தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகள்

தமிழ் உலகின் நாடகத் தந்தை 
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்
நினைவு நாள்

13.11.1922

நம் தமிழ் மொழியானது 'முத்தமிழ்' என்று அழைக்கப்படும் பெருமையுடையது. அவை இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்பனவாகும்.

தொல்காப்பியர் காலத்திலேயே நாடகம் குறித்து பேசப்பட்டுள்ளது.
"நாடக வழக்கிலும், உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்" (தொல்: பொருள் - அகத்-53)

உலகியலை ஒட்டிச் சுவைபடக் காட்டும் நாடக வகை மரபுகளோடும், உலக மரபுகளோடும் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம் என்பதே இதன் பொருளாகும்.

சங்ககாலத்தை அடுத்து வந்த  சிலப்பதிகாரம் நூல் முத்தமிழ் காப்பியம் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. அது நாடகக் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.

17,19ஆம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறம், குறவஞ்சி, நொண்டி , கீர்த்தனை, மேலை மரபு , மரபுவழி மேடை நாடகம் போன்ற நாடக வகைகள் தோன்றின.

இருப்பினும்,  சங்ககால , பிற்கால மூவேந்தர் ஆட்சிகளுக்குப் பிறகு ஏற்பட்ட விஜயநகர, ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களில் தெலுங்கு மொழியும், ஆங்கில மொழியும் தமிழ் நாடகக்கலை வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது.

இசையரங்குகளில் தெலுங்கு மொழிப் பாடல்களின் ஆதிக்கம் ஒருபுறம்; தமிழர்களிடத்தில் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது உயர்வென்று  கருதும் மனப்போக்கு மறுபுறம் ; என்று இருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நிறைவுக் காலத்திலே தோன்றி  மரபுவழி மேடை நாடகம் மூலம் தமிழ்மொழியை காப்பாற்றியவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார்.

இவரைப்பற்றி ஒளவை தி.க.சண்முகம் அவர்கள் கூறும்போது, "தென்பாண்டி நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியிலே, வெள்ளையரை விரட்டியடித்த வெள்ளையத் தேவன் பரம்பரையிலே போரில் புறமுதுகு காட்டாத வீர மறக்குடியிலே தாமோதரக் கணக்கப்பிள்ளை என்பாரின் செல்வத் திருமகனாகப் பிறந்தார் சங்கரதாஸ் சுவாமிகள்." என்பார்.

தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டு நாயக்கன் பட்டி சிற்றூரில் 7.9.1867ஆம் ஆண்டு பிறந்த இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சங்கரன் என்பதாகும்.

இவரின் தந்தையார் இராமநாதபுரம் செம்பியன் நாட்டுப்பகுதியிலிருந்து தூத்துக்குடிக்கு இடம் பெயர்ந்தவர். அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று  இராமாயண இசைப்பாடல்களைப் பாடியதால் மக்கள் இவரை இராமாயணப் புலவர் என்று  அழைத்தனர்.

இவர் தமிழிலும் சிறந்த புலமை பெற்று விளங்கியதால் தமது தந்தையாரிடமே சங்கரன் தமிழ்க் கல்வியை  முதலில் கற்கத் தொடங்கினார்.

பின்னர், புலவரேறு பழனி தண்டபாணி அடிகளாரிடம் சென்று தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆர்வத்தோடு பயின்றார். மேலும், வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களான வண்ணம். சந்தம் ஆகியவற்றைப் பாடும் திறனை வளர்த்துக்கொண்டார்.

பிற்காலத்தில் தமக்கு குருவான தண்டபாணி அடிகளாரை மனதில் வைத்து பழனி தண்டபாணிப் பதிகம் என்னும் தலைப்பில் பழனி முருகனுக்கு பதிகம் பாடினார் சங்கரதாஸ் சுவாமிகள். அவற்றுள் ஒரு பாடல்தான் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்னும் புகழ்பெற்ற பாடல் என்பது குறிப்பிடக்தக்கது.

மீண்டும் சங்கரதாசர் தூத்துக்குடிக்கு வந்து ஒரு உப்புப் பண்டகசாலையில் சிறிதுகாலம் கணக்கராகப் பணியாற்றினார். பின்னர் 1891 ஆம் ஆண்டு தமது 24 ஆவது அகவையில் நாடகத்துறையில் முழுமையாக ஈடுபட்டார்.

அப்போது நாடக நடிகர்களாக இருந்த ராமுடு ஐயரும், கல்யாண இராம ஐயரும் தமது நாடக சபைக்கு சங்கரதாசரை அழைத்து வந்தனர்.

அங்கு  முதன் முதலில் சங்கரதாசர் நாடக நடிகராக வேடம் ஏற்றார். இரணியன், இராவணன், எமதருமன், சனீஸ்வரன், கடோற்கஜன் போன்ற வேடங்களையே ஏற்று நடித்து வந்தார்.

சங்கரதாசர் நாடக நடிகராக இருந்த போது நடந்த இரண்டு நிகழ்ச்சிகள் மறக்க முடியாத நிகழ்வாக  அவர் வாழ்க்கையில் அமைந்தது.

சங்கரதாசர் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமனாக நடித்தபொழுது அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு கர்ப்பம் கலைந்தது.

அது போலவே, இவர் நளதமயந்தி நாடகத்தில் சனிபகவான் வேடம் தாங்கி நடித்தார். விடியும் வரை நாடகத்தில் நடித்துவிட்டு விடியற்காலையில் வேடத்தைக் கலைக்காமல் ஏரிக்கு குளிக்கச் சென்றார். அங்கே சலவை செய்து கொண்டு இருந்த ஒரு நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்  சனீஸ்வரன் வேடத்தில் இருந்த அவரைக் கண்டாள்; அதிர்ச்சி அடைந்து அந்த இடத்திலேயே இறந்து விட்டாள்.

இந்த நிகழ்ச்சிகள் அறச்சிந்தனை கொண்ட சங்கரதாசரின் உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. இதன் பின்னர் சங்கரதாசர் நாடக நடிகர் வேடம் தரிப்பதை நிறுத்தி விட்டார்.

சிறிது காலத்துக்குப் பின்னர், சாமி நாயுடு நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு சூத்திரதார் எனும் பாத்திரம் ஏற்று நாடக நுணுக்கங்களையும், நாடகத்தில் சொல்லப்படும் நீதிகளையும் விளக்கமாகக்  கூறி பாடம் நடத்துவார். அப்போது இவர் பேச்சைக் கேட்க மக்கள் கூடி விடுவது வழக்கமானது.

அந்த நாடக சபையில் பணியாற்றியபோதுதான் முருகனை மனம் உருகிப் பாடி, ஆண்டிக்கோலத்தில் திருத்தலப் பயணம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் இவரை மக்கள் அன்போடு சுவாமிகள் என்று அழைக்கத் தொடங்கினர். அது முதல் சங்கரதாசர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார்.

புதுக்கோட்டை மகாவித்துவான் கஞ்சிரா மான் பூண்டியா பிள்ளையிடம் தொடக்கக் காலத்தில் இசைப்பயிற்சிப் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். ஒரு முறை வண்ணச்சந்தம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்த சங்கரதாஸ் சுவாமிகளை மான்பூண்டியா அழைத்து பாடச்சொன்னார்.

அப்போது தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சிரா மூலம் வாசித்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததோடு அவரையே தமது தத்துப்பிள்ளையாகவும் ஏற்றுக் கொண்டார்.

1910-ம் ஆண்டு வள்ளலாரின் சன்மார்க்க கொள்கையினை நினைவு படுத்தும் வகையில் சமரச சன்மார்க்க நாடக சபையை தொடங்கினார்.

இக்குழுவில்தான் புகழ் பெற்ற கலைஞர் எஸ்.ஜி. கிட்டப்பாவும் மற்றும் அவர்தம் சகோதரர்களும் பயிற்சி பெற்றனர்.

அந்நாளைய  நடிகர்கள் பலர் சுவாமிகளின் பாடல்களை மட்டும்  பயன்படுத்திக் கொண்டு, தரங்கெட்ட உரையாடல்களை தம் விருப்பம் போல் பேசி வந்தனர். இது சங்கர தாஸ் சுவாமிகளுக்கு வெறுப்பைத் தந்தது.

சிறு வயது முதலே நாடகப்பயிற்சி கொடுப்பதன் மூலம் நல்லொழுக்க சிந்தனைகளை வளர்க்க முடியும் என்று சங்கரதாஸ் சுவாமிகள் கருதினார்.

1918-ம் ஆண்டு மதுரையில் "தத்துவ  மீனலோசனி வித்துவ.பால சபா " என்றும் நாடகக் குழுவைத் தோற்றுவித்தார்.

இக்குழுவில்தான் டி.கே.எஸ்.சகோதரர்கள் என்று அழைக்கப்படும்  ஒளவை டி.கே.சண்முகமும், அவர் சகோதரர்களும் சுவாமிகளிடம் மாணவர்களாக சேர்ந்து பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு வயதுச் சிறுவனாக டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் சேர்ந்த போது, அந்தச் சிறுவனுக்காகவே ஒரு நாடகத்தை சங்கரதாஸ் சுவாமிகள் எழுதினார்.

அபிமன்யு சுந்தரி நாடகப் புத்தகத்தை வாங்கி, இரவோடு இரவாக நான்கு மணிநேரம் நடைபெறக்கூடிய நாடகத்தை அடித்தல் திருத்தல் இல்லாமல், நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களோடு அபிமன்யு நாடகத்தை எழுதி வெளியிட்டு தமது அன்பை வெளிப்படுத்தினார்.

சங்கரதாஸ் சுவாமிகள் சிறுவர் (பாய்ஸ் ) நாடகக்குழுவை உருவாக்கிய பிறகு அவர் நாடகப்பள்ளியில் பயின்றவர்கள் நூற்றுக்கணக்கில் புகழ் பெற்ற நாடக நடிகராகவும், திரைத்துறை நடிகராகவும் வலம் வந்தனர். அவர்களுள் டி.பி.பொன்னுச்சாமி பிள்ளை, கே.சாரங்கபாணி, நவாப் டி.எஸ்.இராசமாணிக்கம், எம். ஆர்.இராதா , நடிகையர்களில் பாலாம்பாள், பாலாமணி, அரங்கநாயகி, வி.பி. ஜானகி, கோரங்கி மாணிக்கம், டி.டி. தாயம்மாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

1921 ஆம் ஆண்டில் நாடகக்கலை இவரால் புத்துயிர்பெற்று விளங்கிய நிலையில் சங்கரதாஸ் சுவாமிகள் நோய்வாய்ப்பட்டார். தூத்துக்குடிக்குச் சென்று குணப்படுத்த முயன்ற நிலையில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. கையும், காலும் முடக்கப்பட்டு வாய்பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையிலும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பணியிலிருந்து ஒய்வெடுத்துக் கொள்ள மறுத்தார்.
சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொண்டே  நாடக அரங்கிற்கு வந்து திரை மறைவில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்தவாறே அவ்வப்போது கைகளால் சைகை மூலமாக நாடக பயிற்சி அளித்து வந்தார்.

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி, தமிழ் நாடக இமயமலை என்றெல்லாம். அழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவமிகள் 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு  புதுச்சேரியில் தமது நாடக உலகை விட்டு உயிர் நீத்தார்.

தமது நாடகங்கள் வழியே மக்களின் நல்லொழுக்கத்தையும், தமிழின் இனிமையையும், தமிழர் பண்பாட்டுப் பெருமையையும் விதைத்துக் சென்ற சங்கரதாஸ் சுவாமிகள்  50க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். ஆனால் 15 நாடகங்கள் மட்டுமே அச்சில் உள்ளன.

அவற்றுள் சிம்பலைன், ரோமியோ ஜூலியட், ஜூலியஸ்சீசர் ஆகியன ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்கள் ஆகும்.

சுவாமிகள் எழுதிய, இயக்கிய அனைத்து   நாடகங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.. அவற்றுள் கீழ்க்கண்ட நாடகங்கள் மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

1. சத்தியவான் சாவித்திரி
2. பவளக்கொடி சரித்திரம்
3. வள்ளி திருமணம்
4. அரிச்சந்திர மயான காண்டம்
5. கோவலன் சரித்திரம்
6. இராம ராவண யுத்தம்
7. வீரபாண்டிய கட்டபொம்மன்
8. மதுரை வீரன்
9. சித்திராங்கி விலாசம்
10. நளதமயந்தி

திருமணக்கோலம் பூணாது  காவிக்கோலம் பூண்டு நாடகக்கலைக்கு தன்னை அர்ப்பணித்த சங்கர தாஸ் சுவாமிகளின் நாடகங்கள் இன்றும் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் அவரின் புகழை பரப்பி வருகின்றன.

அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் இறுதிக் காலத்தில் வாழ்ந்து மறைந்த சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவிடம் பாதுகாக்கப்பட்டு ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப் பட்டு வருகிறது. அவர் இரண்டாண்டுகள் தங்கிய வீட்டின் தெருவிற்கு "சங்கரதாஸ் சுவாமி வீதி" என்று அழைக்கப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலை நாடகத்துறைக்கு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக பயிலரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் திரைப்பட விருது வழங்கப்படுகிறது.

அண்டை  மாநிலத்தில் கொண்டாடப்படும் அளவிற்கு சங்கரதாஸ் சுவாமிகளை தமிழகம் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

இனிமேலாவது, வருங்காலங்களில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்துக்  கொண்டாட வேண்டும்.

மேலும், தமிழக அரசு மீண்டும் சங்கர தாஸ் சுவாமிகள் பெயரை  மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு சூட்ட வேண்டும்.

தமிழர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று செயல்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?

-கதிர் நிலவன்

நன்றி: தமிழர் கண்ணோட்டம் இதழ்
( டிசம்பர் - 2022)

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்