தமிழ் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் நாடக உலகின் தந்தை தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள்
“நாடக உலகின் இமயமலை“ என்று என்.எஸ். கலைவாணர் அவர்களால் வர்ணிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை இவரது காலத்துக்கு முன் இவரது காலத்திற்கு பின் என்று பிரித்துப் பார்க்கும் அளவிற்கு தமிழ் நாடகங்களில் இவரது பங்கு அளப்பரியது. தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்டு வருபவர் தான் தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள்.
இவரைப்பற்றி ஒளவை தி.க.சண்முகம் அவர்கள் கூறும்போது, "தென்பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த வெள்ளையத் தேவன் பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப்பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கரதாஸ் சுவாமிகள்." என்பார்.
1867-ம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் துவக்கினார்.
1918-ஆம் ஆண்டு மதுரையில் தான் சங்கரதாஸ் சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற நாடகக் குழுவைத்தோற்றுவித்து அதன் ஆசிரியரானார்.
அக்காலத்தில் நாடகத்தில் நடிக்க, இசையும் பாட்டுத்திறமையும் மிக முக்கியம். அதற்காக புதுக்கோட்டை மான் பூண்டியா பிள்ளையிடம் இசைப் பயிற்சி பெற்றார். இலக்கண இலக்கியங்களை தன் தந்தையிடமே கற்றுக் கொண்ட பிறகுதான் முழு நேர நடிப்பில் ஈடுபட்டார்.
இதனாலேயே இவரது நாடகங்கள் நல்ல மொழி வளங்களோடு இருந்தன. எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோற்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்த சங்கரதாஸ் சுவாமிகள், தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கட்டிப்போட்டார். பார்ப்பவர்களை அசத்தும் திறமை பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பை சுருக்கிக்கொண்டார்.
சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் போன்றவை அவருக்கு புகழ் தந்த நாடகங்கள். இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதிலேயே சங்கரதாஸ் சுவாமிகளின் ஆங்கிலப் புலமையையும் நாம் அறிய முடியும்.
தம் வாழ்க்கையை நாடக கலைக்கே அர்ப்பணித்து வாழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகள், திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாடக மேடைகளுக்கு தன் உழைப்பின் மூலம் பெரும் மரியாதையை ஏற்படுத்திய சங்கரதாஸ் சுவாமிகள், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சுற்றி தனது கலைச் சேவையை செய்தார். விழுப்புரத்தில் ஒரு நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 55.
உடனடியாக வ.சுப்பையா, சங்கரதாஸ் சுவாமிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார். தொடர் சிகிச்சைக்காக இங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. இருப்பினும் விடாது தன்னால் முடிந்த அளவு நாடக கலைக்கு தொண்டு புரிந்த சங்கரதாஸ் சுவாமிகள், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார்.
அக்கலத்தில் தமிழ்த் திரையுலகில் டி.கே.எஸ். சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஒளவை சண்முகம், பகவதி ஆகியோர் மதுரைக்கு வந்து சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களிடம் நாடகப் பயிற்சி பெற்று வந்தனர்.
டி.கே.எஸ்.சகோதரர்கள்தான் சங்கரதாஸ் தவாமிகள் மறைவுக்குப் பின்னரும் அவரின் நாடகங்களை நடத்தி அவரின் புகழை பரப்பி வந்தனர்.
ஒளவை சண்முகம் முயற்சியால் சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா 1967இல் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
மதுரையில் நாடகக் குழுவை தோற்றுவித்த சங்கரதாஸ் சுவாமிகளை நினைவு கூறும் வகையில் ஒளவை சண்முகம் அவர்கள் தமது சொந்த செலவில் 1968ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் திடலின் நுழைவாயிலில் சங்கரதாஸ் சுவாமிகளின் சிலையை நிறுவினார்.
மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்கும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டது.
அது மட்டுமல்ல: மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் சூட்டப்பட்டது.
புதுவையில் இரண்டு வருடங்கள் அவர் தங்கியிருந்த தெருவுக்கு ‘‘சங்கராதாஸ் வீதி‘‘ பெயர் சூட்டப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரால் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரையில் புதுப்பிக்கப்பட்ட மதுரை தமுக்கம் அரங்கத்திற்கு மீண்டும் அவர் பெயர் சூட்டப்படாமல் உள்ளது.
தமிழக அரசு உடனடியாக நாடக உலகிற்கு பெருமை தேடித்தந்த சங்கரதாஸ் சுவாமிகள் பெயரையே மீண்டும் சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும்.
-கதிர்நிலவன்
Comments
Post a Comment