சென்னை யாருக்கு சொந்தம்?
தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஶ்ரீராமுலு என்னும் ஆந்திரர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ம.பொ.சி. போயிருந்தார்.
அந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு "எனது போராட்டம்" என்னும் நூலில் ம.பொ.சி. குறிப்பிட்டுள்ளார்.
"அந்த வீரத் தியாகி என்னைக் கண்டதும் கைகூப்பி வணங்கி வரவேற்றார். அப்போது அங்கு ஆந்திர கேசரி பிரகாசம் அவர்களும் இருந்தார். அப்பெரியவர் பொட்டியின் உயிரைக் காப்பாற்ற நான் உதவி புரிய வேண்டும் என்றார். அதற்கு நான், " சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு, ஆந்திர மாநிலம் கோரினால் தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமாக ஒத்துழைக்கும் " என்றேன்.
பிரகாசம் சிறிது சினங் கொண்டவராகி , " தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு தாலுகாவின் தலைநகரும் மாநிலத் தலைநகராக இருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. ஈரோட்டின் நிலையிலுள்ள ஒரு நகரம் கூட ஆந்திராவில் இல்லை. இந்த நிலையில் சென்னை இல்லாத ஆந்திராவைக் கொடுத்தால் தலைநகருக்கு நாங்கள் எங்கே போவது என்று படபடப்புடன் பேசினார். அவருடன் விவாதம் நடத்த விரும்பாமல் "ஆந்திரத்திற்குத் தலைநகர் கொடுப்பது என் கையில் இல்லை; டில்லி அரசின் கையில் இருக்கிறது" என்று சொல்லி விட்டு எழுந்திருக்க முயன்றேன்.
இந்த நிலையில் தலைவர் பிரகாசம் என் கைகளைப் பற்றிக் கொண்டு , "ஆந்திர அரசு தற்காலிகமாகச் சென்னையில் இருக்க அனுமதித்ததால் போதும். விசால ஆந்திரம் அமையுங்கால் எங்களுக்கு ஐதராபாத் கிடைத்து விடும். நாங்கள் போய் விடுவோம். இதற்கு நீங்கள் இசைந்து விட்டால் மற்றவர்கள் எதிர்க்க மாட்டார்கள்" என்று அன்பு ததும்பக் கூறினார். அதற்கு , "ஆந்திர அரசுக்கு தற்காலிகமாகச் சென்னையில் இடம் அளிக்க மற்றவர்கள் இசைந்தாலும் நான் இசைய மாட்டேன்" என்று உறுதியாகக் கூறிவிட்டுத் திரும்பினேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை 19.10.1952இல் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய பொட்டி சிறிராமுலு 15.12.1952இல் உண்ணாநிலைப் பந்தலில் காலமானார்.
அவரது இறுதி ஊர்வலம் சென்னையில் நடந்தபோது, ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆந்திரர்கள் சேர்ந்து கொண்டு, "மதராசு மனதே " என்று முழக்கமிட்டவாறு தமிழர்களின் சொத்துகளை சூறையாடினர். பின்னர் ஊர்வலம் கலவரமாக வெடித்தது.
தமிழர்களுக்கு எதிரான ஆந்திரர்கள் கலகமானது விசய நகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, பீமவரம், ராஜமுந்திரி, ஏலூரு, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர் போன்ற இடங்களுக்குப் பரவியது. ஏழு பேர் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.
ஆந்திர வெறியர்களின் போராட்டத்தால் சென்னை மற்றும் ஆந்திரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலை மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்தது. 19.12. 1952இல் அன்று பிரதமர் நேரு சென்னை நகரம் இல்லாத , தகராறுக்கு இடமில்லாத தெலுங்கு மாவட்டங்கள் முழுவதையும் சேர்த்து தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
ம.பொ.சி. முன்னெடுத்த சென்னை மீட்பு முயற்சிக்கு அன்றைய தமிழக முதல்வர் இராசாசி, மேயர் செங்கல்வராயன் முழு ஆதரவு நல்கியதால் சென்னை நமதாகியது.
தலையைக் கொடுத்தேனும் தலைநகர் காப்பேன் என்ற ம.பொ.சி.யின் முழக்கம் வரலாற்றில் வென்றது.
- கதிர் நிலவன்
Comments
Post a Comment