பாவாணர் புதைத்த திராவிடத்தாயை தோண்டியெடுக்கும் திராவிடர்கள்!
பாவாணர் புதைத்த திராவிடத்தாயை தோண்டியெடுக்கும் திராவிடர்கள்!
=================================
கால்டுவெல் கற்பித்த திராவிடத்தை வைத்து கம்பு சுத்தி வந்தனர் திராவிடர்கள். அது முருங்கை கம்பு என்பதால் உடைந்து போய் விட்டது.
தற்போது திராவிடர்களுக்கு கிடைத்த அடுத்த கம்பு தான் தேவநேயப் பாவாணர் எழுதிய திராவிடத் தாய். இதுவும் முருங்கை கம்பு தான் என்ற உண்மையை கூற விரும்புகிறோம்.
இந்த நூலிலே தமிழ் தான் திராவிடமாக திரிந்தது என்று சொல்லி இருப்பார். இதை வைத்துக் கொண்டு தமிழ் என்றாலும் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ்தான் என்று கால்டுவெல்லை விட்டு விட்டு பாவாணர் பக்கம் தற்போது பாடத் தொடங்கியுள்ளனர்.
பாவாணர் திராவிடத்தாயை எழுதிய ஆண்டு 1944. பாவாணரே பிற்காலத்தில் அக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்.
தமிழிலிருந்து பிரிந்து ஆரியமாகிப் போன மொழிகள்தான் திராவிட மொழிகள். எனவே, ஆரியத்தை நீங்கிய தமிழை ஒரு போதும் திராவிடம் என்று குறிக்கலாகாது என்றார்.
திராவிடம், திராவிடர், திராவிட நாடு சொற்கள் நீங்கி தமிழ், தமிழர், தமிழ்நாடு சொற்களே ஒலிக்க வேண்டும் என்று கட்டுரையே எழுதியுள்ளார்.
பாவாணரே திராவிடத் தாயை மண்ணுக்குள் புதைத்து விட்டார். தற்போது செத்துப் போன திராவிடத் தாயை தோண்டி எடுத்து உயிரூட்டும் முயற்சியை திராவிடர்கள் செய்து வருகிறார்கள்.
பாவாணர் எழுதிய தமிழியற் கட்டுரைகள் தொகுப்பு நூல் வந்துள்ளது. அதைப் படித்தாவது திராவிடர்கள் திருந்த முன் வர வேண்டும்.
பாவாணர் எழுதிய கட்டுரையின் தலைப்பே "திராவிடம் தீது" என்பதுதான்.
'திரவிடம்' என்பதே தீது!
=======================
நாடுகளெல்லாம் பெரும்பாலும் மொழியடிப்படையிலேயே அமைந்திருப்பதனாலும், அதன் வழியாகவே முன்னேறுவதாலும், தமிழர் யாவரும் தமிழ்ப்பற்றுக் கொண்டிருத்தல் வேண்டும்.
எந்நாட்டாராயினும், தமிழ்ப்பற்றுடையார் தமிழரே. இந்நாட்டாராயினும் அஃதில்லார் அயலாரே.
தமிழ்ப் பெயரே தாங்குதலும், இயன்றவரை தூயதமிழிற் பேசுதலும், எழுதுதலும், திருமணமும், சடங்குகளும் கோயில் வழிபாடும் தமிழிலேயே நடப்பித்தலும், மக்கள் உலகத்தில் 'தேவமொழி'யில்லை யென நம்புதலும், இந்திக் கட்டாயக் கல்வியைத் தமிழ் நாட்டில் அடியோடொழித்தலும், தமிழ் நாட்டிற்குத் தமிழ் நாடென்ற பெயரிடுதலும், தமிழன் என்பதற்கு அடையாளமாம். தமிழிற்கு இடைக் காலத்தில் நேர்ந்த இழிவினால் பல தென் சொற்கள் வழக்கற்றுப் போயின. அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டு வருதல் வேண்டும்.
கால்டுவெல் கண்காணியார் முதன் முறையாகத் திராவிட மொழி களை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மை யாலும், தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லா திருந்தது. இக்காலத்திலோ, ஆராய்ச்சிமிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழி யாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும், தமிழென்றும், பிறஇனமொழிகளையே திரவிடம் என்றும் வேறு படுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம்.
தமிழ் தூய்மையான தென் மொழியென்றும், திரவிடம் ஆரியங் கலந்த தென் மொழியென்றும் வேறு பாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாதது போல் வடமொழி கலந்து ஆரிய வண்ணமாய்ப் போன திரவிடம் மீண்டும் தமிழாகாது.
வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்: தமிழ் தாழும். ஆதலால், வட சொல் சேரச் சேரத் திரவிடத்திற்கு உயர்வு: அது தீரத்தீரத் தமிழிற்கு உயர்வு, திரவிடம் என்ற மொழி நிலையே வடமொழிக் கலப்பால் தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும்: திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.
இங்ஙனம், வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும் பகையாகக் கொள்ளும் தமிழிற்கும். ஒரு சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது ஆதலால் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றித் திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.
திரவிடம் அரையாரியமும் முக்காலாரியமுமாதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் கெட்டுப்போம் பின்பு தமிழுமிராது. தமிழனுமிரான். இந்தியா முழுதும் ஆரியமாய் விடும்.
தமிழ், திரவிடமொழிகளைப்போல ஆரியச் சார்பு கொள்ளாமையாலும், வட மொழியையும் இந்தியையும் ஏற்காததாலும், தமிழ் நாட்டிற்கு மொழியியல் தன்னாட்சி (Lingusitic Autonomy பெறுதல் வேண்டும். போக்குவரத்து, தற்காப்பு, வெளிநாட்டுறவு ஆகிய முத்துறையிலும், இந்தியக் கூட்டரசு அடங்கியிருக்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னுங் கொள்கையை விட்டு விட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்ற கொள்கையைக் கடைப்பிடித்தும், தமக்குத் தாமே முட்டுக்கட்டையிட்டுக் கொண்டன. இவை நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை.
தமிழ் என்னுஞ் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும், திராவிடம் என்னுஞ் சொல்லில் இல்லை. திராவிடம் பனிமலை (இமயம்) வரை பரவுயுள்ளது.
தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு. திராவிடம் வேறு. தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது. பாலையும் தயிரையும் கலப்பது போன்றதே.
தமிழ்நாடு பிரிந்தபின், குறைந்த பட்சம் தென்னாட்டுத் திரவிட ரெல்லாம் தமிழரொடு கூடி மிகப் பரந்த புலணங்களில் (விஷயங்களில்) ஒரு கூட்டொப்பந்தம் செய்யும்போதே திமு.க. சொல்லும் திரவிடம் தோன்றும். அதற்கு இன்று தமிழர் மட்டுமே முயல்வது. வானத்து மீனுக்கு வன்றூண்டிலிட்ட கதையே யாம்.
இதுகாறுங் கூறியவற்றால், உண்மை நிலையை உள்ளவாறுணர்ந்து. நடைமுறைக் கொவ்வாத வீண் கொள்கைகளையும் வீறாப்புக்களையும் விட்டுவிட்டு, எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றி பெறுதற் பொருட்டு, பொதுநலத்தை முன்வைத்து ஒற்றுமையாகப் போராடி, முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க!
( பாவாணர் எழுதிய
'தமிழ்' இதழில் வெளியான கட்டுரையிலிருந்து)
திராவிடத்தாய் தமிழர்களின் தாயுமல்ல, குருதியும் அல்ல!
தமிழ்த் தாயே , தமிழர்களின் தாயும் குருதியுமாகும்! இல்லாத திராவிடத்தாயை போற்றுவது மடமையாகும்.
Comments
Post a Comment