திராவிட நாடு திராவிடருக்கே! ஈவெரா மாற்றியது ஏன்? - கவி.கா.மு.செரீப்
தமிழ்நாடு எல்லை மீட்புப் போராளி
கவி.கா.மு.செரீப் நினைவு நாள்
7.7.1994
===================================
தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?
- கவி.கா.மு.செரீப்
தமிழ்....தமிழர்....தமிழ் நாட்டை... திராவிடம்...திராவிடர்... திராவிட நாடு... என்று ஈவெரா மாற்ற வேண்டும் என்று சொன்னது பொருந்தாக் கூற்று.
பிராமண எதிர்ப்புக்காக ஈவெரா திராவிடத்தை தூக்கிப் பிடித்தார் என்பதை ஏற்க முடியாது என்பதை 1954ல் "தமிழரசுக் கழகம் ஏன் வந்தது" என்ற தலைப்பில் கா.மு.செரீப் தெளிவாக விளக்கியுள்ளார். )
திராவிட நாடு திராவிடருக்கே !
ஈவெரா முழக்கத்தை மாற்றியது ஏன்?
==================================
தமிழ்நாட்டை " திராவிட நாடு" என்று மாற்றிக் குரல் கொடுக்க ஆரம்பித்ததற்கு அவர்கள் சொல்லும் காரணம் தமிழ்நாடு என்றால் அது தமிழர்கள் அனைவருக்கும் உரிய நாடு ஆகிறதாம்.
தமிழருக்குரிய நாடு என்று ஒப்புக் கொண்டுவிட்டால் " நாங்களும் தமிழர்கள் தான்" என்று கூறி, பிராமணர்களும் தமிழகத்தில் இடம் பெற்று நிலைத்து விடுவார்களாம்!
எனவே, "திராவிட நாம் திராவிடருக்கே" என்று மாற்றிக் கொண்டார்களாம்! இது இவர்கள் வெளிப் படையாகக் கூறும் காரணம். ஆனால் உண்மையாள் காரணம் இதுவல்ல.
"திராவிட நாடு திராவிடருக்கே" என்று மாற்றிக் கொண்டதின் உண்மைக் காரணத்தை ஆராயுமுன் மாற்றம் சரிதானா என்பதை ஆராய வேண்டும்.
"தமிழ்நாடு தமிழருக்கே!" என்ற கோரிக்கையில் தமிழ்நாடு தமிழருக் குரியது என்பது மட்டுமல்லாமல், அந்தத் தமிழ்நாட்டின் எல்லை வடக்கே வேங்கட மலையுடன் முடிகிறது. என்ற கருத்தும் சேர்ந்தேயிருக்கிறது.
"திராவிட நாடு" என்று மாற்றும் போதோ, அதன் வடவெல்லை விந்தியம் வரையிலும் நீள்கிறது. தமிழகத்தின் மேற்கெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையுடன் முடிகிறதென்றால் திராவிட நாட்டின் மேற்கெல்லை கன்னட - கேரள நாட்டையும் தாண்டி மேலைக் கடல்வரை நீண்டு செல்கிறது!
சிந்திக்கட்டும் திராவிடர்கள்! தமிழ்நாடு என்றால் பிராமணனும் பங்குகொள்ள வந்து விடுகிறான் என்பதற்குப் பயந்து கன்னட, மலையாள, ஆந்திர நாட்டையும் அதற்கு அப்பாலுள்ள மஹாராஷ்டிரத்தையும் தமிழன் ஆதிக்கம் கொள்ள நினைப்பதா?
பயிரை மாடு மேய்ந்துவிடும் என்பதற்காக வேலி அடைக்கிறேன் என்று கூறி, பக்கத்துக் கொல்லையையும் சேர்த்து அடைத்தால் கொல்லைக்காரன் சும்மா விடுவானா?
எனவே பிராமணர்களுக்குப் பயந்து, தமிழ்நாட்டை திராவிட நாடாக மாற்றியதாகக் கூறுவது பொருந்தாக்கூற்று. அது பொய்யினும் பொய்!
1937 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது சுயமரியாதைக் கழகத் தலைவர் ஈ.வே.ரா. யாரையும் கேட்காமல் தன் கட்சியை ஐஸ்டிஸ் கட்சியுடன் இணைத்து விட்டார். ஆத்திரம் கொண்ட தோழர்களில் பலர் வெளியேறினார்கள்.
வெளியேறுபவர்களைப் பற்றி கவலை கொள்ளாத ஈ.வே.ரா. ஐஸ்டிஸ் கட்சியார் தந்த பணத்திற்காக தேர்தல் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டார்.
தேர்தலிலே கட்சி மண்ணைக் கவ்விற்று. மான உணர்ச்சி சிறிதளவு இருந்த காரணத்தால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பொப்பிலிராஜா, கட்சியை விட்டு விலகிக் கொண்டார். சீந்து வாரற்றுக் கிடந்த ஜஸ்டிஸ் கட்சியின் தலைமைப் பதவி ஈ.வெ.ரா. தலைமையில் விழுந்தது.
கட்சிப் பத்திரிகையான விடுதலை, அதன் அச்சகம், கட்சி நிதி எல்லாம் ஒப்படைக்கப்பட்டன.
இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் மந்திரிசபையும் வந்தது. காங்கிரசை விட்டு ஓடிய ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சி தலைமையை ஏற்கும் சமயம் பார்த்து, காங்கிரஸ் ஆட்சி நாட்டிலே ஏற்படுவதென்றால் அவரால் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? "காங்கிரஸ் ஆட்சி ஒழிக" என்று "ஒழிகக் குரல்" கொடுத்தார்.
காங்கிரசுக்குத்தான் நாட்டில் செல்வாக்கிருக்கிறது என்பதை உணர்ந்த பொப்பிலிராஜா, மானத்துடன் கட்சியை விட்டு வெளியேறினாரென்றால் அந்தக் கட்சிக்கு அடுத்தத் தலைவராக வந்த ஈ.வே.ரா. "காங்கிரசை ஒழித்தே தீருவேன்" என்று துடை தட்டினார்.
வெறும் வாய் மெல்பவனுக்கு அவல் கிடைத்தால் சும்மா விடுவானா என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அதுபோல சும்மா காங்கிரசை திட்டிக் கொண்டிருந்த ஈ.வே.ரா. முன்பு, இந்திப் பிரச்சினை வந்து வாய்த்தது! சும்மாயிருப்பாரா?
தேசிய மொழியாக இந்தியை இராஜாஜி கொண்டு வந்ததும் ஈ.வே.ரா.விற்கு தமிழ்ப் பற்று உடம்பைப் பொத்துக்கொண்டு வெளிப்படலாயிற்று.
"தமிழர்களே விழியுங்கள்! எழுங்கள்! சுத்துங்கள்!" என்ற சொற்களுக்கிடையே தவறி, "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற சொல்லும் அவர் வாயிலிருந்து வந்து விட்டது. அதைப் பிடித்துக் கொண்டு அவர் தொண்டர்கள் சுத்த ஆரம்பித்தார்கள்.
இந்தி ஒழிந்தாலும் ஒழியா விட்டாலும் காங்கிரஸ் கட்சிப் பதவியை இராஜிநாமா செய்தது. ஈ.வே.ரா.வின் சிஷ்யர்களும் கத்துவதை நிறுத்திக் கொண்டார்கள்.
1939இல் காங்கிரஸ் மந்திரிசபை இராஜிநாமா செய்தது. அதை அடுத்து திருவாரூரிலே ஐஸ்டிஸ் கட்சி மாநாடு கூடிற்று. இந்தி எதிர்ப்பிலே ஈ.வே.ரா.வை ஆதரிக்காத கன்னட, மலையாள, ஆந்திரப் பிரமுகர்களெல்லாம் திருவாரூர் மாநாட்டிற்கு வந்திருந்தனர்.
ஜஸ்டிஸ் கட்சி சென்னை மாகாண கட்சி அதை உன்னிடம் ஈவேராவிடம் ஒப்பளித்தால், தமிழ்நாடு தமிழருக்கே என்ற கூக்குரலிற்கு, நீர் அதன் பணத்தை உபயோகிப்பதா?
அப்படியானால் நீண்ட நாளாக நாங்கள் கூறிவரும் "ஆந்திர நாடு ஆந்திராருக்கே! கன்னட நாடு கன்னடருக்கே! மலையாள நாடு மலையாளிகளுக்கே!" என்ற கூப்பாட்டிற்கும் ஜஸ்டிஸ் கட்சிப் பணத்தில் பங்கு வேண்டும் என்றனர்.
பண ஆசை பிடித்த ஈவேராவிற்கா மனம் வரும்? யோசித்தார்!
தமிழ்நாடு தமிழருக்கே என்பதைக் கைவிட்டார் . அதே நேரத்தில் ஆந்திரா கன்னட மலையாளிகளின் மூக்கையும் உடைக்கத் திட்டமிட்டார் ! மூளை வேலை செய்தது .
ஜஸ்டிஸ் கட்சியை தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக மாற்றினார். கன்னடிய, மலையாள பிரதிநிதிகள் வெகுண்டு வெளியேறினர் .
தமிழ்நாடு தமிழருக்கே என்பதை மாற்றக் கூடாது என்றார் திருச்சி விஸ்வநாதம்; " உனக்கும் பெப்பே" என்றார் ஈவேரா.
இந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தான் பிறகு நடந்த சேலம் மாநாட்டிலே திராவிடர் கழகமாயிற்று!
-கவி கா.மு.ஷெரீப்
நன்றி:
"தமிழ்த் தேசியத்தின் வேர்கள்" நூலிலிருந்து,
பன்மை வெளி.
Comments
Post a Comment