற்றல் கைவரப் பெற்ற இவர் தமிழுலகுக்கு பல அரிய படைப்புகளை தந்து விட்டுச் சென்றுள்ளார். இனி இவரின் வரலாற்றைக் காண்போம்.

இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் சுசீந்தரம் வடக்கே உள்ள தேரூர் எனும் சிற்றூரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலெட்சுமி இணையருக்கு மகனாக 27.7. 1876ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தையார் தமது குடும்ப வழக்கப்படி தமது பாட்டனார் பெயரான தேசிக விநாயகம் பெயரைச் சூட்டினார். இவரின் தந்தையார் அரசுப் பணியாளராகப் கோட்டாற்றில் பணியாற்றி வந்தார்.

அக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் பகுதிகள் சிக்குண்டு கிடந்தன. மலையாளிகளின் ஆதிக்கம் காரணமாக பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப் பட்டது. ஆங்கிலமும், மலையாளமும் கோலோச்சின. தேரூர் தொடக்கப்பள்ளியில் சேர்ந்து படித்த தேசிக விநாயகத்திற்கு தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. பள்ளியில் தமிழ் கற்பிக்கப் படாததால் தேசிக விநாயகம் வாணன் திட்டு மடத்தின் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடம் பயின்றார்.

தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது தந்தையார் காலமாகி விடவே, தாயாரின் முயற்சியால் கோட்டாறு ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். அப்போது முதலே கவி புனைவதில் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

1895இல் நாகர் கோவில் கிறித்துவக் கல்லூரியில் எப்ஃஏ படித்துவிட்டு, பின்னர் இறுதியாக திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமது படிப்பை நிறைவு செய்தார்.

1901இல் தமது இருபத்தைந்தாம் வயதில் உமையம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தமது துணைவியார் மீது அன்பு மிகுதி காரணமாக " தாயி" என்றே அழைப்பது அவரின் வழக்கம்.

தேசிக விநாயத்திற்கு தாம் படித்த கோட்டாறு அரசுப் பள்ளியிலேயே ஆசிரியர் பணி கிடைக்கிறது. 1902இல் திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு மாறுதலான போது அங்கு தமிழார்வலர் நீதிபதி சேஷய்யர், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பேராய்வாளர் சிவராஜ பிள்ளை, பண்டித முத்துச்சாமிப் பிள்ளை ஆகியோரின் நட்பு கிடைக்கிறது. அங்குதான் ஏனையோரின் கூட்டு ஒத்துழைப்போடு வரலாற்று ஆய்வில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தினார்.

அன்றைய நாளில் நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மலையாள மக்களிடம் வழக்கத்தில் இருந்துவந்த மருமக்கள் தாயமுறையை ஏற்றுக்கொண்டதால் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். மருமக்கள் தாயமுறை என்னவெனில், சொத்துகளை அனுபவித்து வரும் ஒருவர் அவரது இறப்பிற்குப் பின்னர், அந்தச் சொத்துகள் யாவும், அவரின் சகோதரியின் மூத்த மகனுக்கே போய்ச் சேரும். இறந்தவரது மனைவிக்கும், வாரிசுகளுக்கும் சொத்து கிடைக்காது. இதனால் அந்த இறந்தவரின் குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மடிந்தது.

இந்த கொடிய பழக்கம் தேசிக விநாயகத்தின் மனதைப் பெரிதும் பாதித்தது. இது குறித்து 1909இல் நாஞ்சில் நாட்டு வேளாளர்" என்ற தலைப்பில் "மலபார் குவார்ட்டர்லி ரிவியூ" ஆங்கில ஏட்டில் கட்டுரை எழுதினார்.

மேலும், 1917இல் " நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்" என்ற தலைப்பில் " தமிழன்" என்றொரு ஏட்டில் புரட்சி காவியம் தீட்டினார். கேலியும், கிண்டலும் உடைய இந்தக் காவியம் நாஞ்சில் நாட்டு மக்களிடம் மிகப் பெரிய விழிப்புணர்வைத் தூண்டியது. 1926இல் பிரித்தானிய அரசு இந்தப் பழக்கத்திற்கு தடை விதித்தது.

1927இல் W.E.காட்டன் என்பவர் "கேரளா சொசைட்டி" எனும் அமைப்பைத் தொடங்கி வரலாற்றாய்வு கருத்தரங்குகளை நடத்தி வந்தார். அதன் சார்பில் வெளிவந்த "கேரளா சொசைட்டி பேப்பர் " ஏட்டில் தேசிக விநாயகம் தொடர்ந்து பல தமிழர் வரலாறு குறித்த கட்டுரைகளை எழுதி வந்தார்.

1931இல் திருவனந்த புரத்திலிருந்து நாஞ்சில் நாட்டுக்குத் திரும்பிய தேசிக விநாயகம் புத்தேரியில் தங்கினார். அப்போது காந்தி இந்திய விடுதலைக் களத்தில் முன் நின்று போராடிக் கொண்டிருந்தார். அவரின் தாக்கம் தேசிக விநாயகத்தையும் விட்டு வைக்க வில்லை.

"அஞ்சி அஞ்சி அடங்கிக் கிடப்பதோ?
ஆண்மைமிக்கவராக எழுவீரோ?

-என்று பாடல் எழுதி காந்தியின் விடுதலைக் குரலை ஓங்கி ஒலித்தார்.

தீண்டாமை கொடுமைக்கு எதிராக நாஞ்சில் நாட்டுப் பகுதியில் " தாம்பூல விழாக்கள் நடத்தப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று வெற்றிலை, பாக்கு வைத்து, அழைத்து வரப்பட்டனர். இந் நிகழ்வுகளில் தேசிய விநாயகம் எழுதித் தந்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று கூறும் வைதீக மொழிக்கு எதிராக,

"தாயின் சிறந்த பிரமனுக்கும்- இரு
தாளில் விஷம் உண்டோ சாற்றுவீரோ"

என்றும்,

"கண்ணப்பன் பூசை கொழும்
கடவுள் திருக்கோவிலில்
நண்ணக் கூடாதோ? நாங்கள்
நடையில்வரல் ஆகாதோ?

"பெற்றான் சாம்பானுக்குப்
பேறளித்த பெருமாளை
வற்றாத அன்போடு யாம்
வணங்குவதும் வழுவாமோ?

"நந்தனுக்குப் பதமளித்த
நடராசன் எங்களுக்கும்
சொந்தமெனக் கூறுவதில்
சொல்லிழக்கும் உண்டோ ஐயா!

பார்ப்பார்கள் தோள் சுமந்து
பாணரை முன் திருக்கோயில் சேர்த்தார்கள் என்ற கதை தெரியாதோர் உண்டா ? ஐயா?"

என்று கலகமூட்டும் வகையில் கேள்வி எழுப்பினார்.

அதுபோல், மகளிர் மேன்மை குறித்து, அவர் எழுதிய பாடல் மகளிர் மேடைகளில் இன்றவும் பேசப்பட்டு வருகிறது.

" மங்கையராய் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும்,
"அல்லும் பகலும்
உழைப்பவர் ஆர்! - உள்ளத்து
அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?

தேசிக விநாயகத்திற்கு குழந்தைப்பேறு இல்லை. ஆனாலும் குழந்தைகள் பற்றிய பாடல் எழுதுவதில் அவருக்கு நிகர் எவருமில்லை. இன்றும் மழலைகளின் நாவிலே,

"தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கு துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி"

பாடல் தவழ்ந்து வருவதைக் கண்டு இன்புறலாம்.

தமிழ்மொழியைத் தமது உயிரெனக் கொண்டவர் தேசிக விநாயகம். 1940களில் தமிழிசை இயக்கம் தீவிரமாக இயங்கிய போது , "தமிழிசைக்கு நீடுலகி லுண்டா நிகர்? என்று கேட்டவரும் அவரே. அதுபோல, 1939இல் 'சக்தி' இதழுக்கு அனுப்பிய வாழ்த்தில், " ஆணவங் கொண்டு எந்த மொழி வந்தெதிர்த்தாலும் வெற்றி நம் சந்தத் தமிழ் மொழிக்கே" என்றார்.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தேசிய விநாயகம் அவர்களை சிறப்பிக்க விரும்பியது. தமது திறமைக்கு மிஞ்சிய சிறப்பினை தமக்கு வழங்கப்படுவதை ஏற்க முடியாது என்று அவர் தன்னடக்கமாக மறுத்தார். இருப்பினும், விழாக்குழுவினர் விடாது போராடி அழைத்து வந்தனர். 1940இல் நடைபெற்ற ஏழாம் தமிழ்ச் சங்க மாநாட்டில், தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்களைக் கொண்டு " தமிழ்க் கவிமணி" என்று பட்டமளித்து சிறப்பிக்கப்பட்டது.

அக்காலத்தில், நாடகத்துறையை சேர்ந்தவர்களுக்கும், இசைத்துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்திடும் வழக்கம் இருந்தது. இந்த வழக்கத்தை உடைத்து,
1943இல் ஆத்தூரில் செட்டி நாட்டு நடைபெற்ற விழாவில், செட்டி நாட்டு அண்ணாமலை அரசர் கைகளால் முதன்முறையாக இலக்கியத்துறையைச் சேர்ந்த தேசிக விநாயகத்திற்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

கல்வெட்டுத் துறையிலும் தேசிக விநாயகத்திற்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
தற்போது தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல. நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகள் மூலம் தேசிக விநாயகம் இவற்றை கூறியிருப்பதாக தனித்தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார்.

தேசிக விநாயகம் 6 தமிழ் நூல்களும், 31 தமிழ்க் கட்டுரைகளும், 15 ஆங்கிலக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களில் மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம், ஆசிய ஜோதி ஆகிய மூன்றும் மிகச் சிறந்த நூல்களாகும்.

திருவிதாகூர் தமிழர்கள் தாய்த்தமிழகத்தோடு இணைய விரும்பி வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திய போது அதிலும் தன்னை இணைத்துக் கொண்டவர் தான் தேசிக விநாயகம்.

பரசுராமன் மழுவை எறிந்து படைத்து உருவாக்கியதே எமது 'கேரள பூமி' என்று பார்ப்பனீய புராணக்கதைகளை அன்றைக்கு மலையாளிகள் அவிழ்த்து விட்டனர். அதனை தக்க ஆதாரங்களோடு மறுத்து 1945ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தேசிக விநாயகம் முழங்கினார். அது பின்வருமாறு:

"திருவிதாங்கூர் சேரநாட்டின் ஒருபகுதி என்பதை அறியாதவர் யார்? சேர அரசர்கள் யாவரும் செந்தமிழ் வேந்தர்களாயிருந்தார்கள் என்பதைச் சங்ககால இலக்கியங்கள் நமக்குக் காட்ட வில்லையா? நீங்கள் இந்த நாட்டிலுள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றைப் பார்ப்பீர்களானால் இது, தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொள்வீர்கள்"

அக்காலத்தில் கேரள காங்கிரசுத் தலைவரும் தீவிர மலையாளப் பற்றாளருமாகிய கேளப்பன் என்பவர் கன்னியாகுமரி முதல் காசர்கோடு வரை ஐக்கிய கேரளம் கேட்டுப் போராடி வந்தார். அப்போது தேசிக விநாயகம் அவர்கள் 1950ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற தெற்கெல்லை மாநாட்டில் இதனை கேலி செய்தும், மலையாளிகள் தமிழர்களை அடிமைப்படுத்தும் போக்கினை இடித்துரைத்தும் உரை நிகழ்த்தினார்.

" கேளப்பா என்றால் கேட்பதுமில்லை, ஆதாரங்களை எடுத்துக்காட்டிப் பாராப்பா, பாராப்பா என்றால் பார்ப்பதுமில்லை. பொறாமையும் பேராசையும்தான் கண்ணையும் காதையும் நன்கு மறைத்து விட்டனவே! இவர்களோடு எப்படி வழக்காடுவது.

முடியாட்சி நீங்கிக் குடியாட்சி ஓங்கும் இக்காலத்தில் மக்கள் சாதி சமய வேறுபாடுகள் ஒழித்து, மொழியால் ஒன்றுபட்டு வாழ்வதற்கு வகையேற்படுவது இன்றியமையாதது. அதற்காகவே தெலுங்கர்கள் ஆந்திர மாகாணம் கேட்கிறார்கள். கன்னடர்களும் தனி மாகாணத்துக்கு அரும்பாடு படுகிறார்கள். இவ்வேளையில், தென் திருவிதாங்கோட்டிலும், செங்கோட்டையிலும், தேவிகுளத்திலும், பீர்மேட்டிலும் வாழும் தமிழர்கள் தங்களிடங்களையும் தாய்த் தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டுமென்று கேட்பதில் குற்றமென்ன இருக்கிறது?

பிரித்து விட மாட்டோமென்று கேரளீயர் சொல்வதில் யாதொரு பொருளுமில்லை. இவர்கள் தங்களுடைய நன்மையைக் கருதிச் சொல்கிறார்களா? தமிழர்களுடைய நன்மையைக் கருதிச் சொல்கிறார்களா? என்று சிந்திக்க வேண்டும். தங்கள் நன்மையைக் கருதி என்றால் அது காலமறியாத பேச்சு; தமிழர்களை என்றென்றும் தம் கீழ் அடிமைகளாக வைத்து நன்மை பெறலாமென்ற வீணாசை.

அதல்லாமல் தமிழர்களின் நன்மையைக் கருதியே சொல்கிறார்களென்றால் அது, ஆடு நனைகிறதென்று ஓநாய் குந்தியழுவதனையே ஒக்கும். இந்தப் பேச்சை எவரும் நம்ப மாட்டார்கள். திருவிதாங்கோட்டுத் தமிழ்நாடின்றிக் கேரளக் கொள்கையை அடியோடு விட்டு விடட்டுமே. தமக்குத் தனி மாகாணம் வேண்டுமென்பதற்காக லட்சாதி லட்சம் தமிழர்களின் நலன்களைப் பலியிட நினைப்பது நீதியா? முறையா? தர்மமா?

இன்று திருவிதாங்கோடு முழுமையும் ஒரே நாடு, ஒரே நாடு என்று சொல்வதெல்லாம் குப்பிக்குள் தண்ணீரும் எண்ணெயும் நிறைத்துக் கார்க்கால் இறுக மூடி ஒன்றெனக் காட்டுவதற்கொப்பே யன்றி வேறல்ல."

திருவிதாங்கூர் தமிழர் போராட்டக்களம் வீறு கொண்ட போது அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் மலையாளிகளுக்கு துணை செய்ததை 'தினமணி' ஏட்டிற்கு அளித்த பேட்டியில் கவிமணி சுட்டிக்காட்டினார்.

"மலையாளத்தில் சிரியன் கிறிஸ்துவர்கள், நாயர்கள், ஈழவர்கள் ஆக மூன்று பிரதான வகுப்பினர். அவர்களுக்குள்ள தர்க்கத்தினால் அவர்களிடையே போட்டி ஏற்படும். ஆனால் தமிழர் விவகாரம் வரும் சமயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள். அவர்களுக்குள்ள பலம், சக்தி, எங்களுக்குண்டா இல்லை. நேருஜி மகாபுத்திசாலி. மகாத்மாவுக்குப் பின்னர் அவர்தான் நாட்டிற்கு தலைவர். ஆங்கிலேயர் ஆட்சி இருந்த காலத்தில் அவர் மருமகள் மாதிரி இருந்தார். இப்போது ஆட்சிப் பொறுப்பு வந்துவிட்டபடியால், மாமியார் மாதிரி பேசுகிறார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மொழி அடிப்படைதான் முக்கியமானது. அது இயற்கையானது. நியாயமானது. தடை சொல்வது பொருந்தாது. நேருஜி மேலிருந்து இமயமலை உச்சியிலிருந்து பிரச்சனையை பார்க்கிறார்".

ஒருமுறை எழுத்தாளர் சுந்தர ராமசாமி தேசிய விநாயகத்தை சந்தித்து உரையாடிய போது, "சரி, தமிழ் ராஜ்யம் ஏற்பட நாம் என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தேசிக விநாயகத்திடம் வந்த பதில்: "என்ன செய்ய வேண்டும்? ஆந்திரர்களைப் பின்பற்ற வேண்டும். மயிலே, மயிலே என்றால் இறகு போடு என்றால் போடுமா?... மெல்ல இழுத்து எடுக்க வேண்டியது தான்!" இதைக்கூறும் போது தேசியவிநாயகத்தின் முகத்திலே சிறு குழந்தையின் கள்ளமும் குறும்பும் நிறைந்த மெல்லிய சிரிப்பு ரேகை காட்டி மறைந்ததாக சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

தேசிக விநாயகம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த நேரத்தில் கேரள பட்டம் தாணுப்பிள்ளை அரசால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதனை நினைத்து அவரின் உடலும் உள்ளமும் வாடியது. 28.8.54இல் தேசிக விநாயகத்தை தமிழ்நாடு பேராயக் கட்சித் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் சந்தித்தார். அப்போது தேசிக விநாயகம் கண்ணீர் விட்டு அழுது நா தழுதழுக்க கூறியது இது தான்: "எங்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து விட்டு மறு காரியம் பாருங்கள்"

இந்த நிகழ்வு நடந்த ஒரு மாத காலத்தில் தேசிக விநாயகம் 26.9.1954இல் தமிழ்மண்ணை விட்டு மறைந்தார். அவரின் கனவு இரண்டு ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.1956இல் நவம்பர் 1ஆம் நாளில் தமிழ்நாட்டோடு திருவிதாங்கூர் தமிழர் பகுதிகள் இணைக்கப்பட்டன.

1954இல் தேசிக விநாயகம் இறப்பதற்கு முன்பு "கலைக்கதிர்" இதழில் எழுதிய கட்டுரையொன்றில், "பள்ளி, கல்லூரிகளில் பயிற்சி மொழியாக தாய்மொழியே விளங்க வேண்டும்" என்றும், "கல்லூரிகளில் ஆங்கிலமொழிந்த பாடங்களைத் தமிழில் கற்பித்தால் என்ன?" என்றும் தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த விருப்பம் மட்டும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது. அது என்று நிறைவேறுமோ?

- கதிர் நிலவன்

நன்றி:
1. தேசிக விநாயகம் பிள்ளை
- தே. வேலம்மாள்
2. அறிஞர்கள் பார்வையில் கவிமணி
- என்.ஏ. வேலாயுதம்
3. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்
- குன்றக்குடி பெரிய பெருமாள்







Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்