திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல்லா? - சுப.வீ.க்கு மறுப்பு!

திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல்லா? - சுப.வீ.க்கு மறுப்பு!
====================================

திராவிடம் என்பது கருத்தியல், திராவிடம் என்பது கோட்பாடு, திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிர்ச் சொல் என்று தோழர் சுப.வீ. உருட்டுவதில் ஏதாவது சான்று உண்டா?

திராவிடப் பிதா மகன் ஈ.வெ.ரா . அவர்கள் தெலுங்கர், கன்னடர்,   மலையாளிகளுக்காக " தமிழர்" என்ற சொல்லை மறுத்து " திராவிடர்" என்ற ஆரிய உருவாக்கச் சொல்லைத் தமிழர் மீது திணித்தார் என்பதுதான் உண்மை.

இதற்கு சான்று தருகிறோம்;

சேலம் செவ்வாப் பேட்டையில் ஈ.வெ.ரா.பேசி குடியரசு இதழில் 29.01.1944ல் வெளியாகி (ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி-2, இயக்கங்கள் 1 பக்கம் 889) 

”திராவிடச் சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது ’தமிழர்’ என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும்.

இங்கே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர். 

இனி எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள் என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனெனச் சொல்லிக் கொள்ள ஒப்புக் கொள்கிறேன். ஆனால், எல்லாக் கன்னடியரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 

தெலுங்கர்களும் அப்படியே. திராவிடச் சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம், நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும். 

” எனவே, இத்தகைய கேவல நிலையொழிய, ஜஸ்ட்டிஸ் கட்சி திராவிடக் கட்சியாக மாற வேண்டும். சேலத்தில் நடைபெற இருக்கும் மாகாண மாநாட்டில் இதையே முதல் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டும்” 

இந்தப் பேச்சில் ’திராவிடம்’ என்பது ஆரிய எதிர்ப்புச் சொல்  என்று எங்கேயும் அவர்  குறிப்பிடவே வில்லை. 

தமிழர் என்றால் கன்னடர்களும் தெலுங்கர்களும் , மலையாளிகளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே  திராவிடத்தை ஈவெரா தூக்கிப் பிடித்தார். 

ஈவெராவின் திராவிடக் கருத்தியல் இன்றைய இளைய தலைமுறையினரிடம் சுக்கு நூறாக உடைபட்டு வருகிறது.

ஈவெரா திராவிடத்திற்குச்  சொன்ன  விளக்கத்தைச் சொன்னால் அது இன்றைய தலைமுறையினரிடம் எடுபடாது என்பது சுப.வீ.க்கு நன்றாகவே தெரியும். அதன் காரணமாக நாள்தோறும் திராவிடத்திற்கு புதுப் புது விளக்கங்கள் தந்து குழப்பத்தை உருவாக்க முயல்கிறார்.

சுப.வீ. நடத்தும் அமைப்புக்குப் பெயர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையாம்! ஆந்திரத்தில் எங்காவது திராவிடத் தெலுங்கர் பேரவை உண்டா? கர்நாடகத்தில்  திராவிட கன்னடர் பேரவை உண்டா? கேரளத்தில் திராவிட மலையாளப் பேரவை உண்டா? 

தெலுங்கனோ,  கன்னடனோ, மலையாளியோ விரும்பாத திராவிடத்தை தமிழரோடு ஒட்டுப் போட்டு திராவிட இயக்கத் தமிழர் பேரவை  நடத்துவது ஏன்? 

திராவிடக் கருத்தியலை அறிவார்ந்த முறையில் தர்க்கம் நடத்தி தரவுகளோடு அறிவுத் தளத்தில் சுக்கு நூறாக உடைத்துப் போட்டவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்.

அதன் காரணமாக நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் , ஏனைய தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் பலரும் அவரை தமிழ்த் தேசியத்தின் தத்துவ ஆசானாகப் போற்றுகின்றனர்.

சுப.வீ. போல திராவிட ஒட்டுத் திண்ணையில் குடித்தனம் நடத்தி வருபவர் அல்ல; 1990களில்  சுப.வீ.யோடு சேர்ந்து தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்திய காலம் முதல் இன்றுவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வித சமரசமும் இன்றி, தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக தனி இயக்கம் நடத்தி வருபவர்தான் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்.

திராவிடம் என்ற பெயரில் ஓர் இனமும் இருந்ததில்லை, ஒரு மொழியும் இருந்ததில்லை, திராவிடம் என்ற நாமகரணம் ஆரியத்தின் கைச்சரக்கு! ஐரோப்பியரான கால்டுவெல் ஆரியத்திடமிருந்து கடன்வாங்கிய பொய்ச்சரக்கு! அன்று சென்னை மாகாணத்தில் ஆந்திரத் தெலுங்கரின் ஆதிக்கத்திலிருந்த நீதிக்கட்சியின் தலைமையை ஏற்க பெரியார் ஈ.வே.ரா., தேர்ந்தெடுத்த போலிச்சொற்கட்டு திராவிடம்! 

- என்று தலைவர் பெ.மணியரசன் பேசி வருவதை திராவிடத்தால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் பெயரை உச்சரித்தால் படியளக்கும் அறிவாலயம் கோபித்துக் கொள்ளும் அல்லவா? 

கோபாலபுரத்து நிழலில் இளைப்பாறும் சுப.வீ. அவர்கள்  கடந்த கால வரலாற்றை நினைத்துப் பார்ப்பதில்லை. தமிழ்த் தேசிய இயக்கங்களின் மேடைகளில் சொந்தக் காலில் நின்று முகம் காட்டி பேசியது ஒரு காலம். 

பொது மக்களுக்கு நம்மைத் தெரியுமா? தெரியாதா? என்று நினைத்துப் பார்த்து அப்போது பேசியதில்லை. ஏனெனில், மக்களுக்காக  உழைப்பவர்களுக்கு அந்த கவலை ஒருபோதும் வராது. 

இப்போது நீங்கள் பயன்படுத்தும்  திராவிட மேடையோ பழைய தமிழ்த் தேசிய மேடை அல்ல; திமுகவின் வாரிசு அரசியலுக்கு மேடைப் படிகளில் நின்று கைதட்டி வரவேற்க வேண்டும். அடுத்து முடிசூடும் மன்னர் உதய நிதிக்கும் அடுத்த வாரிசு குட்டி இளவரசர் இன்பநிதிக்கும் புகழாரம் சூட்ட வேண்டும். இதை  எதிர்த்தால் மேடை கிடைக்காது. 

திமுகவின் வெளிச்சத்தில் நிழலாக நின்று கொண்டு ஓசி வெளிச்சம் பெறும் சுப.வீ. அவர்கள் பெ.மணியரசன் அவர்களுக்கு மக்களின் வெளிச்சமில்லை என்று பேசுவது நகைப்பிற்குரியது.

10.02.2002 இல் திருச்சியில்  நடைபெற்ற தமிழர் தேசிய இயக்கத்தின் சிறப்பு மாநாட்டில்,  சுப.வீ. அவர்கள் ஆற்றியத் தொடக்கவுரையில் இப்படி குறிப்பிடுவார்:

"நான் திராவிடத் தேசியத்தை எதிர்க்காமல் இருப்பதற்கு ஒரு உண்மையான காரணம் இருக்கிறது. உயிரோடு இருப்பதை தான் நாம் எதிர்க்க முடியும். திராவிடத் தேசியம் இன்றைக்கு உயிரோடு இல்லை.

( "பேருவம் கொள்ளும் தமிழ்த் தேசியம்" நூலிலிருந்து)

பிறகு ஏன், உயிரோடு இல்லாத செத்த பிணமான திராவிடத்திற்கு  உயிர் கொடுக்க முயல்கிறீர்கள் சுப.வீ ?

- கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்