ம.பொ.சி. பார்வையில் கலைவாணர்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 
நினைவு நாள்

30.8 1957

ம.பொ.சி. பார்வையில்-----
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

என்னை வாட்டிய வறுமைக்கு வருந்தி எனக்குப் பொருள் உதவி புரிந்த மற்றொரு கலைஞரை இங்கு நான் நன்றி உணர்வோடு குறிப்பிட வேண்டும். அவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஆவார்.

1948 மே 14இல்  தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர் கோவிலில் நடந்தது. அந்த மாநாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 'ஓளவை' தி.க.சண்முகம் ஆகிய கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு ' ஓளவை' தி.க.சண்முகத்துடன் கோவையிலிருந்து விமானத்தில் சென்று நானும் கலந்து கொண்டேன். 

அப்போது தெள்கெல்லை மீட்புக் கிளர்ச்சி வலுப்பெற்றிருந்தது. நாகர் கோயிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் நான் மிகுதியும் மதிக்கப் பெற்றேன். தமிழரசுக் கழகம் நடத்தி வந்த வடக்கு- தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை ஆதரிக்கும் தீர்மானம் ஒன்றும் எழுத்தாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் கலந்து கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தமிழரசுக் கழகத்திற்கு தாம் ரூபாய் ஆயிரம் நன்கொடை அளிக்கப் போவதாக தமது செயலாளர் திரு.வே.நாராயணனைக் கொண்டு அறிவித்தார்.  அறிவித்த அந்தத் தொகையை மூன்றாவது நாளில் என்னிடம் கொடுத்தார். டி.கே.எஸ். சகோதரர்களும் கலைவாணரும் தவிர அந்நாளில் தமிழரசுக் கழகத்திற்கு நிதி உதவி புரிய முன்வரவில்லை.

எழுத்தாளர் மாநாடு முடிந்ததும் கலைவாணர் அவர்கள் தமது நாகர் கோவில் இல்லத்தில்  என்னை இரண்டு நாட்கள் தங்க வைத்து நன்கு உபசரித்தார்.  பின்னர் நாகர் கோவிலில் இருந்து திருச்சி வரை தமது காரில் என்னை அழைத்து வந்து திருவரங்கத்திலுள்ள டி.ஏ. மதுரம்மாள் இல்லத்திலும் ஒருவேளை என்னை நிறுத்தி வைத்து விருந்தளித்து உபசரித்தார்.  அந்த வீட்டில் வைத்துத் தான் கழகத்திற்கு நன்கொடை அளித்தார்.

என்னுடைய பொன்விழா சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற போதும் என்.எஸ். கிருஷ்ணன் பங்கு கொண்டார்.

விழாவிலே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தாம் குமரிமுனைத் தமிழர் என்ற உணர்வோடு பேசினார். அப்போது குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவது உறுதியாகி இருந்ததால் அவர் என்பால் நன்றி உணர்வோடு பேசினார். அது பின்வருமாறு;

" இந்த விழாவானது நியாயமாக எங்களூரிலே நடந்திருக்க வேண்டும். தவறி விட்டோம். நமது சிவஞானம் அவர்களாலே மீட்கப்பட்ட தமிழர்களிலே நானும் ஒருவன் என்பதைப் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அவரது உழைப்பால் சென்னை நமக்கென்று ஆகிப் போச்சு. இப்போது அவருக்குப் பொன்விழா நடக்குது? இனி வைர விழா எங்கே நடக்கும் தெரியுமா? திருப்பதியிலேயும் திருத்தணியிலேயும் நடக்கும்" என்றார்.

அதேபோல், நவம்பர் முதல் நாளிலே குமரி மாவட்ட இணைப்பு நாள்- அதாவது தெற்கெல்லைப் போரின் வெற்றித் திருநாள் கொண்டாடத் நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தது. அந்த விழாவில் முதலமைச்சர் காமராசர் கலந்து கொள்வதாலும், அவரின் தயவு அக்கட்சிக்கு தேவைப்பட்டதாலும் நான் புறக்கணிக்கப்பட்டேன்.

இதை அறிந்த என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, " எப்படியேனும் நவம்பர் முதல் நாளிலே நாகர் கோயிலில் நாம் விழா நடத்தியே ஆக வேண்டும். அது போட்டி விழா ஆகவே ஆகாது. அதற்காகும் செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்கள் கலந்து கொள்ளுங்கள் " என்று ஆவேசப்படும் வழக்கமில்லாத நககைச்சுவைக் கலைஞரான அவர் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார். 

அவருக்கு ஆறுதல் கூறி, போட்டி விழாவில் கலந்து கொள்ள மறுத்தேன் என்பதும் நினைவு கூறத்தக்கது.

கலைவாணர் சிரிப்பு நடிகர் என்றாலும் அவரது சிரிப்புக்குப் பிறரை சிந்திக்க வைக்கும் திறமை இருந்தது. அவர் ' கோமாளி' அல்ல;  நகைச்சுவை நடிப்பின் தரத்தை உயர்த்தினார். அவர் ஒரு ஸ்தாபனத்திற்குரிய சக்தியைப் பெற்றிருந்தார். நடிப்பைத் தொழிலாக மட்டுமல்லாமல், தொண்டாகவும் கொண்டிருந்தார். நகைச்சுவை நடிப்பில் அவர் இருந்த பீடம் இன்னும் வெற்றிடமாகவே. இருக்கிறது.

- ம.பொ.சிவஞானம்

(ம.பொ.சி. எழுதிய எனது போராட்டம்
பக்.533, 800, 838, தொகுக்கபட்டது)

கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்
Tamilthesiyan.wordpress.com

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்