கண்ணகி கோயில் தமிழருக்கே சொந்தம்!

கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்!
======================================
சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்!
======================================

தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று  தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது .

 ஒவ்வொரு ஆண்டும்  இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான்  ஒரு நாள் மட்டும் "கண்ணகி சித்திரைப் பெருவிழா" அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பகுதியில் இருப்பதால் தங்களுக்கே சொந்தம் என்று தெரிவிப்பதற்காகவும், இதில் தமிழர்கள் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை உணர்த்துவதற்காகவும் தமிழர்களை மிகக் கேவலமாக நடத்துகின்றனர்.

உண்மையில் தமிழ் நாட்டிற்குச் சொந்தமானதே  கண்ணகி கோயிலாகும். தமிழர்களின் வழிபாட்டுமரபுகளில் தொன்மையானது கண்ணகி வழிபாடாகும். நம் தொப்புள்கொடி உறவுகள் வாழும் தமிழீழ நாட்டில் கண்ணகி வழிபாடு இன்றும் உள்ளது.

இதற்கு சான்று உரைக்கும் ஆவணமாக ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் விளங்குகிறது. அதன் வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:
 "மங்கலமடந்தை கோட்டத் தாங்கண் வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்" என்று குறிப்பு உள்ளது.

 மங்கல மடந்தை என்பதற்குப் பொருள் மங்கல தேவி என்றும், மங்கலா தேவி என்பது கண்ணகியை குறிக்கும் சொல்லாகும் என்று 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதர் குறிப்பிடுகிறார்.

 'மங்கல மடந்தை' என்று சிலப்பதிகாரத்தில் அழைக்கப்படும் கண்ணகிக்கு கோயில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன். அவன் வடபுலம் சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலையெடுத்து வழிபட்ட கோயிலும் இதுவேயாகும். 

இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இக்கோவில் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்று பல சான்றுகள் தந்துள்ளனர்.  இவற்றில் முதலாம் இராசராச சோழன் கல்வெட்டு ஒன்றும், பாண்டியன் மாறவர்ம குலசேகரன் கல்வெட்டு ஒன்றும்  முதன்மையானது. மேலும், ஒரு கல்வெட்டில் 'மாசாத்துவான்' என்று எழுதப்பட்டுள்ளது. இது கோவலனின் குடும்பப் பெயராகும்.

இத்தனைச் சான்றுகள் அளித்தும் மலையாளிகள் கண்ணகி கோயிலை தமிழர்களிடம் ஒப்படைக்க மறுத்து வருகின்றனர்.  1975இல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழக கேரள நில அளவையர்கள் பழைய நிலப்பதிவேடுகளின் அடிப்படையில, தற்போதைய தமிழக கேரள எல்லைப்பகுதிகளை  கூட்டாக அளவீடு செய்தனர். அப்போது கேரள எல்லையிலிருந்து 40 அடி தூரம் கடந்து தமிழக எல்லைக்குள் கண்ணகி கோயில் இருப்பதாக அறிவித்தனர்.
 
கேரள அரசு ஒப்புக் கொண்ட நிலையில் தமிழக அரசு கண்ணகி கோயிலுக்குச் செல்லும் கூடலூர் பனியங்குழி (6 கி.மீ) சாலையை செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்ய முயன்றது. அப்போது கேரள அரசு மத்திய அரசை துணைக்கழித்து பேச்சு வார்த்தை நடத்தி முட்டுக் கட்டை போட்டது. அதன் பிறகு கேரளம் மிகத் தந்திரமாக குமுளி வழியாக தங்கள் எல்லைக்குள் 16 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைத்தது. தங்கள் எல்லைக்குள் பாதை அமைத்ததன் மூலம் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

 பின்னர் தமிழக அரசு தந்த வரலாற்றுச் சான்றுகளை அழிக்கத் திட்டமிட்டது. அதன் ஒருபகுதியாக 1983 ஆம் ஆண்டு துர்க்கை தேவி சிலை ஒன்றை சுகுமாறன் என்பவர் மூலம் நிறுவியது. பின்னர் கேரள அரசு தந்த ஊக்கம் காரணமாக  தமிழரின் வழிபாட்டுத் தெய்வமாகிய கண்ணகி சிலைக்கு மலையாள இனவெறியர்கள் சிலர் சேதம் ஏற்படுத்தினர்.

மலையாளிகளின் துர்க்கை வழிபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கண்ணகி வழிபாட்டை ஒழித்துக் கட்டி கோயிலை அபகரிக்கப்பதே கேரள அரசின் வஞ்சகப் புத்தியாகும். பாவப்பட்ட நம் தமிழர்களோ சேதமடைந்த கண்ணகி சிலையில் மீது இப்போது சந்தனக்காப்பு வைத்து வணங்கி வருகின்றனர்.

1980ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் தான் கண்ணகி கோயில் இருந்தது.

 பிறகு அதனை சீரமைக்கும் பொறுப்பு கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பிறகு திரு மு.ராஜேந்திரன்.இ.ஆ.ப தலைமையில் இயங்கும் மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் கோயில் புனரமைப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கின்
அடிப்படையில் ஏற்கெனவே கேரள தொல்லியல் துறைக்கு அறிவுறுத்தலை  உயர்நீதிமன்றம் கொடுத்திருந்தாலும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.

தொல்லியல் துறை புனரமைப்பு வேலைகளை தொடங்கினால் வனத்துறை அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதால் வேலை கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கொடுக்கப்பட்ட தொடர் நெருக்கடிகளால்   24-06-2018 அன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில் திருவனந்தபுரத்தில் இரண்டு மாநில நிர்வாகிகள் அடங்கிய கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.

அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையும், திருவிதாங்கூர் தேவசம் குழுவும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தமிழக - கேரள கண்ணகி கோயில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக  திரு.ராஜேந்திரன் இஆப அவர்களும், செயலாளராக தேவசம் குழுத் தலைவர் திரு பத்மகுமார் இருப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டட்டது.

அப்போது நடந்த  பேச்சு வார்த்தையில் கண்ணகி கோயில் தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்பதை பினராய் விசயன் ஒப்புக் கொண்டு  கண்ணகி  கோயில் புனரமைப்பு வேலைகளை முழுமையாக மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளையிடமோ, அல்லது தமிழக அரசிடமோ ஒப்படைத்திருக்க வேண்டும்

அதை விடுத்து திருவிதாங்கூர் தேவாம்சம் குழுவை கூட்டமைப்பில்  திணித்து  கண்ணகி கோயில் கேரளாவிற்கு சொந்தம் என்பதில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த நிலையிலும்  பினராய் விஜயன் இப்போதும் உறுதியாக இருந்து வருகிறார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் முதல் தமிழக எல்லைகளை அபகரிக்கும் நோக்கோடு  டிஜிட்டல் சர்வேயை கேரள அரசு நடத்தி வருகிறது. தமிழக அரசின் ஒப்புதலை இதுநாள் வரை பெறவில்லை.

2022ஆம் ஆண்டு நடை பெற்ற கண்ணகி திருவிழாவின் போது கூகுள் வரைபடத்தில் கண்ணகி கோயில் தமிழ்நாட்டிற்குள் இருந்தது. இப்போது கோவில் கேரளாவில் இருக்கிறது. டிஜிட்டல் சர்வே மூலம் கண்ணகி கோயிலை தமதாக்கி விட்டார்கள்.

நீண்ட காலமாக 24 நாட்கள் கண்ணகி கோயிலுக்கு செல்ல வழிபாட்டுரிமை இருந்தது. பின்னர்  அது ஒரு வாரமாகி, மூன்று நாட்களாகி ஒரு நாட்களாக குறைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரை நாளாகி விட்டது. பகல் இரண்டு முப்பது மணிக்கு மேல் யாரும் வழிபடக்கூடாதாம். 

இந்தியா- பாகிசுதான்  இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை போல ஒரே நாட்டிற்குள்  தேனி- இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும் மலையாளிகளின் கையே ஓங்கி நிற்கிறது. 

இந்திய தேசியம் பேசும் பேராயக் கட்சியும், சர்வதே தேசியம் பேசும் பொதுவுடைமைக் கட்சியும் தமிழர் மண்ணை அபகரிப்பதில் ஒரே குரலில் முழங்குகின்றன.

எதற்கெடுத்தாலும்  திராவிட மாடல் என்று  வாய்ச்சவடால் அடிப்பவர் நமது முதல்வர் ஸ்டாலின்.

திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த போது, கண்ணகி கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாகவும், கூடலூர் பளியங்குடி சாலையை அமைத்து தரப்போவதாகவும் திராவிட மாடல் அரசு அறிவித்தது. இதுநாள் வரை எதுவுமே நடக்கவில்லை.

அவரின் திராவிட மாடல்  பாச்சாக்கள் கேரள முதல்வர் பினராய் விசயனிடம்  ஒருபோதும் பலிக்காது.

ஏனெனில், 'மலையாள மாடல்' பினராய் விஜயனுக்கு  திராவிட மாடல்  என்பது வெறும்  அட்டைக்கத்தி தான்  என்பது நன்கு தெரியும்.

ஏற்கெனவே திராவிட இயக்கங்கள் 'திராவிடநாடு' கேட்ட காரணத்தால் தமிழகம் மாலியத் திருத்தலமான வடவேங்கடத்தை இழந்தது. சிவனிய திருத்தலமான காளகத்தியை இழந்தது.  அப்போது நடந்த வரலாற்றுத் தவறு மீண்டும் நடக்க தமிழர்கள் இனியும் அனுமதிக்கலாகாது.

முல்லைப் பெரியாறு அணை காக்க திரண்டது போல் தமிழர்களின் உணர்வோடு, மொழியோடு, பண்பாட்டோடு, வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட கண்ணகி கோயிலை மீட்டெடுக்க தமிழர்களே! எப்போது ஒன்று திரள்வீர்!

- கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்