பெரியார் ஆந்திரர்களை பித்தலாட்ட கருங்காலிகள் என்பாரா?
===============================
அண்மையில் சென்னை கோகலே ஹாலில் திரு.சி.டி.டி.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழர் ராஜீயம் என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள் என்று பெரியார் அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறார். இது ஏற்கெனவே பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.
'இப்போது தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று எழுதியும், பேசியும் வருகிறார்கள். ஆகவே, வேண்டுமென்றே திட்டம் போட்டு வைய முன்வந்திருக்கிறதாக நன்கு விளங்குகிறது.
இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு என்று கூறக் கூடாதென்றும் திராவிடம், திராவிடர், திராவிடநாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென்று அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது, தமிழ்நாட்டின் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னட மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும் நாட்டையையுமே கூறிவரும் போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும், நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.
அவ்விதமிருந்தாலும் மாறுபட்ட கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள் கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா? என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா? என்பதைப் பொது மக்களே கருதிப்பார்க்க வேண்டும்.
ஆந்திரநாட்டுக்குச் சென்று ஆந்திரர், ஆந்திரநாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்கிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா? இனியேனூம் சொல்லுவாரா?
கேரள நாட்டுக்குச் சென்று கேரளர், கேரள நாடு என்று சொல்லுபவர்களிடம், அவ்வாறு சொல்லுகிறவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லிருக்கிறாரா?
கன்னடிய நாட்டுக்குச் சென்று கன்னடியர், கன்னட நாடு என்று சொல்லுபவர்களிடம் அவ்வாறு சொல்லுபவர்கள் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று இதுவரை சொல்லியிருக்கிறாரா? இனியேனும் சொல்லுவாரா? இதுவரை சொல்லவில்லையென்றால் தமிழர், தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களை மட்டும் பித்தலாட்டக் கருங்காலிகள் என்று சொல்லுவானேன்?
பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று சும்மா கூறி விடுவது மட்டும் போதாது. காரணம் காட்டி கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாதது அவருடைய ஆத்திரத்தை காட்டுகிறதே தவிர உண்மையை காட்டுவதாக அறிவாளிகளால் ஒப்ப முடியாது.
நம்மைப் பொறுத்த வரையில் பெரியாரின் தன்மைக்கு இச்சொற்கள் ஏற்றதல்ல என்றே கூறுவோம். இப்போது கூறியதை அவர் திரும்பப் பெற வேண்டும். இன்றேல் தாம் கூறியதைக் காரணம் காட்டி மெய்ப்பிக்க வேண்டும். இதுவே தமிழர், தமிழரசு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறுகிற பித்தலாட்டக் கருங்காலிகளின் கோரிக்கையாகும்.
(தமிழர்நாடு 25.1.1948.)
(திருச்சியைச் சார்ந்த முத்தமிழறிஞர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்திலும், நீதிக்கட்சியிலும் பணியாற்றியவர். 1944இல் நீதிக்கட்சி 'திராவிடர்க் கழகம்' என்று பெயர் மாற்றுவதை எதிர்த்தார். 'தமிழர்கழகம்' என்று பெயர் சூட்ட பெரியார் மறுத்த காரணத்தால் அதிலிருந்து வெளியேறினார்.
தமிழர்கழகம் எனும் இயக்கத்தை நிறுவி தமிழர்நாடு இதழை நடத்தி வந்தார். பெரியார் 'திராவிட நாடு' கேட்டு போராடியதை ம.பொ.சி.யின் 'தமிழரசு கழகமும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் தமிழர் கழகமும் கடுமையாக எதிர்த்து வந்தன.
அப்போது ஆத்திரப்பட்டு பெரியார் பேசினார். அதைக் கண்டித்து கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 'தமிழர்நாடு' ஏட்டில் எழுதியது தான் மேற்கண்ட கட்டுரையாகும்.)
- கதிர் நிலவன்
Tamilthesiyan.wordpress.com
Comments
Post a Comment