மைனாரிட்டி முஸ்லீம்களுக்கு சலுகை கொடுப்பது ஆபத்தானது! - பெரியார்
1962ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பெரியார் அரும் பாடுபட்டார். இசுலாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் திமுகவை வாக்களித்தனர்.
பெரியார் சும்மா இருப்பாரா? எப்போதும் பிராமண பூச்சாண்டி காட்டும் பெரியார் இந்த தடவை முஸ்லீம்கள் பூச்சாண்டியை கையிலெடுத்தார்.
மைனாரிட்டி முஸ்லீம்களுக்கு அதிக சலுகை காட்டி விட்டோம். அதாவது, "பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.
இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது" என்று எழுதினார்.
மைனாரிட்டிகளுக்கு அதிக சலுகை கொடுப்பது தமிழ்நாட்டிற்கு கேடு என்பதை மைனாரிட்டி அறிக்கை என்று தலைப்பில் பெரியார் எழுதினார். அது பின்வருமாறு:
மைனாரிட்டி அறிக்கை: ஈவெரா
(மார்ச் 6, 1962 ‘விடுதலை தலையங்கம்; ‘பெரியார்’ ஈவெரா எழுதியது)
நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி [சிறுபான்மையினர்] சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.
இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியாலும் காங்கிரசாலும் மற்றும் அவர்களுக்கு நீதி அல்லது தனிச் சலுகைகள் இன்றுள்ள ஆட்சியும் காட்டி வந்த காரணத்தினாலும் மேலும் அவர்களது செல்வாக்கு காரணமாய் ‘புத்திசாலித்தனமான’ ‘திறமையான’ ‘தகுதி உள்ள’ சமுதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும், நாடு வளர்ச்சி அடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி ) மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
தமிழ்நாடு இன்றும் சுதந்திரமற்ற அடிமை நாடு என்பது எனது பலமான கருத்து. இதை இந்நாட்டுப் பெருவாரி (மெஜாரிட்டி) சமூதாயம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். காரணம் தமிழனுக்கு சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாது. ஏன் என்றால் தமிழன் பல பிரிவினனாக ஆக்கப்பட்டவன் ஆனதால் “எதையும் கொடுத்து, என்னமும் செய்து” பயனடைந்து வந்தவன், இந்தத் தன்மைக்கு ஏதாவது ஒரு மாறுதல் தோன்றிற்று என்று சொல்ல வேண்டுமானால் 1900- ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதுபற்றி சிந்திக்க வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
தமிழனுக்கு சுதந்திரம் ஒருநாளும் இருந்ததில்லை. அவன் சரித்திரமே அடிமைத்தனத்திலும் இழி தன்மையிலும் இருந்தே தான் துவக்கப் பட்டிருக்கிறது.
அது எப்படியோ போகட்டும்.
இனிமேலாகினும் தமிழன், தமிழ்நாடு – சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமா? என்பது தான் இனி சிந்திக்க வேண்டியதாகும்.
இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக்கால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது ‘சுதந்திர உதய நாள்’ முதல் எனது கருத்து.
இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்த வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமே போதுமானதாகும்.
அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாயமாகிய தமிழனின் பெண்கள் நாற்று களை பிடுங்கி, ரோட்டில் கல் உடைத்து வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான பொதுத் தொண்டு செய்கிறார்கள். இப்படி இன்னும் பல இருக்கின்றன.
100-க்கு 3- விகிதமுள்ள பார்ப்பன மக்களும் அவர்கள் பெண்கள் பொதுநலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை ‘எட்டிப்போ!’ ‘மேலே படாதே!’ என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வு வாழ்கிறார்கள்.
அதுபோலவே 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுழைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் “கண்ணுக்கே தென்படக் கூடாது” என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட ‘கோஷா’ முறையில் — உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.
அதே நேரத்தில், நம் ஆண்களும் பெண்களும் அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் வேலைக்காரிகளாக இருக்கிறார்கள்.
முதலாவது இந்த இரண்டுதர மக்கள் நிலையும் இந்நாட்டுத் தமிழனுக்கு எவ்வளவு இழிவு மானக்கேடு என்பதை எந்தத் தமிழன் உணருகிறான்?
‘இது அவர்கள் மத தருமம்! மத ஆச்சாரம்!’ என்றால் — யார் நாட்டில், யார் மத்தியில், யாருடைய மத தர்மம், யாருடைய மத ஆச்சாரம்; யாரை இந்த நிலையில் இழிவுபடுத்துவது என்பதை சிந்தித்தால் தமிழனின் சுதந்திரம் சுயமரியாதை அளவு விளங்கும்.
ஜோசியத்தில் வல்லவரான ஒரு மேதாவியானவன் (அமாவாசையில் பிறந்தவன் திருடுவான் என்பது ஜோசியமானால்) தன் வீட்டில் திருடின அமாவாசையில் பிறந்தவரை மன்னித்து விடுவானா? இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம்.
மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி)
அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக் கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள்.
இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள்.
இந்தியக் கூட்டாட்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி-பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத் தக்கது ஆகாது.
பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.
இது சாணியை மிதிக்க அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது.
ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது.
முஸ்லிம் துரோகம் செய்யக் காரணம் என்ன? முஸ்லிம்கள் அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும்.
நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம்பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.
- பெரியார்
6.3.1962
Comments
Post a Comment