தமிழ்த்தேசிய ஆசான் பெ.மணியரசன் கடந்து வந்த பாதை!
தமிழ்த்தேசிய பேராசான் பெ.மணியரசன் கடந்து வந்த பாதை! -. 1
-----------------------------------------------------------------------------
1.நேர்காணல் : தோழர் பெ. மணியரசன்
உங்களின் அரசியல் பிரவேசம்குறித்துக் கூறுங்கள் ?
மாணவர் பருவத்திலிருந்தே என்னுள் தமிழ்உணர்வு மேலோங்கியிருந்தது. அன்றைய அரசியல் சூழலில் தமிழ்மொழி, இனம், எனப் பேசிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டேன். தி.மு.க.வில் உறுப்பினராகவும் சேர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தேன். தி.மு.க. தலைவர்களின் சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, அக்கட்சியினரால் அன்று நடத்தப்பட்ட பல ஏடுகளைப் படிக்கும் ஆர்வம் ஓங்கியிருந்த காலம் அது. எனது தமிழ் இலக்கிய ஆர்வத்திற்கு அவை ஓரளவுக்கு ஈடு கொடுத்தன. நூலகங்களும் எனது தமிழ் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தன. தூய தமிழ்ச் சொற்களை நான் அறிமுகம் செய்து கொண்டது, பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’ இதழின் வாயிலாகத்தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நூலகங்களுக்கு ‘தென்மொழி’ போன்ற நல்ல தமிழ் ஏடுகள் வந்து கொண்டிருந்தன. என்போன்ற தமிழ் உணர்வாளர்கள் அவற்றை ஆவலுடன் படித்துப் பயன்பெற்றனர். ஆனால் தமிழ், தமிழ் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் ஏறினார்களே, அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் ‘‘தென்மொழி’’ போன்ற தூய தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டன.
எனது மாணவப் பருவத்தில் பாவாணர் அவர்களும், பெருஞ்சித்திரனார் அவர்களும் கலந்து கொண்ட ‘உலகத் தமிழ்க் கழக அமைப்பு’ மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அம்மாநாடு திருச்சி தேவர் மன்றத்தில் 1968ல் நடைபெற்றது. அம்மாநாட்டில் மாணவப் பிரதிநிதியாக எனக்குப் பேச வாய்ப்புக் கொடுத்தார்கள். சி. அறிவுறுவோன், மன்னர்மன்னன் போன்ற தோழர்களும் நானும் சேர்ந்து உலகத் தமிழ்க் கழகக் கிளையைத் திருக்காட்டுப் பள்ளியில் தொடங்கினோம். அக்கழகத்தின் மூலம் எனக்கு பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகிய தமிழ் அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அண்ணாவின் பேச்சு எழுத்து ஆகியவற்றின் மூலமே எனக்கு கம்யூனிசம் என்ற சொல்லும் காரல்மார்க்சு என்ற சொல்லும் அறிமுகமாயின.
இந்தியப் பிரதமர் நேரு “சனநாயக சோசலிசம்” என்று ஒரு கருத்தை வலியுறுத்திய காலம் அது. இதனை மறுத்த அண்ணா, “காகிதப் பூ மணக்காது, காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது’’ எனக் கிண்டலடித்தார். இதற்கு மாற்றாக, தி.மு.க. ‘விஞ்ஞான சோசலிசத்தை’ முன்வைக்கிறது என்று சொன்னார். எனக்குள் விஞ்ஞான சோசலிசம் பற்றிய தேடுதல் தீவிரப்பட்டது. காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நூல்களை என்சிபிஎச் புத்தக நிலையத்தில் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன்.
1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்குக் கேட்டு நான் பணியாற்றினேன். 1969 பிப்ரவரியில் அண்ணா காலமானார். எனக்குப் பெரும் துயரம் ஏற்பட்டது. சென்னைக்குச் சென்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.
அவர் மறைவுக்குப் பிறகு அண்ணாவின் மீதிருந்த பக்தி மெல்ல மெல்ல குறைந்தது. தி.மு.க.வின் கொள்கைகள் சோசலிசத்தை நிறுவக்கூடியவை அல்ல என்ற புரிதல் வளர்ந்தது. அதே வேளையில் கண்ணதாசன் எழுதிய ‘வனவாசம்’ என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஏற்கெனவே தி.மு.க.வின் மீதிருந்த எனது விலகல் மனநிலையை அந்நூல் அதிகப்படுத்தியது.
1964ஆம் ஆண்டிலிருந்து திருக்காட்டுப் பள்ளி அரசு நூலகத்தில் தென்மொழி படித்து வந்ததால் ஏற்பட்ட உணர்வுகளும், 1968லிருந்து உலகத் தமிழ்க் கழகத்துடன் ஏற்பட்ட தொடர்புகளும் தனித்தமிழ், தனித்தமிழ்நாடு என்ற கருத்துகளை என்னுள் வளர்த்திருந்தன. தமிழ்நாடு விடுதலை பெற்றபின் அது ஒரு சோசலிசத் தமிழ்நாடாக விளங்கவேண்டுமென்ற ஆர்வம் இப்போது எழுந்தது. அண்ணா குறிப்பிட்ட விஞ்ஞான சோசலிசத்தின் மூலவரான காரல் மார்க்சு பற்றியும் மார்க்சியம் பற்றியும் கூடுதலாக அறிய முனைந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டு மார்க்சிய நடைமுறைகளை புரட்சிகர செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.
அப்போது மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதி பாசு துணை முதலமைச்சராகவும், பங்களா காங்கிரசைச் சேர்ந்த அஜய் முகர்ஜி என்பவர் முதலமைச்சராகவும் ஆட்சி செய்தார்கள். உள்துறை அமைச்சராக ஜோதி பாசு இருந்தார். அவ்வாட்சியில் சிபிஎம் கட்சி பெரும் நிலக்கிழார்களிடமிருந்து உச்ச வரம்புக்கு மேலுள்ள நிலங்களை எடுத்து உழவர்களுக்குக் கொடுத்தது. நிலக்கிழார்களின் பினாமி நிலங்களை உழவர்கள் அடையாளம் காட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி நிலமற்ற உழவர்களுக்கு அந்தந்த இடத்திலேயே பட்டா கொடுக்கிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்தது.
அரிகிருஷ்ண கோனார் என்ற சிபிஎம் கட்சியின் வருவாய்த்துறை அமைச்சர் இதில் தீவிரமாகச் செயல்படுவதும் ஏடுகளில் வந்தது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தும் கெரோ போராட்டத்தை (முற்றுகை) அந்த ஆட்சி ஆதரித்தது. போராடும் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. துர்காபூரில் என்று நினைக்கிறேன், நடுவண் அரசுத் தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை நோக்கி நடுவண் அரசின் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு தொழிலாளர் இறந்து போனார். அவ்வாறு துப்பாக்கியால் சுட்ட நடுவண் காவல்துறை அதிகாரியை மேற்கு வங்க மாநிலக் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப் போட்டனர்.
இவ்வாறான செயல்களால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் நடத்தியபோது மீண்டும் அந்தக் கூட்டணியே ஆட்சிக்கு வந்தது. ஒரு கட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் அஜய் முகர்ஜி சிபிஎம் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்டித்துத் தலைமைச் செயலகத்தின் முன் அவரே உண்ணாப் போராட்டம் நடத்தினார்.
இவ்வாறான செயல்களெல்லாம் சிபிஎம் கட்சியின் மீது எனக்கு ஈர்ப்பை உண்டாக்கின. அக்கட்சியில் சேர்ந்து கற்றுக் கொண்டு பிறகு தனித் தமிழ்நாட்டிற்கான இயக்கம் உருவாக்கலாம் என்று நினைத்து நானும் மற்றும் திருக்காட்டுப் பள்ளி உலகத் தமிழ்க் கழகத் தோழர்கள் சிலரும் சிபிஎம் கட்சியில் சேர்ந்தோம். கற்றுக் கொள்வதற்கு மட்டும்; என்று போன நான் அக்கட்சியின் நடைமுறை இயக்கங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு முழு மனதோடு அக்கட்சியில் ஐக்கியப்பட்டு அதில் செயல்பட்டேன். சற்றொப்ப 15 ஆண்டுகள் அக்கட்சியில் செயல்பட்டேன்.
லெனின், ஸ்டாலின் வகுத்துத் தந்த தேசிய இனப் பார்வையுடன் அக்கட்சி செயல்படவில்லை என்பதும், காஷ்மீர், பஞ்சாப் போன்ற இடங்களில் தேசிய இன உரிமைப் போராட்டங்கள் நடந்த போதெல்லாம் அவற்றை அக்கட்சி காங்கிரஸ் கட்சியைப் போலவே எதிர்த்ததும், அக்கட்சியின்பால் எனக்கிருந்த பற்றைக் குறைத்தது. ஈழத் தமிழர்கள் 1983 சூலையில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது அக்கட்சி நடந்து கொண்ட முறையானது என் மனதில் அக்கட்சிக்கு எதிரான கொந்தளிப்பை உண்டாக்கியது. ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஏற்கக் கூட அக்கட்சி மறுத்தது. தமிழ்ச் சமூகம் என்று மட்டுமே குறிப்பிடுவார்கள். அத்துடன் தேர்தலுக்குத் தேர்தல் தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஒரு தேர்தல் கட்சியாகவே அது சீரழிந்து போனது எனக்குள் மனப்புழுக்கத்தை உண்டாக்கியது. இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான போராட்டங்களையும் அக்கட்சி எதிர்த்து வந்தது.
நான் சீர்திருத்தத் திருமணங்களில் உரையாற்றும்போது, பிராமணியம் குறித்துப் பேசுவேன். அக்கட்சித் தலைவர்கள் அதைக் கண்டித்தார்கள். ஒரு திருமண விழாவில் தோழர் வி.பி.சிந்தன் வாழ்த்துரை வழங்கிய போது இராசராசசோழனை மிகவும் கொச்சையாகப் பேசினார்.
திருமணம் முடிந்து திரும்பி வரும்போது ஒரு திறனாய்வு என்ற அடிப்படையில் இராசராசசோழனின் நிறைகுறைகளை நீங்கள் பேசலாம். ஆனால் ஒரு திருமண விழாவில் மக்களிடம் பெரு மதிப்புப் பெற்றுள்ள தமிழ் மன்னன் இராசராசன் குறித்து முற்றிலும் எதிர்மறையாகப் பேசியது சரியில்லை என்று சுட்டிக் காட்டினேன்.
அவர் கட்சியின் மாநிலத் தலைமை யிடம் இது குறித்து சொல்லி மணியரசன் பழமைவாதத்தில் இருக்கிறார். மன்னர் களுக்கும் முற்போக்குப் பாத்திரம் உண்டு என்று சொல்கிறார் என்று கூறியிருக்கிறார். கட்சியின் மாநிலத் தலைமையிலிருந்து என்னிடம் பிராமணியம் குறித்தும் இராசராசசோழன் குறித்தும் என் கருத்துகளை எழுதித் தருமாறு கேட்டார்கள். நான் எழுதி அனுப்பினேன்.
வர்ணாசிரம தர்மம், சாதி ஆகியவற்றின் தத்துவ ஆசானாக பிராமணியம் இருப்பது குறித்து எழுதியிருந்தேன். இரசியப் பேரரசன் மகா பீட்டரை லெனின் பாராட்டியதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மகா பீட்டர் சில முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்ததற்காக அவரை லெனின் பாராட்டி எழுதியிருந்தார்.
மாநிலத் தலைமையிலிருந்து தோழர்கள் சங்கரய்யா, பி.ஆர்.பரமேசுவரன், பி.இராமச்சந்திரன், போன்றோர் ஒரு குழுவாக வந்து நான் உறுப்பு வகித்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டச் செயற்குழுவில் என்னுடைய கடிதங்கள் பற்றி விவாதித்தார்கள். என்னுடைய பதிலுக்குப் பிறகு, ‘பிராமணியம் என்பது இந்தியாவில் இல்லை என்று கட்சி முடிவு செய்கிறது. இராசராசன் குறித்த கருத்துகளைப் பரிசீலிக்கலாம்’ என்று “தீர்ப்பு’’ச் சொன்னார்கள்.
தனிக்கட்சி அமைக்கும் நிலைக்கு நீங்களாக முன்வந்தீர்களா? சிபிஎம் கட்சி உங்களை அதை நோக்கித் தள்ளிவிட்டதா ?
இருபோக்கும் ஒரே நேரத்தில் நடந்தது என்று சொல்லலாம். நான் ஏற்கெனவே குறிப்பிட்ட படி சிபிஎம் கட்சி மார்க்சிய லெனினிய அணுகுமுறைப்படி தமிழ்த் தேசிய இன உரிமைகளை வலியுறுத்தவில்லை. சாரத்தில் அது ஒரு தேர்தல் கட்சிதானே தவிர புரட்சிக் கட்சியல்ல என்ற முடிவுக்கு வந்தபின் தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்ட நானும் தோழர் கி.வெங்கட்ராமனும் சிபிஎம்-மை விட்டு வெளியேறி தமிழக அளவில் ஒரு புதிய புரட்சிகர அமைப்பைத் தொடங்குவது என்ற முடிவுக்கு வந்தோம். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலுள்ள தோழர்கள் சிலருடன் இது குறித்து விவாதித்தோம். 1985 சூன் 11, 12 ஆகிய இருநாள்கள் கல்லணையில் ஒத்த கருத்துள்ள நாங்கள் சிலர் இரகசியமாகச் சந்தித்துப் பேசினோம். தோழர்கள் தணிகைச்செல்வன், இராசேந்திரச்சோழன், தஞ்சை க. பழனிமாணிக்கம், த.கா. பரமசிவம், மா.கோ. தேவராசன் (சிதம்பரம்), புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட இன்னும் சிலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நான் எழுதிய “இந்தியாவில் தேசிய இனங்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையை ஓர் ஆவணமாக வைத்து 11.06.1985 அன்று விவாதித்தோம். 12.6.1985 அன்று ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஓம்கார் எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் சிபிஎம் கட்சியிலிருந்து வெளியேறி அங்கு தனிக்கட்சி நடத்திக் கொண்டிருந்தார். அவருடைய கருத்துகளை அறிந்து கொள்வதற்காக அவரை அழைத்திருந்தோம்.
இவ்விருநாள்களும் விவாதித்த கருத்துகளின் அடிப்படையில் அப்பொழுது சேலத்தில் நடக்க இருந்த சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டில் விவாதிப்பது என்றும் அது தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அம்மாநாட்டிலிருந்தே வெளியேறி தனிக் கட்சி தொடங்குவது என்றும் முடிவு செய்தோம்.
கல்லணையில் நாங்கள் நடத்திய இரகசியக் கூட்டம் கட்சித் தலைமைக்குத் தெரிந்து எங்களை விசாரித்தார்கள். கூட்டம் நடத்தியதை நாங்கள் ஏற்றுக் கொண்டு கட்சியைத் திருத்தும் ஒரு முயற்சிதான் என்று வாதிட்டோம். எங்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். நாங்களும் வெளியேறித் தனிக்கட்சி தொடங்க முயற்சிகள் எடுத்தோம். 1985 சூன் 29,30 ஆகிய நாள்களில் சிதம்பரத்தில் கூடி எம்சிபி (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினோம். அதன் அமைப்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.
சிபிஎம் தலைமையிலிருந்து வெளியேறி எம்சிபிஐ என்ற பெயரில் பீகாரைச் சேர்ந்த தோழர் ஸ்ரீவஸ்த்தவா தலைமையில் ஓர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அவர்களோடு இணைந்தோம். அவர்களும் சிபிஎம் கட்சியின் மறு பதிப்பாகவே விளங்கினார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தார்கள். தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை ஏற்க மறுத்தார்கள். 1990இல் எம்சிபிஐ லிருந்து வெளியேற முடிவு செய்தோம். அதன் தொடக்கமாக 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் பெரியார் திடலில் “தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு” நடத்தினோம். கட்சியின் மாநாடாக இல்லாமல் அதைப் பொதுநிலையில் நடத்தினோம். பேராசிரியர் சுப.வீர. பாண்டியன் அம்மாநாட்டிற்குப் பெருந்தொண்டாற்றினார்.
நீங்கள் எம்சிபிஐலிருந்து விலகமுடிவெடுத்ததற்கும் இம்மாநாடு நடத்தியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது ?
இந்திய தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற எங்கள் அமைப்பின் வெளிப்பாடாக இம்மாநாடு அமைந்தது. இதில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to setede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த் தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மாநாட்டுத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தேன். ஒரு மனதாக அது ஏற்கப்பட்டது.
இம்மாநாடு எம்சிபிஐ தலைமைக்கு எட்டியதோ இல்லையோ தமிழ்நாட்டில் பல அதிர்வுகளை உண்டாக்கியது. ‘இலக்கு பிரிவினை, வழி வன்முறை’ என்ற தலைப்பில் துக்ளக் ஏடு மூன்று பக்கங்களுக்கு மேல் கட்டுரை எழுதி தி.மு.க. ஆட்சி இம்மாநாட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் மறைமுகமாகப் பிரிவினையைத் தூண்டியுள்ளது என்று குறிப்பிட்டது.
அம்மாநாட்டில் கலந்து கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையனார், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பேச்சுகளையும் எனது தலைமை உரையையும் சிற்சில பகுதிகள் அவ்விதழில் வெளியிட்டிருந்தது. அப்பொழுது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த தமிழ்க்குடிமகன் மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதைச் சுட்டிக் காட்டி இம்மாநாட்டுக்குத் தி.மு.க.வின் ஆதரவு இருந்தது என்று துக்ளக் ஏடு சான்று கூறியிருந்தது. உண்மையில் தி.மு.க.வுக்கும் நாங்கள் நடத்திய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இம்மாநாட்டில் அப்பொழுது தூர்தர்சன் செய்தி வாசிப்பாளராக இருந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை படித்தார். மாநாடு நடந்த காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போவதற்காக அஜர்பைஜான் குடியரசு போராடிக் கொண்டிருந்தது. தமது கவிதையில் அதைச் சுட்டிக் காட்டிய தமிழன்பன் தமிழர்களுக்கு உரிமை வழங்கவில்லை என்றால் ‘அஜர்பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்’ என்று கூறி கவிதையை முடித்தார். இச்சொற்றொடரை எடுத்துப் போட்டு துக்ளக் சாடியது. தூர்தர்சன் செய்தி வாசிப்பிலிருந்து பின்னர் ஈரோடு தமிழன்பன் நீக்கப்பட்டார்.
அம்மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர் அறிவுமதியின் கவிதையின் ஒரு பகுதியைத் துக்ளக் எடுத்துப் போட்டு நடவடிக்கை கோரி அடையாளம் காட்டியது. அந்தப் பகுதி இதுதான் :
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில்
நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம்.
விடிந்து பார்க்கும்பொழுது
எங்கள் கோவணங்களைக் காணவில்லை.
எங்கள் மேலே ஒரு போர்வை போர்த்தியிருந்தார்கள்
அது இந்திய தேசியம் என்றார்கள்.
கோவணங்கள் எங்கே என்று கேட்டோம்?
அதுதான் தேசியக் கொடியாய்ப் பறக்கிறது என்றார்கள்.
தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம்
விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம்.
வாருங்கள் அந்தக் கொடியை இறக்கிக் கிழித்து
அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்.
இந்தக் கவிதைக்காக அரசுக் கொடி அவமதிப்பு வழக்குப் போடப்பட்டு அறிவுமதி 8 ஆண்டுகள் எழும்பூர் நீதி மன்றத்துக்கு அலைந்தார். கடைசியில் வழக்கு விடுதலையானது.
பிரிவினை மாநாட்டை தி.மு.க. ஆதரித்தது என்றும் அதன் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது பா.ச.க. அனைத்திந்தியத் தலைவராக இருந்த முரளிமனோகர் ஜோசி செய்தியாளர் களிடம் கூறியிருந்தார். சிபிஎம் கட்சி, பிரிவினைவாத மாநாட்டை தி.மு.க. ஆதரித்தது மட்டுமல்ல, ‘கொடுமை என்னவென்றால் அம்மாநாட்டிற்கு சபாநாயகரே வாழ்த்துச்செய்தி அனுப்பினார்’ என்று தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனப் பரப்புரை செய்தது.
மேலே சொன்ன தீர்மானத்தை முன்மொழிந்ததற்காக என்னை 1990 திசம்பர் 25ஆம் நாள் சிதம்பரத்தில் வைத்துத் தளைப்படுத்திச் சென்னை நடுவண் சிறையில் அடைத்தார்கள். பின்னர் பிணையில் வெளிவந்தேன். 8 ஆண்டுகள் வழக்கு நடந்தது. வழக்கறிஞர் சி.விசயகுமார், தஞ்சை அ. இராமமூர்த்தி ஆகியோர் கட்டணமின்றி வழக்கு நடத்தினார்கள். தீர்மானம் நிறைவேற்றியதை நாங்கள் மறுக்கவில்லை. அது சனநாயக உரிமை என்ற கோணத்தில் வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள். இறுதியில் வழக்கு விடுதலையானது.
அப்போதிருந்து தமிழ்த் தேசியத்தை மேலும் மேலும் கூர்மைப்படுத்தி வளர்த்து வருவதுடன் தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதற்கான போராட்டத்தையும் கூர்மைப்படுத்தி வருகிறோம். அம்மாநாட்டிற்குப் பிறகு எம்சிபிஐ உறவைத் துண்டித்துக் கொண்டோம். கட்சியின் பெயரை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்று 1991ல் மாற்றினோம்.
திராவிட நாடு கோரிக்கைக்கும், தமிழ்த்தேசியம் என்று நீங்கள் கூறுவதற்கும் ஒன்றும் வேறுபாடு தெரியவில்லையே ?
திராவிட நாடு கோரிக்கைக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் இணைய முடியாத முரண்பாடுகள்தான் இரண்டிற்கும் இடையே நிலவுகின்றன. திராவிடம் என்ற பெயரில் சமூக அறிவியல் வரையறுப்பின்படி ஒரு மரபு இனமோ அல்லது ஒரு தேசிய இனமோ இல்லை. திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழியும் இல்லை. சிந்துச் சமவெளிக் காலத்தில் அங்கு நுழைந்த ஆரியர்கள் தமிழர்களுக்கு இட்ட திரிபான பெயரே திராவிடம் என்பது. தமிழர் என்பதை உச்சரிக்கத் தெரியாமல் ‘த்ரமிள’ என்றும் ‘திராவிட’ என்றும் அயல் இனத்தவரான ஆரியர்கள் உச்சரித்தனர். தமிழர்கள் தங்களை ஒரு போதும் திராவிடர் என்று சொல்லிக் கொண்டதில்லை. சங்க இலக்கியங்களிலோ, காப்பிய இலக்கியங்களிலோ, பக்திக் கால இலக்கியங்களிலோ, சித்தர் இலக்கியங்களிலோ தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று கூறிக் கொண்டதே இல்லை. அதே போல் இங்குள்ள திராவிட இயக்கங்கள் தவறாகச் சொல்லுகின்ற திராவிடர் என்ற இனப்பெயரைத் தெலுங்கர்களோ, கன்னடர்களோ, மலையாளிகளோ தங்களுக்குச் சூட்டிக் கொள்ளவும் இல்லை. நாங்கள் கூறும் தமிழ்த் தேசியம் இட்டுக் கட்டப்பட்ட இந்தியத் தேசியத்தை மறுப்பதைப் போலவே திரிபுவாதிகள் கூறும் திராவிட தேசியத்தையும் எதிர்க்கிறது.
5.திராவிடம், திராவிடர் என்ற கருத்தியல்தானே தமிழ்நாட்டில் இன்றும் பெரும் செல்வாக்குடன் இருக்கிறது? ஏன் தமிழ்த் தேசியத்திற்கு அந்த அளவுக்குச் செல்வாக்கு இல்லை ?
அசல் வெள்ளியை வெள்ளி என்கிறோம். வெள்ளி போல் தோற்றம் தரும் இரும்பை “எப்பொழுதும் வெள்ளி” (எவர்சில்வர்) என்கிறோம். போலிக்குத் தனிக் கவர்ச்சி உண்டு. தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் இயக்கம் நடத்தியவர்கள் ஆரியத்திற்கு எதிராகவும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராகவும்; போராட்டங்கள் நடத்தியதால், கருத்துகள் வழங்கியதால் தமிழர்கள் அதில் முகாமையான கவனத்தைக் குவித்து தங்களின் அசலான இனப் பெயர் மறைக்கப்படுவது பற்றிப் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
தமிழ்த் தேசியம் என்பதும் இப்பொழுதுதான் முன்னுக்குப் பின் முரணில்லாமல் சமூக அறிவியல் வரையறுப்பின்படி வடிக்கப்பட்டுள்ளது.
எமது தேசிய மொழி தமிழ்,
எமது தேசிய இனம் தமிழர்,
எமது தேசம் தமிழ்த் தேசம்,
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு
அமைப்பது எமது இலக்கு என்பதே தமிழ்த் தேசியம் ஆகும்
என்று த.தே.பொ.க வரையறுத்துள்ளது.
இதில் ஒன்று குறைந்தாலும் அது தமிழ்த் தேசியம் ஆகாது. இந்த அடிப்படையில் கருத்தியல்களும் களப் போராட்டங்களும் வளரவளரத் தமிழ்த் தேசியமும் வளரும்.
தமிழ் உணர்வு கொண்ட பல்வேறு அமைப்புகள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புவதற்கான மையப் புள்ளி எதுவும் இல்லாதபோது, உங்களின் தனித்த குரல் என்ன சாதிக்க முடியும் ?
வெறும் தமிழ் உணர்வு மட்டும் போதாது. இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டோ அல்லது திராவிடத் தேசியத்தை ஏற்றுக் கொண்டோ ஓர் அமைப்பு தமிழ்த் தேசிய அமைப்பாக இருக்க முடியாது. பொத்தாம் பொதுவாகத் தமிழின் பெருமை, தமிழனின் பெருமை போன்றவற்றைப் பேசுவதும், சில்லறை உரிமைகள் சிலவற்றைக் கோருவதும் தமிழ்த் தேசியமாகாது. நான் மேலே சொன்ன வரையறுப்பின்படி உள்ளதுதான் தமிழ்த் தேசியம்.
தமிழ்த் தேசியத்தின் சாரம் தமிழ்நாடு விடுதலை ஆகும். இந்த அடிப்படையில் செயல்படுபவைதாம் தமிழ்த் தேசிய அமைப்புகளாகக் கருதத்தக்கவை.
தமிழ்த் தேசியம் என்றகருத்தியலின் மீது தலித்துகள்அச்சம் கொண்டுள்ளது பற்றிஉங்கள் கருத்து
என்ன ?
தலித் மக்களிடையே இப்படி ஓர் அச்சம் இருப்பதாகக் கூறுவது சரியன்று. எங்கள் அமைப்பிலும் வேறு சில அமைப்புகளிலும் உறுப்பினர்களாகவும், உயர் பொறுப்பாளர்களாகவும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளில் பிறந்த தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
தலித்தியம் என்று ஒரு தத்துவத்தை உருவாக்க முயலும் உதிரியாக உள்ள தனிநபர்கள்தான் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துகளைக் கிளப்பி விடுகிறார்கள்.
அவர்கள்தான் தமிழ்த் தேசியத்தை அவ்வப்போது கொச்சைப்படுத்துகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், தாங்கள் தமிழர்கள்தான் என்று இன உணர்வு பெற்றுவிடக் கூடாது என்பது தலித்தியம் பேசும் உதிரித் திரிபுவாதிகளின் நோக்கமாக உள்ளது. அவர்கள் தமிழ்த் தேசியத்தைக் கண்டு பீதியடைகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை என்பது தமிழக விடுதலையோடு ஒன்றிணைந்த ஒன்றாகும். வர்ண சாதி ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பார்ப்பனியத்தின் கொலுபீடம் தில்லி. இந்தியத் தேசியம் பேசக் கூடிய ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்தில் கால் பதித்திருக்கிறார். இந்தியத் தேசியத்தை எதிர்க்கும் தமிழ்த் தேசியம் பார்ப்பனியத்தையும் வர்ணசாதியையும் எதிர்க்கிறது.
தமிழர் அறம் என்பது பிறப்பொக்கும் அனைத்து உயிரும் சமம் என்பதாகும்.
தமிழர்களிடையே பிற்காலத்தில் புகுந்த வர்ணசாதி ஆதிக்கம், தீண்டாமை போன்ற கொடுமைகளைத் தமிழ்த் தேசிய எழுச்சி எரித்து விடும்.
நன்றி : கருக்கல்
வெளிவந்த இதழ் : கருக்கல் மார்ச் - ஏப்ரல் 2012
Comments
Post a Comment