ஜெய்கிந்த் முழக்கம் தந்த தமிழர் செண்பகராமன் பிள்ளை
இன்று செப் 15 பிறந்த நாள்.
-----------------------------------------------
தமிழர்களின் விடுதலை வேட்கைக்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு.
ஹிட்லரையே மன்னிப்புக் கேட்க வைத்த தமிழன். அதனாலேயே உயிரிழந்த வீரன்.
செண்பகராமன் பிள்ளை.
(15-09-1891 26-05-1934)
மிதவாதத்தை நம்பாத நேதாஜி, கடல் தாண்டிச் சென்று படை திரட்டுவதற்கு முழு முக்கிய காரணமாக இருந்தவர் செண்பகராமன் பிள்ளை.
நேதாஜி தொடர்பான ஆவணங்கள், மக்கள் முன்பு ரகசியம் உடைத்து விரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம், அண்மையில் நாடு தழுவிய அளவில் எழுந்தது. ஆனால், நேதாஜிக்கே வழிகாட்டியாக இருந்த, சுதந்திரத்திற்காக போராடிய, கற்பனைக்கும் எட்டாத வீரம் பொதிந்த செண்பகராமன் பிள்ளை தொடர்பான விஷயங்கள் சொந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் போனது எவ்வாறு?…
1914ஆம் ஆண்டு எம்டன் என்ற மகா நாசகரக் கப்பலை இந்தியாவுக்கு கொண்டு வந்து, பிரிட்டிஷ் இந்தியா மீது தாக்குதல் தொடுத்தார் செண்பகராமன் பிள்ளை. திருவனந்தபுரத்தில் பிறந்து, ஜெர்மனியில் தங்கி, சொந்த நாட்டின் சுதந்திர சுவாசத்திற்காக இயங்கி வந்த பிள்ளை, இந்தியர்களை மோசமாக விமர்சித்த ஹிட்லரை முகமுகமாக எதிர்த்த வீரன்.
ஜெர்மனியில் 1933-இல் ஜனநாயக நாற்காலியை உடைத்து, சர்வாதிகார சிம்மாசனத்தில் அமர்ந்தார் ஹிட்லர். “நீர், கருத்த இதயத்துக்குச் சொந்தக்காரன்” என்ற செண்பகராமனின் கொதிவார்த்தைகளால் சூடுண்ட ஹிட்லர், உக்கிரத்திரத்தின் உச்சிக்குச் சென்றார் . தன்னுடன் நல்ல நட்பில் இருந்த அவரை, பிரிட்டிஷாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக, கடுமையாக சாடினார் பிள்ளை.
பழிவாங்கும் நஞ்சை மனதிற்குள்ளேயே வைத்திருந்த ஹிட்லர், செண்பகராமன் பிள்ளையை தனது வீரர்கள் மூலம் அடித்துக்கொன்றார். சொந்த தேசத்தின் விடுதலைக்காக படை கொண்டுவர, தனி மனிதனாக சென்ற பிள்ளை, 1934ஆம் ஆண்டு இத்தாலியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments
Post a Comment