கால்டுவெல் கட்டமைத்த பொய்மைத் திராவிடம் தமிழ்மொழிக்கு எதிரானது!

கால்டுவெல் கட்டமைத்த பொய்மை திராவிடம் தமிழ்மொழிக்கு எதிரானது!
======================================

 இராபர்ட் கால்டுவேல் பிறந்த நாளை முன்னிட்டு அவர் "தமிழுக்குச் செய்த சாதனை பாரீர்" என்று திராவிடவாதிகள்  முழங்குகிறார்கள். 

கால்டுவெல் தமிழுக்கு செய்த நன்மையை விட தீமையே அதிகம். கால்டுவெல் கண்டு பிடித்த திராவிடம் தமிழுக்கும், தமிழினத்திற்கும் கேடு செய்த வரலாற்றை சொல்ல மாட்டார்கள்.

ஏனெனில் திராவிடத்தின் குல தெய்வமாக கால்டுவெல்  திகழ்வதால் கைக்கூப்பி வணங்குவதைத் தவிர திராவிட வாதிகளுக்கு வேறு வழியில்லை.

திராவிடக் கருத்தியலுக்கு  ஏற்பட்ட நெருக்கடியை  கால்டுவெலை கொண்டாடுவதன் மூலம் பொ.வேல்ச்சாமி, இரவிக்குமார்  போன்றவர்கள் மூடி மறைக்கவே முயல்கிறார்கள்.

கால்டுவெல் கண்டுபிடிப்பான திராவிடத்தை எத்தனை முறை கழுவி ஊற்றினாலும் திருந்த மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். கால்டுவெல் கட்டமைத்த பொய்மை திராவிடத்தை வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் மீண்டும் அடித்து நொறுக்குவோம்.

கால்டுவெல் தமிழிலிருந்து பிரிந்து ஆரியமாகிப் போன மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளையும் இணைத்து "திராவிடக் குடும்பமொழிகள்" என்று பெயரிட்டு அழைத்ததை தமிழ்த்தேசியர்களாகிய நாம் ஏற்க முடியாது.

ஏனெனில்,  திராவிடம் என்பது ஒரு தேசிய இனத்தையோ, ஒரு தேசிய மொழியையோ, ஒரு தேசியப் பண்பாட்டையோ குறிக்கும் சொல் அல்ல. அது மட்டுமன்றி, திராவிடம் என்பது பழந் தமிழ் இலக்கியங்களில் எங்கும் காணப்பெறாத சொல்லாகும். சங்க இலக்கிய நூல்களில் ஆரியம், தமிழ், தமிழ்நாடு, தமிழன் போன்ற சொற்களே மிகுதியாக உண்டு. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் நூலில் கால்டுவெல் தமிழ் நூலில் இல்லாத அந்த திராவிடச் சொல்லை ஒரு வழியாய்  அலைந்து திரிந்து ஆரியர்களின் நூலான மனுஸ்மிருதியில் தேடிக் கண்டு பிடித்ததாக ஒப்புக் கொள்கிறார்.

மனுஸ்மிருதி ஆரிய தர்மக் கோட்பாட்டை நிலை நிறுத்தும் சமஸ்கிருத நூலாகும். திராவிடர் என்றால் யாரென்பதை மனுஸ்மிருதி பின் வருமாறு கூறுகிறது: "நான்கு வர்ணத்தார்களில் ஒரு பிரிவினராகிய சத்திரியர்கள் தங்கள் புனிதச் சடங்குகளை செய்ய மறுத்தும், பார்ப்பனர்களை புறக்கணித்தும் வாழ்ந்து வந்தால் அவர்கள் கீழ்நிலை அடைந்த ஒரு இனமாக கருதப்படுவர். அப்படி கருதப்படுவோரே  திராவிடர் என்போராவார்." 

மேலும், கால்டுவெல் கூறுகிறார்: "மனுஸ்மிருதியில் நான் காணும் சிறந்த சொல் இதுவே என்றாலும் அதுவும் குழப்பத்திற்கு    அப்பாற்பட்டதாக இல்லை. அது தகுதிபாடுள்ள சொல் தான். தமிழ் என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் 'திராவிட' என்பதால் இச்சொல் 'திராவிடர்' என வழங்கப்பெறும் மக்கள் வாழும் நாட்டையும் அம்மக்கள் வழங்கும் மொழியையும் ஒரு சேரக் குறிக்கும்"

 கால்டுவெல் கூற்றுப்படி  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துதம், கோதம், கோண்ட் போன்ற மொழிகள் தோன்றுவதற்கு ஒரு மூல மொழி (Proto language) இருந்திருக்கிறது. அதிலிருந்து உருவானது தான் மேற்கண்ட மொழிகள். இவற்றில் தமிழும், தெலுங்கும் அந்த மூலமொழியில் தோன்றிய மூத்த மொழிகள். தெலுங்கிலிருந்து கன்னடமும், தமிழிலிருந்து மலையாளமும் பிறந்தன. அந்த மூலமொழிக்கு ஒரு பொதுப்பெயர் தேவைப்பட்டது. அதை வடமொழி நூலான மனுஸ்மிருதியில் எடுத்துக் கொண்டார் கால்டுவெல். அது தான் திராவிடம். அது தான் Proto Dravidian language மூலத் திராவிடமொழி.

அவர் கருத்துப்படி ஒரு மொழிக் குடும்பத்தின் பெயர் தான் திராவிடம். சமஸ்கிருத மொழிக் குடும்பம் இருப்பதால் "சமஸ்கிருதர்" என்று ஓர் இனம் இல்லையோ, அதுபோல் திராவிடமொழிக் குடும்பம் என்று இருப்பதால் "திராவிடர்" என்று ஓர் இனம் இருக்க முடியாது. திராவிடர் என ஒரு மரபினம் இருந்ததாக எந்த வரலாற்று ஆதாரங்களை வழங்கவும் முன்வராமல் தமிழர்களை திராவிடர் என்று கால்டுவெல் அழைத்தது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் "தமிழ் வரலாறு" எனும் நூலில், 
 தமிழ், தமிழர், தமிழம் என்பதை சரியாக ஒலிக்கத் தெரியாமல் அயல் இனத்தவராகிய ஆரியர் த்ரமிள, திராவிட என்று அழைத்து வந்தனர். தஞ்சாவூர் என்று ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர்கள் டேஞ்சூர் என்று கொச்சையாக அழைத்து வந்ததைப் போல ஆரியர்களும் த்ரமிள, திராவிட என்று கொச்சையாக அழைத்தனர்" என்பார்.

மேலும், "கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்" எனும் நூலில், தமிழையும் சேர்த்து திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் பெயரிட்டதை வன்மையாக மறுத்தார். தமிழைத் தனியாக குறிக்க வேண்டுமென்றும் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளையே திராவிட மொழிகளாக குறிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பாவாணர் காலத்தில் வாழ்ந்து வந்த தந்தை பெரியார் மேற்கூறிய பாவாணரின் கூற்றுகளை ஏற்று நடக்க முன் வரவில்லை.

கால்டுவெல் போட்ட 'திராவிட' நச்சு விதைக்கு பெரியார் நீருற்றி செடியாக்கினார். அவற்றை அண்ணா மரமாக்கினார். அவரின் வாரிசுகள் பழம் பழுக்க வைத்து தமிழர்களை உண்ணப் பழக்கி  விட்டனர். தவறு, தமிழர்களை பாழாக்கி விட்டனர் என்பதே சரி.

கால்டுவெல்  பிறந்த இந்நாளில் அவர்  எழுதிய திராவிட வரலாற்றுத் தவறை திருத்தியெழுதுவோம்.!

எமது தேசிய இனம் தமிழர்... எமது தேசியமொழி தமிழ்... எமது தேசம் தமிழ்த்தேசம்... என்றே  எங்கும் எப்போதும்  எழுதிடுவோம்! முழங்கிடுவோம்!

- கதிர் நிலவன் 

======================================

தரவுகள்: தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதிய "திராவிடம் தமிழ்த்தேசியம்" நூல்.

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்