நாம் திராவிடரில்லை, தமிழரே!
தமிழர் தலைவர்கள் அயோத்திதாசர், இரட்டை மலை சீனிவாசன் முதுகுக்கு பின்னால் ஒழியும் திராவிடம்!
=================================
நம் கையை வைத்து நம் கண்ணை குத்துவது தான் ஆதி திராவிடர் என்ற சொல்லாகும்.
கால்டுவெல் பரப்பிய திராவிடம், திராவிடர் கருத்தாக்கத்தை நம்முடைய தாழ்த்தப்பட்ட தமிழர் தலைவர்கள் அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன், எம்.சி.இராசா போன்றோர் ஏற்றுக் கொண்டது உண்மைதான்.
ஒடுக்கப்பட்ட மக்களை சாதி இழிவிழிருந்து திராவிடம் என்ற சொல் மீட்டு விடும் என்று கருதியதும் உண்மைதான்.
ஒடுக்கப்பட்ட தமிழர்களை சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்ததும் உண்மைதான்.ஆனால், அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழரல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாள ஒடுக்கப்பட்ட மக்கள் யாவரும் தங்கள் இழிவிழிருந்து திராவிடர் என்ற சொல் மீட்கும் என்று ஒருபோதும் கருதவே இல்லை.
1922 ஆம் ஆண்டு நீதிக்கட்சி பிறப்பித்த அரசாணை எண்: 817, 25.03.1922 படி பஞ்சமர் , பறையர் என்று குறிப்பிடுவதை நீக்கி அதற்குப் பதிலாக ஆதி திராவிடர் என்றும், ஆதி ஆந்திரர் என்றும் குறிப்பிடப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
தாழ்த்தப்பட்ட தமிழர்கள் விடுத்த ஆதி திராவிடர் பெயர் வேண்டுகோளை நீதிக்கட்சி ஏற்றுக் கொண்டதை மகிழ்ச்சியாக பெருமையோடு கூறிடும் திராவிட இயக்கத்தவர்கள் சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருமே "ஆதி திராவிடர்" என்று தானே அரசாணை இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வியையும் சேர்த்து கேட்பதில்லை.
இங்கு தான் ஒரு பக்க உண்மை மறைக்கப்படுகிறது. நீதிக்கட்சி தலைவர்கள் பெரும்பாலும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
நீதிக்கட்சி தலைவர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். மொழி அடிப்படையில் தான் தங்கள் இனத்தின் பெயரை குறிப்பிடுவார்கள்.
பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்று கூறிக் கொண்டே மறுபுறம் ஆந்திரா மகா சபையிலும் உறுப்பினராக இருந்து கொண்டு நாங்கள் ஆந்திரர்கள், எங்களுக்கு "விசாலா ஆந்திரம்" தேவை என்று தீர்மானம் நிறைவேற்றிப் போராடி வந்தார்கள்.
சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் என்று நீதிக்கட்சி தலைவர் பொப்பிலி அரசர் இலண்டன் வட்டமேசை மாநாட்டில் கோரிக்கை விடுத்தார்.
1922ல் நீதிக்கட்சி அரசாணை ஆந்திர ஒடுக்குண்டவர்களை ஆதி ஆந்திரர் என்கிறது.1921ஆம் ஆண்டு சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்டோர் 63,70,074 பேர்.இதில் வெறும் 15,025 பேர் மட்டுமே ஆதி திராவிடர் என்று பதிந்துள்ளனர்.
தெலுங்கு, மலையாள, கன்னட மக்கள் ஆதிதிராவிடர் என்று பதியவில்லை.அயோத்தி தாசரோ, இரட்டைமலை சீனிவாசனோ முன்னெடுத்த திராவிடம் என்பது சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுமே இருந்தது. அது தமிழ்ச் சமூகத்தில் எந்த தீங்கையும் விளைவிக்க வில்லை.
ஆனால் , ஈ.வெ.ரா. முன்னெடுத்த திராவிடம் என்பது முற்றிலும் தமிழின அடையாள மறைப்பைச் செய்தது. தமிழன் என்று சொன்னால் பிராமணன் வந்து விடுவான் என்று சொல்லி திராவிடத்தை தமிழ் மண்ணில் கெட்டிபட வைத்தது. தமிழ்மொழியின் தனித்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் நான்கும் தமிழே என்று திரிபுவாதம் செய்தது.
தமிழர் தாயக நிலங்களை அண்டை மாநில தெலுங்கரும், கன்னடரும், மலையாளியும் பறித்து செல்வதற்கு துணை நின்றது.
இந்த வரலாற்று உண்மைகளை திராவிட இயக்கங்கள் மூடி மறைத்து திராவிடம் என்பது பறையரை குறிக்கும் என்றும், இல்லை இது ஒட்டுமொத்த பட்டியலின மக்களை குறிக்கும் என்றும் நம்மிடையே திராவிடம் சண்டையை மூட்டி வருகிறது.
தமிழே நம் மொழி, தமிழரே நம் இனம், தமிழ் நிலமே தமிழர் தாயகம் என்ற பார்வையை ஒடுக்கப்பட்ட தமிழர்களின் இயக்கங்கள் பெறாதவரை திராவிட இயக்கங்களின் சூழ்ச்சிக்கே நாம் இரையாவோம்.
Comments
Post a Comment