ஈ.வெ.இரா.பெரியாரும் - இந்தியும்!

ஈ.வெ.இரா.பெரியாரும் - இந்தியும்!

- புலவர் வி. பொ.பழனிவேலனார்

பெருஞ்சித்திரனார் நடத்திய 
" தென்மொழி"யில் எழுதிய கட்டுரை இது! (மார்ச் - 1965).
=====================================

ஈ.வே. இராமசாமிப் பெரியார் 1925 முதல் என் மதிப்பிற் குரியராயிருந்தவர்; தமிழரின் தன்மானத்தைத் தட்டி யெழுப்பியவர். அவர்தம் தன்மான இயக்கக் கொள்கைகளை இன்றுவரை அடியொற்றி நடைமுறையில் பின்பற்றி வருகின்றவன் யான். 

ஆனால் அவர் இன்று மேற்கொண்டுள்ள கொள்கை தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் கேடு பயப்பதாய் உள்ளது . மேலும், 'தமிழ்ப் புலவர்களெல்லாம் குமுக(சமூக) த்திற்கிரண்டகஞ் செய்பவர்கள்' என்றும் கூறிவருகின்றார். இது நனியும் வருந்தற் பாலதே. 

1938-இல் தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார் திரு. இராசாசி. அதைமுனைந்து நின்று எதிர்த்தார் பெரியார் பின்னர், இருப்புப் பாதைப் பெயர்ப் பலகைகளில் முதலில் இந்தியில் பெயர் எழுதப்பட்டிருந்ததை எதிர்த்துக் கரி நெய் (Tar) கொண்டு அழித்தார்; பிறரையும் அழிக்கச் செய்தார். இதனால் பலர் சிறைப்படுத்தப் பெற்றுத் தண்டிக்கப்பட்டனர்.

 அத்தகையப் பெரியார் இன்று 1965 சனவரி 26 முதல் இந்தி தமிழகத்தில் ஆட்சி செலுத்த முற்பட் டுள்ளதை எதிர்க்காமலும், எதிர்ப்பவர்களை ஏளனம் செய்து கொண்டும் உலா வருவது தமிழர்கட்கு எத்துணை மன வேறு பாட்டையும், மனக் கசப்பையும் உண்டாக்கிவிட்டது. 

இதனை அவர் உணரார் போலும். தமிழ்ப் புலவர்கள் இரண்டகம் செய்வோர் என்று கூறிக்கொண்டு இன்று தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் இரண்டகஞ் செய்கிறார் என்றே இயம்பலாம்.

அன்று இந்தியைக் கட்டாயமாகப் படிக்கத்தான் சொல்லப் பட்டது; இந்தி எழுத்துகளில் பெயர்கள் எழுதப்பட்டன. இன்றோ ஆங்கிலம் இருந்த இடத்தில் இந்தி அமர்த்தப்பட்டு விட்டது.

 இவ்வமயம் பெரியார் அமைதியாக இருந்தாலும் பரவாயில்லை; இந்தி வந்தால் என்ன கெட்டுவிடும்? பதின்மூன்று மாநிலத்தார் ஏற்றுக்கொள்ளும் பொழுது நீ (தமிழன்) மட்டில் எதிர்த்தால் என்ன நடக்கும்?" என்று கூறுவது மட்டுமின்றிப் பேராயக்கட்சிக்கு ஒப்போலை வழங்கி, வலுப்படுத்துமாறும் எழுதியும் பேசியும் வருகின்றார்.

 அன்று பேராயக் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என்றவர், இன்று எடுத்துக் கட்டுவேன் என்று கூறி வருகின்றார். இந்தித்திணிப்பை எளிதாகக் கருதி ஏளனக்குரவில் பேசுகின்றார் இவரே தமிழர் தலைவர் என்று கூக்குரலிடுபவர் எண்ணிப்பார்க்க வேண்டாவா? 

அன்று இந்தியை எதிர்த்த பொழுது தமிழர் தலைவர்தான்; இன்று இந்தியை வரவேற்கும் பொழுது தமிழ்க் கொலையர்தான். இதில் ஐயத்திற்கிடமின்று. 

முன்னர் பெரியார் செய்த பெருந்தொண்டு போற்றற் குரியதே. ஆனால், இப்பொழுது அவர் செய்யும் தொண்டு தூற்றற்குரியதே. 

இவ்வாறு ஏட்டிக்குப் போட்டியாக இன்று பெரியார் செய்வதன் உள் கருத்து யாது? அவர்க்கு வேண்டாத தி.மு.க.வினர் இந்தியை எதிர்க்கின்றனர்; அதனால் வரவேற்கின்றார் என்பதைத் தவிர்த்து வேறு எக்காரணமும் இல்லை. திரு இராசாசியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர் என்ற காழ்ப்பும் இருக்கலாம்.

நல்ல செயலை நம் பகைவன் செய்தாலும் பாராட்டுவதுதான் பண்புடைமையேயன்றி எதிர்த்துநிற்பது அறிவுடைமையாகாது; பகுத்தறிவுக்கும் ஒத்ததன்று. 

தி.மு.க.வுக்கும் இராசாசிக்கும் தான் தமிழ் மொழியும் தமிழ் நாடும் உரிமையா? அவர்கள்தாம் அவற்றிற்கு அதிகாரிகளா? மற்றையோர்க்கு எந்த உரிமையும் இல்லையா?

அவ்வாறாயின் திருவாளர்கள் பொ. தி. இராசன், கோ.துரைசாமி, கருமுத்துத் தியாகராசன் கி. ஆ. பெ. விசுவ நாதம், கிருட்டினசாமி பாரதி, இசுமாயில், சி.பா.ஆதித்தன், சா கணேசன், மூக்கையா முதலியோர் 17-1-65-இல் திருச்சி யில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வார்களா?

தமக்குப் பகைவராயுள்ளோர் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பதற்காக இவர் வரவேற்கிறார் போலும். 

இது பகுத்தறி வுடையோர் செயலாகாது. தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் வந்துள்ள பெருங்கேட்டைப் பொருட்படுத்தாமல் காமராசரின் புகழ் பாடிக் கொண்டும் அவர் கட்சிக்குத் துணை நின்று வலுப்படுத்த வேண்டுமென்று கூறிக்கொண்டும் வருவது தமிழர் தலை வர்க்குரிய செயலன்று.

 (தமிழரே இன்னுஞ் சில நாட்களில் இல்லாமற் போவர் என்ற நிலைமை உண்டாகியுள்ள பொழுது அவர்களுக்குத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் இவர்மட்டும் இருந்து விடுவாரா?)

“தமிழ் நாடு தமிழருக்கே" என்று முதல் முழக்கம் செய்த பெரியார் இன்று வாளாவிருப்பது மட்டுமின்றித் தமிழர்க்கே வாளாகவும் இருக்கிறாரே என்பதுதான் எம்மை மிக்க துன்பத்தி லாழ்த்துகின்றது. 

தமது விடுதலை ஏட்டில் "தாய்ப் பால் பைத்தியம்'' என்ற ஆசிரியவுரையில் அவர் எழுதிய கட்டுரையில் கூறியது போன்று, "எனக்குத் தமிழ்ப் பற்றுமில்லை. யான் தமிழனுமில்லை.” என்று கூறுவாராயின் அவரைத் "தமிழர் தலைவர்," என்று கூறுவதில் என்ன பொருள் இருக் கிறது? 

வடக்கரின் கண்காணிகளாக விளங்கும் காமராசரையும் பத்தவச்சலத்தையும் பாராட்டிப் பரிசுகள் பெற்றால் போது மென்று கருதிவிட்டார் போலும். 

இனி, தன்மானக் கொள்கைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் பெரியார் இராமசாமியைத் தமிழர்கள் நம்பிக் கொண்டிருப்பதில் எட்டுணையும் பயனின்று.

ஒருகாலத்தில் பெரியார் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் பாடுபட்டார்; அவரைப் பாராட்டினோம். இற்றை ஞான்று அவர் செய்கை தமிழுக்கும் தமிழர்க்கும் ஊறுவிளைப்பதாக உளது.

 எனவே, அவரை இனியும் போற்றித் திருவகவல் பாடிப் புகழ்வதால் யாது பயன் ? 

இனித் தமிழர் செவிகளில் அவர் தம் அறிவுரையும் விரிவுரையும் இரும்பைக் காய்ச்சி ஊற்றியது போன்று தீங்கு பயப்பனவாம். 

தமிழர்கள் விழிப்புடன் இருந்து பெரியார் பேச்சைக் கேளாது நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்டுழைக்க முனைவார்களாக அமையவிருக்கும் தமிழக விடுதலை இயக்கத்தில் அனைவரும் உறுப்பினர்களாகி உழைக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

(பெரும்பான்மையர் இந்தியை ஏற்றுக் கொள்ளும் பொழுது தமிழனும் அதனை ஏற்றுக்கொள்ளல் வேண்டும் என்று கூறும் பெரியார் 'மிகப் பெரும்பான்மை மக்கள் சமயத்தையும் இறை நம்பிக்கையையும் ஏற்றுக் கொள்ளும் பொழுது, பெரியாரும் அவரியக்கத்தினரும் அவற்றை எதிர்க் காமல் ஏற்றுக்கொள்ளல் வேண்டும்" என்பாருக்கு என்ன விடை கூறுவார்?

 கருத்துப் பரிமாற்றங்களைத் தடை செய் வதை எதிர்த்தும், மக்களின் பகுத்தறிவைத் தூண்டியும் 35 ஆண்டுகளாக இயக்கம் நடத்தி வரும் பெரியார் இன்று இந்தி எதிர்ப்புக் கருத்துகளையும் அவற்றை வெளியிடும் இகழ்களையும் தடை செய்து ஒழித்தல் வேண்டும் என்று கூறுவது எவ்வகையில் பகுத்தறிவாகும்?)

- வி.பொ.பழனி வேலனார் 

(வி.பொ. பழனி வேலனார் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி. பெருஞ்சித்திரனார், தேவநேயப் பாவாணர் ஆகியோரோடு நெருங்கி உறவாடியவர். 

செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் , குறளியம், குத்தூசி, அறிவுப்பாதை, பகுத்தறிவு , விடுதலை , குடி அரசு , தென்மொழி , தமிழ்ப்பாவை , எழுகதிர் போன்ற இதழ்களில் தமிழ் வளர்ச்சி, பகுத்தறிவு தொடர்பான கட்டுரைகள், பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. )

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்