கவிமணி தேசிக விநாயகம் பிறந்த நாள் 27.7.1876
'கட்டுரை குமரி நாட்டுப் பெருங் கவிஞர் "கவிமணி'" தேசிக விநாயகம் "உள்ளத்துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை" கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு மேற்படி கவிதையை கவிதை நடையிலேயே அழகாகச் சொன்னவர் " கவிமணி" தேசிக விநாயகம் ஆவார். இவரைக் குழந்தைக் கவிஞர் என்றே பலரும் அறிமுகப் படுத்துகின்றனர். இது ஒருமுகப் பார்வையாகும். கூர்ந்த மதிநுட்பத்தோடு சிந்திக்கும் ஆற்றல் கைவரப் பெற்ற இவர் தமிழுலகுக்கு பல அரிய படைப்புகளை தந்து விட்டுச் சென்றுள்ளார். இனி இவரின் வரலாற்றைக் காண்போம். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் சுசீந்தரம் வடக்கே உள்ள தேரூர் எனும் சிற்றூரில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலெட்சுமி இணையருக்கு மகனாக 27.7. 1876ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தையார் தமது குடும்ப வழக்கப்படி தமது பாட்டனார் பெயரான தேசிக விநாயகம் பெயரைச் சூட்டினார். இவரின் தந்தையார் அரசுப் பணியாளராகப் கோட்டாற்றில் பணியாற்றி வந்தார். அக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் ப...