தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் உலகின் நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாள் 13.11.1922 நம் தமிழ் மொழியானது 'முத்தமிழ்' என்று அழைக்கப்படும் பெருமையுடையது. அவை இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்பனவாகும். தொல்காப்பியர் காலத்திலேயே நாடகம் குறித்து பேசப்பட்டுள்ளது. "நாடக வழக்கிலும், உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" (தொல்: பொருள் - அகத்-53) உலகியலை ஒட்டிச் சுவைபடக் காட்டும் நாடக வகை மரபுகளோடும், உலக மரபுகளோடும் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம் என்பதே இதன் பொருளாகும். சங்ககாலத்தை அடுத்து வந்த சிலப்பதிகாரம் நூல் முத்தமிழ் காப்பியம் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. அது நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது. 17,19ஆம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறம், குறவஞ்சி, நொண்டி , கீர்த்தனை, மேலை மரபு , மரபுவழி மேடை நாடகம் போன்ற நாடக வகைகள் தோன்றின. இருப்பினும், சங்ககால , பிற்கால மூவேந்தர் ஆட்சிகளுக்குப் பிறகு ஏற்பட்ட விஜயநகர, ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் தெலுங்கு மொழியும், ஆங்கில மொழியும் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இசையரங்குகளில் தெலுங்கு ம...