ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்
ஈ.வெ.கி.சம்பத்திற்காக காங்கிரசு ஆதரவை விலக்கிக் கொண்ட பெரியார்!

"இரத்தம் தண்ணீரைவிட அடர்த்தி மிகுந்தது" (Blood is thicker than water)
=====================================
1957ஆம் ஆண்டு தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நீதிக்கட்சி பிரமுகர் தமிழரான சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன் போட்டியிட்டார். பெரியாரிடம் அவர் ஆதரவு கேட்ட போது, பெரியார் ஆதரவு தர மறுத்து விட்டார்.
அதே சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிராமணராகிய டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்தார். தமிழரை ஆதரிக்காமல் ஒரு பிராமணரை ஆதரிப்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது இல்லையா? என்று கேட்டால், காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பெரியார் எடுத்த முடிவாகும் .
அதன் காரணமாகவே அங்கு போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரிக்கும் நிலை வந்தது.
எனவே, இதை பிராமணர் - பிராமணர் அல்லாத சிக்கலாக அணுகாமல் காங்கிரஸ் - திமுக எதிரெதிர் போட்டி சிக்கலாக அணுக வேண்டும் என்று பெரியாரிஸ்டுகள் நமக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இதே தென்சென்னையில் மீண்டும் 1962 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வந்தது. அதே பிராமணர் டி.டி. கிருஷ்ணமாச்சாரி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ஈ.வெ.கி.சம்பத்.
அப்போது வழக்கம் போல, பிராமணர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை ஆதரிக்க பெரியார் முன்வரவில்லை.
அப்போது குத்தூசி குருசாமி டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து தலையங்கம் எழுதி, விடுதலை ஏட்டிற்கு அனுப்பினார். இதை பெரியார் வெளியிடாமல் தடுத்து விட்டார். இதற்கு ஒரே காரணம் பெரியாரின் இரத்தப் பாசம் தான். ஈ.வெ.கி. சம்பத் போட்டியிடுவதால், அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டார்.
குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்தை விலகியதற்கு இதுவும் ஒரு காரணம்.
குருவிக்கரம்பை வேலு அவர்கள், "குத்தூசி குருசாமி விலகியது ஏன்?" என்று நூல் எழுதியுள்ளார் . இது குறித்து பின்வருமாறு அந்நூல் விவரிக்கிறது.
"1962ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தென்சென்னைப் பாராளுமன்றத் தொகுதிக்கு காங். வேட்பாளராக திரு. T.T. கிருஷ்ணமாச்சாரியும், தமிழ்த் தேசியக் கட்சி சார்பாக அதன் தலைவர் சொல்லின் செல்வர் E.V.K. சம்பத்தும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் பச்சைத் தமிழர் காமராசரால் நிறுத்தப்பட்டவர் திரு. T.T.K. இத்தேர்தலில் தி.க. மத்திய நிர்வாகக் குழுத் தீர்மானப்படி பெரியார் காங்கிரசை ஆதரித்தார்.
T.T.K.ஐ ஆதரித்துத் தலையங்கம் தீட்டினார் குத்தூசியார். 'விடுதலை' மேலாளராக இருந்த, திரு.சம்பத்தின் உறவினர் ஒருவர், அத்தலையங்கத்தை 'விடுதலை'யில் வெளியிடவில்லை.
செய்தி, பெரியாரின் காதுகளை எட்டியது. இங்கே இரத்தபாசம் குறுக்கிட்டது.
'இரத்தம் தண்ணீரை விட அடர்த்தி மிகுந்தது' (Blood is thicker than water) என்பது பழமொழி.
இதுகுறித்து தந்தை பெரியார் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. குறிக்கோள் ஒன்றையே மூச்சாகக் கொண்ட கொள்கைவேள். குருசாமி அவர்கள், தன் எழுத்துக்கள் அவமதிக்கப்பட்டதாகக் கருதி, தான் இனி "விடுதலையில் எழுதப் போவதில்லை" என எழுதிக் கொடுத்துத் தன் சுயமரியாதையை நிலைநிறுத்தினார்.
இந்த நிகழ்ச்சிதான் குத்தூசியார் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேற இறுதிக் காரணமாய் அமைந்தது. " குத்தூசியார் அவராகவே கழகத்தை விட்டு வெளியேறினாரே தவிர, அவரை எவரும் வெளியேற்ற வில்லை என்பதும் , அவர் வெளியேறக் கழகத்திற்குள்ளாகவே நெருக்கடி தரப்பட்டது என்பதும் உண்மை.
சதி வலை பின்னியோர் இறுதியில் வெற்றி பெற்றனர். குத்தூசியாரும் திரு. தி.பொ.வேதாசலனாரும் " துரோகிகள்" என்று பெரியாரால் முத்திரை குத்தப்பட்டனர்"
(குருவிக்கரம்பை வேலு எழுதிய குத்தூசி குருசாமி விலகியது ஏன் ? நூலிலிருந்து)
பெரியார் கிழித்த கோட்டை தாண்டாதவர் போல , காங்கிரஸ் ஆதரவு நிலையில் இருந்து ஒரு போதும் பின் வாங்காதவர் என்றும், காங்கிரசு வெற்றி பெற உறுதிமொழி எடுத்துக் கொண்ட உத்தம புத்திரர் என்றும், அதன் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன் அவர்களை ஆதரிக்க வில்லை என்றும் பெரியாரிஸ்டுகள் சப்பைக் கட்டுவதைப் பார்க்கும் போது, நமக்கு சிரிப்புதான் வருகிறது.
- கதிர் நிலவன்
Comments
Post a Comment