சென்னை யாருக்கு சொந்தம்?
தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஶ்ரீராமுலு என்னும் ஆந்திரர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ம.பொ.சி. போயிருந்தார். அந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு "எனது போராட்டம்" என்னும் நூலில் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார். "அந்த வீரத் தியாகி என்னைக் கண்டதும் கைகூப்பி வணங்கி வரவேற்றார். அப்போது அங்கு ஆந்திர கேசரி பிரகாசம் அவர்களும் இருந்தார். அப்பெரியவர் பொட்டியின் உயிரைக் காப்பாற்ற நான் உதவி புரிய வேண்டும் என்றார். அதற்கு நான், " சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு, ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும் " என்றேன். பிரகாசம் சிறிது சினங் கொண்டவராகி , " தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு தாலுகாவின் தலைநகரும் மாநிலத் தலைநகராக இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. ஈரோட்டின் நிலையிலுள்ள ஒரு நகரம் கூட ஆந்திராவில் இல்லை. இந்த நிலையில் சென்னை இல்லாத ஆந்திராவைக் கொடுத்தால் தலைநகருக்கு நாங்கள் எங்கே போவது என்று படபடப்புடன் பேசினார். அவருடன் விவாதம் நடத்த விரும்பாமல் "ஆந்திரத்திற்குத் தலைநகர் கொடு...