தமிழ்நாடு விடுதலைக் குரல் சி.பா.ஆதித்தனார்
"தமிழ்நாடு விடுதலைக் குரல்"
சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்
27.9.1905
1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் "தமிழ்நாடு தமிழருக்கே " முழக்கம் பிறந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த முழக்கம் "சுதந்திரத் தமிழ்நாடு" முழக்கமாக ஒலித்தது. அதற்கு
காரணமானவர் 'தமிழர் தந்தை' எனக் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனார் ஆவார்.
சி.பா. ஆதித்தனார் திருநெல்வேலி மாவட்டம் காயாமொழி என்ற ஊரில் 27.9.1905இல் சிவந்தி ஆதித்தர்- கனகம் அம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஆதித்தனாருக்கு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூத்தவர் பெயர் தையல்பாசு ஆதித்தனார். இளையவர் பெயர் தனஞ்செய ஆதித்தனார். மற்ற இரு தங்கைகள் பெயர் வாமசுந்தர தேவி, கமலம் அம்மையார்.
ஆதித்தர்கள் என்னும் சொல் வரலாற்று பின்னணி கொண்டது. பிற்கால பாண்டியர் ஆட்சிக்குப் பிறகு திருநெல்வேலியில் பாளையக்காரர்களின் ஆட்சி முறை ஏற்பட்டது. மற்ற பாளையக்காரர்கள் எல்லாம் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு அஞ்சி நடுங்கிய காலத்தில் அவரை தீரத்தோடு போராடி அடக்கியாண்டவர்கள் தான் ஆதித்தர்கள். இந்தப் பெயரையே சி.பா.ஆதித்தனாரின் முன்னோர்கள் அடைமொழிப் பெயராக சூட்டி வந்தனர்.
சி.பா.ஆதித்தனாருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். இவர் நான்கு வயது அடைந்த போது திருவைகுண்டம் காரனேசன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார்.
ஆறாம் வகுப்பில் வடமொழி அல்லது தமிழ்மொழி விருப்பப் பாடமாக கற்றுத் தரப்பட்டது. இவர் தமிழ்மொழியை விருப்பப் பாடமாக தெரிவு செய்து கல்வியைத் தொடர்ந்தார்.
பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னை சென்று சட்டம் படித்துக் கொண்டிருந்த நிலையில் 1928இல் இலண்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அங்கு பாரிஸ்டர் பட்டப் படிப்பை தொடர்ந்து கொண்டே பல்வேறு நாடுகளில் இருந்து வரும் புகழ் பெற்ற ஆங்கில இதழ்களுக்கு கடிதம் எழுதி வந்தார். இதழ்களால் வெளியிடப்படும் இந்தப்பகுதிக்கு இலண்டன் கடிதம் (London Letters) என்று பெயர். அவர் பிற்காலத்தில் இதழியல் துறையில் சிறந்து விளங்குவதற்கு இது உரமாக அமைந்தது என்று கூறலாம்.
1933இல் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆதித்தனார் அங்கிருந்தவாறே சிங்கப்பூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு புகழ்பெற்று விளங்கினார். சிங்கப்பூரில் செல்வாக்கு பெற்ற ஓ.இராமசாமி என்பவரின் மகள் கோவிந்தம்மாள் என்பவரை 9.1.1933இல் திருமணம் செய்து கொண்டார். ஆதித்தனாருக்கு இராமச்சந்திர ஆதித்தன், சிவந்தி ஆதித்தன் என்ற இரண்டு மகன்களும், சரசுவதி என்ற ஒரு மகளும் உண்டு.
தமிழ்நாட்டில் 1938இல் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வந்த போது, சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்தப் போராட்டம் மிகவும் கவர்ந்தது. சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் "தமிழ வேள்" கோ.சாரங்கபாணி அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முதன்முறையாக "தனித்தமிழ்நாடு" வேண்டும் என்று முழங்கினார். தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பிய அவர் 1942இல் தமிழ்நாட்டிற்குத் திரும்பினார்.
சிங்கப்பூரில் இருக்கும் போதே தமிழ் நாளிதழ் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு தமிழ்நாட்டிற்கு வந்த போதுதான் நிறைவேறியது. இரண்டாம் உலகப்போர் மூண்ட அவ்வாண்டிலேயே உடனடியாக மூன்று இதழ்களைத் தொடங்கினார்.
அக்காலத்தில் படித்த பெருமக்கள் வாழும் சென்னை நகரை மையமிட்டே இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. கல்வி அறிவு குறைந்த ஏனைய தமிழகத்தின் பிறபகுதிகளில் இதழ்கள் நடத்த எவரும் முன்வரவில்லை. அந்நிலையில் மிகத் துணிச்சலோடு தமது முதல் இதழைத் மதுரையில் தொடங்கினார். 'மதுரை முரசு' என பெயர் சூட்டப்பட்டு இதழ் வெளிவந்தது. அப்போது பிரித்தானிய அரசு கடும் தணிக்கைக்கு உட்படுத்தி இதழைத் தடை செய்தது.
23.8.1942இல் தொடங்கப்பெற்ற அவரின் இரண்டாவது இதழுக்குத் 'தமிழன்' என்று பெயரிடப்பட்டது. பெரியார் அவர்கள் "திராவிடநாடு" விடுதலையை எழுப்பி வந்த காலத்தில், இவ்விதழானது தமிழ்நாடு விடுதலையை குறிக்கோளாகக் கொண்டு வெளியிடப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அட்டைப்படமும், "தமிழர் என்று சொல்வோம்- பகைவர் தமை நடுங்க வைப்போம்" என்ற அவரின் பாடல் வரிகளும் தமிழர்களின் தமிழுணர்வைத் தட்டியெழுப்பியது.
"நமது நோக்கம்" என்று தலைப்பிட்டு ஆதித்தனார் எழுதியது பின்வருமாறு: "அந்நியர்களுக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஆதிக்கம் ஒழிய வேண்டும். துண்டு பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு ஒன்றுபட வேண்டும். தமிழர்கள் கூடி ஏற்படுத்தும் அரசு பிறநாட்டார் மதிக்கும் வல்லரசாக மாற வேண்டும்"
ஆதித்தனாரின் புகழ்பெற்ற "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" முழக்கம் அவ்விதழில்தான் முதன்முறையாக வெளியிடப்பட்டது.
தில்லி அரசின் ஓரவஞ்சனையால் தமிழர்களின் பகல்கனவாகிப் போன திட்டமாம் "சேதுக் கால்வாய்" திட்டத்திற்கு
"தமிழன் கால்வாய்" என்று பெயரிட்டு அழைத்ததும் முதல் "தமிழன்" இதழ்தான்.
அதுமட்டுமா? தமிழ்நாடு விடுதலையோடு தமிழீழமும் விடுதலை பெற வேண்டும் என்று (10-வது இதழில் ) முதன் முதலாகக் குரல் கொடுத்ததும் "தமிழன்" இதழ்தான்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் "தமிழன்" முதல் இதழைக் கண்டு மகிழ்ந்து உடனடியாக, " தமிழ்நாட்டின் நிலையை நினைத்தால் அழுகை அழுகையாக வருகிறது. மனம் தாள வில்லை. தெற்கே மலையாளம், வடக்கே இந்தி, வடுகு, மேற்கே கன்னடம் தமிழகத்தைக் கிட்டிப் போட்டு நெருக்குகின்றன. தமிழரோ இன உணர்ச்சியேயில்லாது கலை, வாணிபம், தொழில், கல்வி அனைத்திலும் நினைப்பிலுங்கூட, அந்நியருக்குக் கொத்தடிமையாய் இருக்கிறார்களே, அந்தோ தமிழ்நாடு எங்கேயிருக்கிறது?" என்று வேதனையை வெளிப்படுத்தி ஆதித்தனாருக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார்.
ஆயிரம் பிரதிகளோடு தொடங்கிய
"தமிழன்" இதழ் பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்று ஏழாயிரம் பிரதிகள் வரைக்கும் விற்பனையான போதிலும், தாள் பஞ்சம் காரணமாக நிறுத்தப்பட்டது.
ஆதித்தனார் தமது மூன்றாவது இதழுக்கு 'தந்தி' என்று பெயர் சூட்டினார். 1.11.1942இல் 'முத்தமிழ்க் காவலர் ' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களால் 'தந்தி' இதழ் தொடங்கப்பட்டது. ஆதித்தனார் தந்தி இதழுக்கு தாள் கிடைக்காத காரணத்தால் வைக்கோலை ஊற வைத்து தாமாகவே தாள் செய்தார். அதற்கு "தமிழன் கைக் காகிதம்" என்று பெயரிட்டு தந்தியை அச்சிட்டு வெளியிட்டார். மூலை முடுக்கு கிராமங்களில் எல்லாம் தந்தி படிக்கும் மக்கள் பெருமளவில் உருவானார்கள்.
இதற்குக் காரணம் 'தந்தி' இதழில் பாமரரும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் வகையில் நீளமான வாக்கியங்கள் இல்லாமல் சிறிய வாக்கியங்கள் அமைத்து வெளியிடப்பட்டது. செந்தமிழில் இல்லாமல் பேச்சுத் தமிழில் எழுதப்பட்டது. பிறமொழிச் சொற்கள் தவிர்க்கப்பட்டு நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவை பின் வருமாறு: ஜில்லா- மாவட்டம், மாஜி- முன்னாள், தமாஷ்- சிரிப்பு, பந்த்- முழு அடைப்பு, கெரோ- முற்றுகை, லெவி- கட்டாயக் கொள்முதல், நதி- ஆறு, விஜயம்- வருகை, கார்ட்டூன்- கருத்துப்படம், ஜரூர்-வேகம்.
தனித்தமிழ் இயக்கத்தவர் படித்தவரிடம் பரப்பிய பல நல்ல தமிழ்ச் சொற்களையெல்லாம் கிராமங்களில் வாழும் பாமரரும் உச்சரிக்க வைத்த பெருமை "தந்தி" இதழையேச் சாரும். 1948இல் இவ்விதழ் "தினத்தந்தி" இதழாக உருமாற்றம் பெற்று இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றுத் திகழ்கிறது.
தமிழ்நாடு விடுதலையைக் காண இதழின் ஊடாகப் பேசி வந்த ஆதித்தனார் அவர்கள் ஒரு அரசியல் அமைப்பைத் தோற்றுவித்து அதன் ஊடாகவும் தமிழக விடுதலையைப் பேச விரும்பினார். 1942இல் தமிழ் இராச்சியக் கட்சியை உருவாக்கினார். இதன் முதல் மாநில மாநாடு புனிதமேரி மண்டபத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. ஆதித்தனார் கட்சிக் கிளைகளை நிறுவிட தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
1943இல் மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் "தமிழ்நாடு இளந்தமிழர் இயக்க மாநாடு" ஒன்றையும் சிறப்பாக நடத்தினார். மேலும், தமிழ் இராச்சியக் கட்சியின் கொள்கையை விளக்கும் "தமிழ் இராச்சியம்" பெயரில் அரிய நூலினை வெளியிட்டார்.
இரண்டாம் உலகப்போரும், இந்திய விடுதலைப் போரும் தீவிரம் பெற்று வந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு போராட்டங்கள் நடத்துவது முறையாகாது என்பதாக உணர்ந்தார். இதனால் தாம் உருவாக்கிய தமிழ் இராச்சியக் கட்சியின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தார்.
அதன் பின்னர், ஆதித்தனார் தொழிலாளர் நலப் போராட்டங்களில் கவனம் செலுத்தினார்.1952இல் கள் இறக்கும் தொழிலாளர்கள் பனைமர வரியால் பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்தார். 1955இல்
செங்கல்பட்டு மாவட்டம் மாத்தூரில் உழவர்களின் கூலி உயர்வுப் போராட்டத்திற்கும் தலைமை தாங்கிப் போராடினார்.
1956இல் ஆதித்தனார் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த போது ஐரிஷ் ( அயர்லாந்து) நாட்டு விடுதலை வீரன் டிவேலரா பெயரும், அவர் நடத்திய இயக்கமான 'சின்பெயின்' பெயரும் இவரை வெகுவாகக் கவர்ந்தது.
1958இல் புதிய இயக்கம் கண்டபோது ஐரிஷ் விடுதலையை (We are Irish) நினைவுப்படுத்தும் வகையில் 'நாம் தமிழர் இயக்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார். அப்பெயரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அவரே விளக்குகிறார்:
"நான் அயர்லாந்து விடுதலை இயக்கத்தை அறிந்துள்ளேன். அதன் பெயர் 'சின்பெயின்'. அதன் பொருள் நாங்கள் ஐரிஷ் மக்கள். பிரித்தானியரும் ஐரிஷ் மக்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் அது குறித்தது. அதுபோல் 'நாம் தமிழர்' என்று சொல்லும் போது நாங்கள் இந்தியர்களுமல்ல, திராவிடர்களுமல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதனால் தான் நாம் தமிழர் என்ற பெயரை தெரிவு செய்தேன்". என்றார்.
நாம் தமிழர் இயக்கத்தின் கொடியானது நீல வண்ணத்தின் பின்னணியில், அதன் நடுவில் வில், புலி, மீனும் பொறிக்கப்பட்டு 'தமிழ் வெல்க' என்ற வரிகளோடு உருவாக்கப்பட்டது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் ஆதித்தனாரின் தமிழ்த் தேசியக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு நாம் தமிழர் இயக்கத்தோடு உறவு பூண்டார். 9.2.1958இல் பாரதிதாசன் தலைமையில் நாம் தமிழர் இயக்கக் கூட்டம் நடத்தப்பட்டபோது, தமிழர்கள் அதில் பங்கேற்குமாறு ஆதித்தனார் அழைப்பு விடுத்தார். அத்தோடு பாரதிதாசனின் பாடல்களைத் தொகுத்து " தாயின் மேல் ஆணை" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
ஆதித்தனார் முதன்முதலாக வெளியிட்ட நூலான 'தமிழ் இராச்சிய' நூலினை சற்று விரிவாக எழுதி 'தமிழப்பேரரசு' எனும் பெயரில் வெளியிட்டார். ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழர்கள் இழந்த ஆட்சி உரிமையைப் பெற்று, ஒரு பேரரசாக உலகத்தில் மீண்டும் விளங்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டது.
அந்நூலில், ஆதித்தனார் கூறுகிறார்: "தமிழ்நாட்டின் வரலாற்றில் 600 ஆண்டு என்பது ஒரு கால வட்டம் ஆகும். அதாவது, தமிழர்களுக்கு 600 ஆண்டு வாழ்வும் அதன் பின் தாழ்வுமாக மாறி மாறியே வந்துள்ளது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை பிற நாட்டவர்களான வடவர்களைத் தோற்கடித்து தமிழர்கள் ஆண்டார்கள். வில்,புலி, மீன் கொடி உயரப் பறந்தது. முதல் 600 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பொற்கால வட்டமாகும்.
அடுத்து, கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள், பல்லவர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆட்சி செய்தனர். வில், புலி, மீன் கொடி மறைந்தது. வடமொழி வளர்ந்தது. இரண்டாவது 600 ஆண்டுகள் தமிழகம் அடிமைக்கால வட்டமாகும்.
அடுத்து, வடநாட்டு அரசர்களுக்கும்,வடமொழிக்கும் அடிமைப்பட்ட தமிழினம் மீண்டும் 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசால் தலை நிமிர்ந்தது. மூன்றாவது 600 ஆண்டுகள் தமிழகத்தின் இரண்டாவது பொற்கால வட்டமாகும்.
அடுத்து கி.பி.14ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை தமிழினம் அடிமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விசயநகரப் பேரரசு, உருது நவாப்புகள் அரசு, ஆங்கிலப் பேரரசு, தில்லி இந்திப் பேரரசு என்று தொடர்ந்தாற் போல் வேற்றினத்தாரால் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது. இந்த 600 ஆண்டுகள் தமிழகத்திற்கு 'கறுப்பு கால வட்டம்' என்ற போதிலும் அதனை தற்போது கடந்து விட்டோம்.
தமிழகத்தின் பொற்காலம் மீண்டும் தோன்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ்மக்கள் விழித்து எழுவது உறுதி. சுதந்திர தமிழப் பேரரசு அமைத்திடுவோம்...
என்று விரிவாக அந்த நூலில் ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார்.
ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்குத் 'தமிழன்' என்று பெயர் வைத்ததைப் போல, இயக்க அலுவலகத்திற்குத் 'தமிழன் இல்லம்' என்றும், இயக்க வார இதழுக்குத் 'தமிழ்க்கொடி' என்றும், பதிப்பகத்திற்குத் 'தமிழ்த்தாய்' என்றும், பெயர் சூட்டினார்.
ஆதித்தனார் இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்ததைப் போலவே ஆங்கிலத் திணிப்பையும் எதிர்த்தார். K.S.மணி என்றும், M.R.கண்ணன் என்றும் இரண்டு மொழிகளில் எழுதும் தமிழர்களைக் கண்டு நகையாடினார். உலகத்தில் நான் செல்லாத நாடுகள் இல்லை. ஆனால் இரண்டு மொழிகளில் எழுதுகிறவனை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்றார்.
ஆதித்தனார் 'சுதந்திரத் தமிழ்நாடு' கோரிவந்ததை பேராயக் கட்சியினரும், தி.மு.க.வினரும் மேடைகளில் கிண்டலோடு பேசி வந்தனர். அதற்கு ஆதித்தனாரும் தக்க பதிலடி தந்தார்.
சுதந்திரத் தமிழ்நாடு என்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றது என்று கக்கனார் கூறிய போது, "தமிழ்நாட்டை விடச் சிறியவைகளான 74 நாடுகள் முழு உரிமையுடன் வாழுகின்றன. அவை குண்டுச் சட்டியை விடச் சின்னஞ்சிறிய தேநீர் கோப்பைக்குள் குதிரை ஓட்டுவது கண்ணுக்குத் தெரிய வில்லையா?" என்று
கேள்வி எழுப்பினார்.
1956இல் மொழிவழி தமிழ் மாநிலம் உருவான பிறகும் அண்ணா "திராவிட நாடு " கோரிக்கையை எழுப்பி வந்தார். அத்தோடு, சி.பா. ஆதித்தனார் கேட்கும் 'தனித் தமிழ்நாடு' என்பது ஒரு தொழுநோயாளியின் கையிலிருக்கும் வெண்ணெயைப் போன்றது. அது யாருக்கும் பயன்படாது.” என்றார்.
அண்ணாவின் இந்த கடும் பேச்சைக் கண்டித்து ஆதித்தனார் பின்வருமாறு பதிலுரைத்தார்:
“மெத்தப் படித்த அண்ணாத்துரை அவர்களே! இன்று இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதைப் போல, நீங்கள் கேட்கும் திராவிடக் கூட்டாட்சியிலும் தமிழ்நாடு அடிமை நாடாகத்தான் இருக்கும். அதை விட இந்தியக் கூட்டாட்சியிலேயே அடிமை நாடாக இருந்து விடலாமே!
அது மட்டுமன்று. ‘திராவிட நாடு’ என்ற குழந்தையைப் பெற்றவர் பெரியார். அதை வளர்த்தவரும் அவரே. பின்னர் அவரே, "அத் திராவிட நாடு என்ற குழந்தை செத்து விட்டது, அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டேன் " என்று அறிவித்து விட்டார். இவ்வாறு அவர் அறிவித்த பிறகும் ‘திராவிட நாடு’ பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என்று கதறியழுது கொண்டிருப்பதில் பொருளில்லை”
அதுபோல், தமிழன் தன்னை 'திராவிடன் ' என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்து வந்த திரி- வடுகர்களே திராவிடர்கள் ஆவார்கள், தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.
உலகில் சிறுபான்மையினர் என்றாலே அதற்கு அடிமை என்றுதான் பொருள் என்பார். இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை. சிங்களரோ பெரும்பான்மை. அதனால் தமிழர்கள் அடிமைப்படுத்தப் பட்டனர். அதுபோல் இந்தியாவில் இந்தி பேசுபவர் பெரும்பான்மை. தமிழ்நாட்டினர் சிறுபான்மை. அதனால் தில்லி ஆட்சிக்கு தமிழர்கள் அடிமையாக உள்ளனர் என்று உதாரணங் காட்டிப் பேசுவார்.
6.7.1958இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் மன்னார் குடியில் 'சுதந்திரத் தமிழ்நாடு' மாநாடு நடத்தினார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்ட நிலையில் மாநாட்டில் பங்கேற்க பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பேசிய பெரியார், ' தமிழக விடுதலைக் கிளர்ச்சியில் ஆதித்தனாருக்கு இருக்கிற ஆர்வமும், ஊக்கமும் நம்மையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படி செய்து விட்டது' என்றார்.
அந்த மாநாட்டில், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பெரியாரும் பங்கேற்க ஒப்புக் கொண்டார். 5.6.1960இல் நடைபெற்ற பட எரிப்புப் போராட்டத்தில் ஆதித்தனாரும், பெரியாரும் முன் கூட்டியே கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் பட எரிப்பில் தடையை மீறி ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே ஆண்டில் ஆதித்தனார் இந்தியைத் திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்தார். அந்தப் போராட்டத்தில் முன் கூட்டியே அவர் கைது செய்யப்பட்டார்.
1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதால் 9.10.1965இல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் கோயமுத்தூர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1965இல் பிரிவினைத் தடைச்சட்டம் அச்சுறுத்தி வந்ததால், சிறையை விட்டு வெளியே வந்ததும் நாம் தமிழர் இயக்கத்தை கலைத்து விட்டு தி.மு.க.வில் இணைந்தார். இதன்மூலம் தமிழ்நாடு விடுதலையையும் கைகழுவினார். இது அவரின் தமிழ்த் தேசிய கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.
ஆதித்தனார் எப்போதும் தேர்தல் களத்தைப் புறக்கணித்தவர் அல்ல. 1947இல் சட்ட மேலவை உறுப்பினர், 1952,1957, 1967ஆம் ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினர், அண்ணா ஆட்சிக் காலத்திலும் அதன் பிறகும் சட்டப்பேரவைத் தலைவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் என்று பல பதவிகள் வகித்தவர். ஆதித்தனாரின் தேர்தல் அணுகுமுறையும், வணிக நோக்குமே அவர் முன்னெடுத்த தமிழ்த்தேசிய அரசியலை பலிக் கொண்டது என்பதை உறுதிபடத் கூறலாம்.
ஆதித்தனார் 21.5.1981 அன்று தமது 76வது வயதில் காலமானார்.
ஆதித்தனார் தமது உயிர் மூச்சுக் கொள்கைகளைக் கைவிட்டு கண் மூடினாலும் கூட, அவர் மூட்டிய தமிழ்த் தேசிய விடுதலைப் பெரு நெருப்பு என்பது இன்னும் அணைய வில்லை. அது ஈழ விடுதலையிலும் தமிழக விடுதலையிலும் கனன்று கொண்டிருக்கிறது.
- கதிர் நிலவன்
நன்றி:
1.முகிலை இராசபாண்டியன் எழுதிய "சி.பா.ஆதித்தனார்"
2. சிவபாரதி எழுதிய "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்"
3. சி.பா. ஆதித்தனாரின் "தமிழப் பேரரசு"
Comments
Post a Comment