பிப்.21: உலகத் தாய்மொழி நாள்
பிப்.21: #உலகத்தாய்மொழிநாள்
தமிழே நம் குறி!
குறளே நம் நெறி!
மொழி விடுதலை என்பது ஒரு தேசிய இனத்தின் தாயக விடுதலையோடு இணைந்தது. வங்காள தேசம் பாகிஸ்தானோடு இணைந்து இருந்த 1952ஆம் ஆண்டில் மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மீது உருது மொழியைத் திணித்தது. அந்த மொழித் திணிப்பை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் போராடினார்கள். வங்க மொழி காக்கும் போரில் 11 வங்காளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
வங்கதேச மக்கள் மொழிப் போராட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தாயக விடுதலைக்காகப் போராடி வெற்றியும் கண்டனர். வங்காள தேசம் தனிநாடாக உருவெடுத்தது. பிறகு வங்கதேசம் ஐ.நா.மன்றத்தில் உறுப்பு நாடாகத் தன்னை இணைத்துக் கொண்டது. அப்போது வங்கமொழிக்காக 11பேர் உயிர் ஈகம் செய்த நாளான பிப்.21ஆம் நாளை தாய்மொழி நாளாக அறிவிக்கும் படி கேட்டுக் கொண்டது. அதனை ஏற்றுக் கொண்டு ஐ.நா.மன்றம் பிப்.21ஆம் நாளை உலகத்தாய்மொழி நாளாக அறிவித்தது.
உலகத்தாய்மொழி நாளான இன்று வங்கதேச மொழிப்போர் நாள்தான் உலகமெங்கும் நினைவு கூறப்படுகிறது.
1965ஆம் ஆண்டு தமிழர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் போது இந்திய இராணுவத்தால் 300 தமிழர்கள் காக்கை குருவியைப் போல சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர். தமிழர்களின் மொழிப்போர் நாளான சனவரி 25ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாக ஏற்றுக் கொள்ளப்படாததற்கு காரணம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தோடு மொழிப்போராட்டத்தை இணைத்து நடத்த வில்லை.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒருவர் மட்டுமே தமிழக விடுதலையை முன்னெடுத்துப் பேசினார். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள். பெருஞ்சித்திரனார் குரல் எடுபட வில்லை.
இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த அண்ணா அடுக்குமொழி பேசியே தமிழினத்தை வசிகரீத்தார். கடந்த காலத்தில் பேசிய திராவிடநாடு கோரிக்கை அவருக்கு மறதி நோயானது. தமிழை வாழ வைப்பதாகக் கூறி தமிழக ஆட்சியைப் பிடித்தார். அண்ணாவின் இருமொழிக்கொள்கை தமிழுக்கு வேட்டு வைத்தது. ஆங்கிலத்திற்கு ஏற்றம் தந்தது.
தற்போது அவரின் தம்பிமார்கள் ஆங்கிலப் பள்ளிகளுக்கு நடை விரித்து தமிழை ஒழித்து கட்டும் வேலையை விரைவுபடுத்தி வருகின்றனர். பல்கலைக் கழக மட்டத்திலிருந்த ஆங்கிலம் முதலில் கல்லூரிக்கு வந்தது. பிறகு கல்லூரியிலிருந்து பள்ளிக்கு வந்தது. தற்போது மழலைப்பள்ளி வரை நீக்கமற நிறைந்து விட்டது.
தாய்மொழி காக்க உலகத்தில் எந்த இனமும் தமிழர்களைப் போல 300 பேருக்கும் மேல் உயிர் ஈகம் செய்ததில்லை.
ஆனால் நமக்கு சொந்தநாடு இல்லாத காரணத்தால் நமது ஈகம் உலகின் கண்களுக்கு தெரியாமல் போய் விட்டது மட்டுமல்ல, நமது மக்களுக்கே கூட தெரியாமல் போய் விட்டது.
நாம் மீண்டும் மொழி உணர்வின்றி பழைய நிலைக்கு வந்து விட்டோம். உலகத்தாய் மொழி நாளான இன்று மீண்டும் தமிழ் மொழி காக்கும் போரை...
ஆங்கிலம், இந்திமொழி ஆதிக்கத்திற்கு எதிராகத் தொடங்குவோம்!
தமிழே நம் குறி!
குறளே நம் நெறி!
-என்று தமிழர்களிடத்தில் கொட்டி முழங்கிடுவோம்!
-கதிர்நிலவன் தமிழ்த்தேசியன்
Comments
Post a Comment