ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்
ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்!
================================
எழுதியவர்: கி.ஆ.பெ. விசுவநாதம்
=================================
( 1949 இல் ஈவெரா - மணியம்மையார் திருமணம் நடைபெற்ற போது திராவிடர் கழகத்திலிருந்த பலரும் ஆத்திரப்பட்டார்கள். தமிழர் கழகம் நடத்திக் கொண்டிருந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடமும் தங்கள் கருத்தை கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் "தமிழர் நாடு" இதழில் விடையிறுத்தார்.
பெரியார் யார்? என்பதை நான் முன்னே கண்டேன்: நீங்கள் பின்னே காண்கிறீர்கள். அவ்வளவுதான் எனக்கும் உங்களுக்குமுள்ள வேறுபாடு என்று பதில் தந்தார்.
ஈவெராவின் கிழமணத்திற்கு ஆத்திரப்படும் நீங்கள் பல கட்டங்களில் இயக்கத்தை சீர்குலைத்த ஈவெரா மீது ஏன் ஆத்திரம் வர வில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.
ஈவெரா இயக்கத்திற்கு செய்த தீங்குகளைப் பட்டியலிட்டு "ஈரோட்டுப் பண்டார சன்னதிகள்" என்ற தலைப்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய கட்டுரை இது.)
பெரியார் ஈ.வெ.ரா. திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல கடிதங்கள் எனக்கு வந்தும், வந்து கொண்டும் இருக்கின்றன. வந்துள்ள கடிதங்கள் பலவற்றிலும் "அவருடைய செயலைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்றே கேட்கப்பட்டிருக்கிறது. கேட்டிருந்த அன்பர்களுக்கு அதுபற்றிய கருத்தோ, கவலையோ ஏதும் எனக்கு இல்லை என்று வெளிப்படையாகக் கூறிவிட்டேன்.
மழுப்ப வேண்டாம் என்றும், மறைக்க வேண்டாம் என்றும். தட்டிக்கழிக்க வேண்டாம் என்றும் பல கடிதங்கள் சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்செங்கோடு, வேலூர் முதலிய இடங்களிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன.
சேலத்திலிருந்தும். தஞ்சையிலிருந்தும் வற்புறுத்துக் கடிதங்கள் சில வந்தன.
அக்கடிதங்களில் பெரியாரைப் பற்றிய வசைச் சொற்கள் வரம்பு கடந்து காணப்படுகின்றன. சிலர் அதிக ஆத்திரப்படுகிறார்கள் என்றும் தெரிகிறது. இவர்கள் அனைவரும் திராவிட கழகத்தாராகவே இருப்பதை அறிந்து வியந்தேன்.
அவர்கள் அனைவரையும் நோக்கிக் கூறுவது இதுதான்.
பெரியார் யார்? என்பதை நான் முன்னே கண்டேன்: நீங்கள் பின்னே காண்கிறீர்கள். அவ்வளவுதான் எனக்கும் உங்களுக்குமுள்ள வேறுபாடு.
ஈ.வே.ரா. தவறு செய்யும் ஒரு பெரியார் என்பதை நான் மனமாரக் கண்டேன். என் முடிவை அப்படியே தமிழ் மக்களுக்கு அறிவிப்புகள் மூலமும், இராஜினாமா அறிக்கை மூலமும்,பல பத்திரிகைகள் மூலமும் வெளியிட்டேன்.
திருச்சி திராவிடர் கழக ஆண்டு விழாவில் தொடங்கி சேலம் மாநாட்டிலிருந்து சென்னை புலவர் மாநாட்டுவரை பெரியாரை அருகில் வைத்துக் கொண்டே அவருடைய தவறுகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டினேன். அதுவும் அப்போதெனும் அவர் திருந்தமாட்டாரா? என்ற ஆசையினாலேயே ஆகும். நீங்கள் அப்போது அதை ஒப்பினீர்களா? என்பது எனக்குத் தெரியாது.
நீங்கள் வாழ்த்தும் போது நானும் வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள். நீங்கள் தூற்றும் போது நானும் தூற்ற வேண்டுமென்று ஆசைப் படுகிறீர்கள். பலரும் கல்லால் அடிக்கும்பொழுது நானும் கல்லால் அடிக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுவது நேர்மையும் ஆகாது; அறமும் ஆகாது.
ஒரு தோழர் ஈரோட்டுப் பண்டார சன்னதிகளைப் பற்றிய தங்கள் கருத்து என்ன என்று கேட்டிருக்கிறார். "நீங்கள் தம்பிரான்களாக இருந்து வந்தது தவறு" என்பதுதான் எனது கருத்து.
பெரியாருடைய திருமணத்தைப் பற்றி இவ்வளவு பெரிய எதிர்ப்பும், கிளர்ச்சியும் தோன்றியதைக் கண்டு உள்ளபடியே நான் வியப்படைந்தேன். தள்ளாத வயதில் தனக்கு ஒரு துணை வேண்டுமென்று அவர் எண்ணினார்.
அவர் வயதை, நிலையை, நிலைமையை நன்கு அறிந்தும் ஒரு பெண் துணைவியாக இருக்க ஒப்பினாள். இதில் குறுக்கிட மற்றவர்களுக்கு என்ன உரிமை உண்டு என்பது எனக்கு விளங்கவில்லை.
என்னை அழைத்திருந்தால் நானே இத்திருமணத்தை நடத்திக் கொடுத்திருப்பேன். ஆனால் அதற்கு முதல் நிமிடத்தில் பொதுப்பணம் அனைத்தும் அவரிடமிருந்து பிரிக்கப்பெற்று இயக்கப் பொது நிதியாக ஒரு பாங்கிக்குப் போயிருக்க வேண்டும். இன்றேல் நானும் ஒப்பமாட்டேன். பணம் அவரிடமிருந்து பிரிக்கப்பெற்ற பிறகு மணம் நடந்திருக்குமா? நடக்காதா? என்பது எனக்குத் தெரியாது. அது அவர்களின் நட்பைப் பொறுத்தது.
ஈ.வே.ரா. அவர்களின் வாழ்வில் கிழ மணம் அவர் செய்த ஒரு சிறிய தவறு. இதில் ஆத்திரப் படக்கூடியது எதுவும் இல்லை. அரசாங்க திருமணப் பதிவாளரிடம் தன் கிழமணத்தை மட்டும் அவர் பதிவு செய்யவில்லை. தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்பதையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார். அதைக் கண்டு வேண்டுமானால் வெட்கப்படலாம். பகுத்தறிவு வாதி என்ற சொற்றொடரை விலக்கும்படி வாதிடவும், வழக்கிடவும் பகுத்தறிவாளர்களுக்கெல்லாம் உரிமை உண்டு. இதைத்தவிர வேறு ஆத்திரப்படக்கூடியது எதுவும் இக்கிழ மணத்தில் இல்லை.
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தை மூடி, சாத்தான்குள இராகவனை வெளியில் அனுப்பிவிட்டு, கழகப் பங்கு பணங்களையும், நூற்பதிப்புக் கழகத்தையும் அவரே உரிமையாக்கிக் கொண்டார். என்றபொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
"விடுதலை" பத்திரிகை நட்டத்தில் நடைபெறுகிறதென்றும்,
கட்சி வேலை செய்வதற்குப் பணம் இல்லையென்றும், பணக்காரர்களிடம் போய் பணம் வசூலித்து வந்து, வந்த பணத்தைப் பத்திரிகையில் வெளியிடாமல் இருந்தபொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
கட்சிப் பணத்தைக் கட்சியின் பேரால் எந்த பாங்கியிலும் போடாமல் கட்சிக்கு என்று பொருளாளரையும் ஏற்படுத்தாமல், மாநாட்டில் ஏற்படுத்தும் கட்சிக் காரியதரிசிகளிடம் கூட பணமோ, கணக்கோ ஒன்றும் கொடாமல் அவற்றை அவர் சொந்தமாகக் கருதி வைத்து வந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களிடம் மாதாமாதம் ரூபாய் 100. முதல் தேதியன்று செக் மூலம் வாங்கிக் கொண்டிருந்தபொழுது அவரை வாழ்த்தியும், அதை அவர் நிறுத்திவிட்டபொழுது தூற்றியும் வந்தபொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
கட்சித் தொண்டர்கள் கட்சிப் பணக்காரர்கள் மேல் குறை சொல்லும்பொழுது "என்ன பண்ணுகிறது. அவர்களை மெல்ல மெல்லதான் ஒழித்துக்கட்டவேணும்" என்று கூறுவதும், பிறகு பணக்காரர்களிடம், அவர் பண வசூலுக்குப் போகும்போது அவர்கள் கட்சித் தொண்டர்கள் மீது குறை சொன்னால் "அந்த அன்னக்காவடிப் பசங்களைப்பொருட்படுத்தவேண்டாம், அவன்களுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?" என்று கூறுவதுமாக இருந்து வந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
ஜஸ்டிஸ் கட்சிக்குச் சொந்தமான "விடுதலை" பத்திரிகை, பிரஸ், மெஷின், சொத்து முதலியவைகளை தான் வைத்துக்கொண்டு, அக்கட்சியை அடியோடு ஒழித்து, அதன் பெயரையே திராவிடர் கழகம் என மாற்றிவிட்டு பிரஸைத் திரும்பக் கேட்ட ஐஸ்டிஸ் கட்சிக்காரனை நோக்கி "அதைக் கேட்க நீ யார்?" என்று துணிந்து கேட்டபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும், வரவில்லை.
கட்சிப் பத்திரிகையாகிய 'விடுதலை' பத்திரிகையை கட்சிக்காக என்று நடத்தாமல் அதை அரசாங்கத்திற்கு வாடகைக்கு விட்டு மாதம் ஒன்றுக்கு ரூ.750 வாடகை வாங்கிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்த பொழுது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
"விடுதலை" பத்திரிகைக்குத் திடீரென அதன் சொந்தக்காரியாக K. அரசியல் மணி அம்மையாரை நியமித்தபொழுது, அதை ஒரு ஆண் என நம்பி சிலர் ஏமாறட்டும் என்று எண்ணி சூழ்ச்சியாக K.A. மணி என்பவரால் அச்சியற்றி வெளியிடப்பட்டது என்று 'விடுதலை'யிலேயே வெளியிட்டபொழுதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
திருவாளர்கள் ஆர்.கே.சண்முகம், W.P.A. சௌந்திரபாண்டியர், V.V.இராமசாமி, பி.டி.இராஜன் போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்களையெல்லாம் தூற்றியபொழுதும், மறைமலை அடிகள், உமா மகேசுவரம், M.L.பிள்ளை, S.S.பாரதியார். நாட்டாரய்யா ஆகிய தமிழ்த் தலைவர்களையெல்லாம் தூற்றியபொழுதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
பொதுப்பணத்தைத் திரட்டி சொந்தப் பெயரில் சொத்து வாங்கி சொந்தப் பெயரால் வாடகைக்கு விட்டு வருமானம் தேடத் தொடங்கிய போதே உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
சென்னை மாகாண தமிழர் சங்கத்தின் பேரால் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில், பண முடிப்புகளை சொந்த முடிப்புகளாக வாங்கிக் கொண்டு, பணமுடிப்பு வேலை முடிந்ததும் இந்தி எதிர்ப்பு தமிழர் சங்கத்தை மறைத்து ஒழித்தபோதும், தமிழ்க் கொடியைத் தூற்றி அழித்தபோதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதைத் தடுத்து ஒழித்தபோதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
"தமிழ், தமிழர், தமிழரசு என்று கூறுகிறவர்கள் அயோக்கியர்களாக இருக்கவேண்டும். அல்லது பித்தலாட்டக்காரர்களாக இருக்கவேண்டும். அவர்களைக் கருங்காலிகள் என்றே கூறுவேன்" என்று கூறியபொழுதும் அவற்றைக் கொட்டை எழுத்தில் "விடுதலை"யில் வெளியிட்டபொழுதும் உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
ஆரிய நாட்டிலிருந்து அடியோடு பிரிக்கப்பெற்ற தனித்து இயங்கப் போகின்ற திராவிட நாட்டுக்கு ஒரு வாரிசு நியமிப்பது எப்படி என்று ஆரியரிடமே போய் ஆலோசனை கேட்டு மீண்டு வந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
'அடைந்தே தீருவோம் திராவிட நாடு' என்று அடிக்கடி கூறிக்கொண்டே அரசியல் கழகமல்ல திராவிடர் கழகம் என்று அடுத்தடுத்துக் கூறிவந்தபோது உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
தன்னை சர்வாதிகாரி என்று வெளிப்படையாகக் கூறிக்கொண்டே பொய்யாக ஒரு நிர்வாகக் கமிட்டியை தானே உண்டாக்கி வைத்துக் கொண்டு கழகம் என்றும், கமிட்டி என்றும், தீர்மானம் என்றும் சொல்லி ஏமாற்றிக்கொண்டும், அத்தகைய கமிட்டியில் கூட வரவு செலவு கணக்குகளை மாதா மாதாம் ஒப்புவிக்காமலும் இருந்து வந்தபொழுது உங்களுக்கு ஆத்திரம் தோன்றியிருக்க வேண்டும். தோன்றவில்லை.
ஆச்சாரியார் அவர்களோடு அந்தரங்க நட்புகொண்டு, மறைமுகமாக உறவாடிக்கொண்டே தமிழ்நாட்டு மக்களை, தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒன்றுசேர விடாமல், தமிழ்நாட்டு அரசியலை வளரவிடாமல், தேர்தலிலும் நிற்க விடாமல் செய்து கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் உணர்ச்சியைத் தவறான வழியில் திருப்பிப் பாழாக்கி வந்ததைக் கண்டு உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்கவேண்டும். வரவில்லை.
ஆந்திரம், கேரளம், கன்னடம், துளுவம் சேர்ந்துதான் திராவிடநாடு என்று கூறிக்கொண்டே அவர்களின் ஒப்புதல் கேளாமல் திராவிட நாடு பிரிந்துவிடும் என்று ஒருபுறம் கூறுவதும், மறுபுறம் தமிழ்நாடு தான் திராவிடநாடு, திராவிட நாடுதான் தமிழ்நாடு என்று கூறி தமிழ்நாட்டிற்கு வேறு பெயரும், தமிழனுக்கு மாறு பெயரும் வைத்து அழைப்பதும் கண்டு உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
சுயமரியாதை இயக்க வேலைகளை அவர்விட்டு விட்டதாலும், இயக்கத்தில் ஒழுங்குமுறை இல்லாததாலும் சுயமரியாதைத் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டிவீரன்பட்டியில் ஒன்றுகூடி இயக்கத்தை பதிவு செய்து வேலை செய்ய முன் வந்தபோது அவர்களை போலிகள் என்றும், இயக்கத்தைப் போலி சுயமரியாதை இயக்கம் என்றும் பழிதூற்றி திருச்சியில் சுயமரியாதை மாநாடு நடத்தி, அவர்களையும் வேலைசெய்ய விடாமல், தானும் செய்யாமல் அவர் சுயமரியாதையை, இயக்கத்தை மறைத்து விட்டதைக் கண்டு உங்களுக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். வரவில்லை.
"என்னைப் பின்பற்றுகிறவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டியதில்லை; முட்டாள்களாகத் தான் இருக்க வேண்டும்; பகுத்தறிவைக் கூட கொஞ்சம் அடகுவைத்து விட்டுதான் என்னைப் பின்பற்ற வேண்டும்" என்று தூத்துக்குடி மாநாட்டில் துணிவாகக் கூறியபொழுது உங்களுக்கு ஆத்திரம் உண்டாயிருக்கவேண்டும். உண்டாகவேயில்லை.
'நாட்டில் நம் கழகத்திற்குத்தான் செல்வாக்கு இருக்கிறது' என்று ஒரு புறம் கூறிக்கொண்டே மறுபுறம் அதே கூட்டத்தில் 'எவன் நம்மை மதிக்கிறான்; எவன் நம்மை மதிக்கிறான்' என்று கூறிக்கொண்டும் இருந்தபோது நீங்கள் ஆத்திரப்பட்டிருக்க வேண்டும். ஆத்திரப் படவில்லை.
திராவிட நாட்டில் யோக்கியன் ஒருவனும் இல்லை என்று எழுத்திலும், சொல்லிலும் வெளிப்படையாகக் கூறிக்கொண்டே திராவிட நாட்டை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்கப் போகிறேன் என்று கூறியபொழுது "அந்த நாட்டை எந்த அயோக்கியனுக்காகப் பிரிக்கப்போகிறீர்கள்?" என்று ஆத்திரமாகக் கேட்டிருக்கவேண்டும் கேட்கவில்லை.
இதற்கெல்லாம் உங்களுக்கு உண்டாகாத ஆத்திரம் இக்கிழமணத்தைக் கண்டு உண்டாவது வியப்புக்கு உரியதாக யிருக்கிறது.
இத்தனைக்கும் சும்மாயிருந்த நீங்கள் இதைக் கண்டும் சும்மாயிருக்கலாகாதா?
பெரியார்கள் பலரும் சும்மா இருப்பதே சுகம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.
இப் பெரியாரும் சும்மா இருக்க வேண்டுமென்றுதான் உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீங்களும் சும்மாயிருந்து பாருங்கள். ஆனால் அவர் சும்மா இருக்கமாட்டார்!
=================================
-தமிழர் நாடு இதழ்
1 ஆவணி 1980 (17.08.49)
நன்றி: பேராசிரியர் கோ.வீரமணி தொகுத்த " கி.ஆ.பெ.வி.யின் தமிழர் நாடு"
காவ்யா பதிப்பகம் ( முதல் பதிப்பு 1995)
====================================
Comments
Post a Comment