பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

பார்ப்பன அடிமை அண்ணாமலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!
====================================

பெரியார் பண  விஷயத்தில் கறார் பேர்வழி என்று கேள்விப்பட்டுள்ளோம். அது கூட குற்றமில்லை; ஆனால்,  எப்போதும் பிராமணர்கள் எனக்கு எதிரிகள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்  செல்வந்தர்களாக இருக்கக்கூடிய பிராமணர்களிடமும் பணம் கறப்பதில் பெரும் கில்லாடி ஆவார். 

பிராமண செல்வந்தர்களான   எஸ்.எஸ். வாசன், சிம்சன் அனந்த இராமகிருஷ்ணன்,  மாவூர் சர்மா என்று ஒரு பட்டியலே உண்டு. பிராமணர்களை திட்டிக் கொண்டு அவர்களிடமே பணமோ, உதவியோ பெறுவதில் எந்த குற்ற உணர்ச்சியும் அவருக்கு இருந்ததில்லை.

பிராமணர் அல்லாத செல்வந்தர்களிடமும் அப்படியே தான்.  பிராமண எதிர்ப்பை பேசி கறந்து விடுவார்.  திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்களிடம் மாதாமாதம் ரூபாய் 100 ஐ முதல் நாளன்று  காசோலை வாங்கிக் கொண்டு அவரை வாழ்த்துவார்; பிறகு அதை அவர் நிறுத்தி விட்டால்  தூற்றுவதுதான் அவர் பழக்கம். (கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழர் நாடு இதழ் , 17.8.1949) 

இதுபோல் ஒரு முறை அண்ணாமலை அரசர் தமது  60 வது பிறந்தநாள் விழாவின் போது, பிராமணர்களுக்கு அறுபது வீடு, அறுபது மாடு என்று தானம் வழங்குகிறார். இதைக் கண்டித்து விடுதலையில் எழுத அண்ணாதுரை முடிவு செய்து பெரியாரிடம் வருகிறார்.

பெரியாரோ அண்ணாமலை அரசர் பிராமணனுக்கு அள்ளிக் கொடுக்கிறார், நமக்கு பணம் எதுவும் தர வில்லை , பார்ப்பானின் அடிமை  என்று பொங்குகிறார். 

அண்ணாமலை அரசரை கண்டித்து அண்ணா துரை எழுதிய  தலையங்கம் தயாராகி அச்சேறும் நிலையில், அண்ணாமலை அரசர் அனுப்பிய பணம் காசோலையாக  வந்து சேருகிறது.

 அண்ணாதுரை பெரியாரிடம் இதைக் கூறுகிறார். பார்ப்பானின் அடிமை என்று என்று பொங்கிய அதே  வாயால் , அண்ணாமலை அரசரை பாராட்டி எழுது என்கிறார் அவர்.

அண்ணாவோ கண்டித்து எழுதியதை என்னால் மாற்ற முடியாது என்கிறார். பிறகு  பெரியாரே நானே எழுதிக் கொள்வதாகக் கூறி அண்ணாமலை அரசருக்கு பாராட்டு தெரிவித்து விடுதலையில் எழுதினார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பணத்திற்காகப் பெரியார் ஒருவரை பார்ப்பன அடிமை என்றும் பேசுவார்;  அதே பார்ப்பன அடிமையை பல்லக்கில் தூக்கி வைத்தும் கொண்டாடுவார் என்பதுதான் அண்ணாமலை அரசரின் 60 வது பிறந்தநாள் நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. 

நாவலர் நெடுஞ்செழியன் நடத்திய "மன்றம்" இதழில் அண்ணாமலை அரசர் 60 ஆம் ஆண்டு பிறந்த நாள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.

அது பின் வருமாறு:

மனச் சான்றுக்கு மாறாகப் போகாமை!
==================================

1941-ஆம் ஆண்டில், இராசா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. இரண்டு இடங்களிலும் இயல், இசை, நாடகம், நடனம் போன்ற பல்வேறு அரங்கங்களும், தான தருமங்களும் நடைபெற்றன.

தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசுமாடுகள் போன்ற இன்னபிறவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.

அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டிக்கவேண்டும் என்பதோடு, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைச் சார்ந்த இராசா சர் சமூகத் துறையில் பார்ப்பனர்க்கு அடிமைபோகும் தன்மையையும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும் என்ற எண்ணம் அறிஞர் அண்ணா அவர்கள் உள்ளத்தைக் குடைந்துகொண்டிருந்தது.

அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதுவது என்று அண்ணா அவர்கள் எண்ணினார்கள்.

 இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது.

இராசா சர் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிகுந்த நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது.

எனவே அண்ணாவின் எண்ணத்தைப் பெரியாரும் ஆதரித்தார். யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்களுக்கு நன்கொடை தந்திருக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகிறான் அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான். நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம்.

 தேவையான பொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள்.

அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள்,

எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000 நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார்.

முன்பே எழுதிக்கொடுத்துவிட்டேன். அச்சேறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள். அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள்.

அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள்.

பெரியார் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள்.

நன்றி: 
அண்ணா வாழ்க்கை வரலாறு
- டாக்டர். அண்ணா பரிமளம்
 (மன்றம்: 15.06.1956)

- கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்