திராவிடம் - ஒரு கற்பனை கோஷம்! - ப.ஜீவானந்தம்

"திராவிட நாடு”- ஒரு கற்பனை கோஷம்!

===================================

ஐக்கிய கேரளம், ஐக்கிய தமிழகம், விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய மகாராஷ்டிரம், மகாகூர்ஜரம், ஐக்கிய பாஞ்சாலம் என்று, குமரி முதல் இமயம் வரை மொழி ராஜ்யக் கிளர்ச்சி நடப்பதே இன் றைய யதார்த்த நிலைமை. 

இந்த கிளர்ச்சி எதைக் காட்டுகிறது?

இந் தியாவில் மொழிவழியில் புதிதாக உருவாகியுள்ள தேசீய இனங்கள் சிதறிக்கிடக்கும் தங்கள் தாயகங்களை முறையாகச் சீரமைத்துக் கொள்ளும்பொருட்டு, சிதறுண்ட நிலையே சீரான நிலை எனக்கூறு வோரை எதிர்த்துப் போராடுகின்றன என்பதையே காட்டுகிறது. இந்த மொழி ராஜ்ய ஜனநாயகக் கிளர்ச்சியில், தென்னிந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் சரி, எங்கும் "திராவிட-ஆரிய இன"ப் பேச்சு எழுந்ததில்லை; எழவில்லை.

பொதுவான மொழி, பொதுவான நிலப்பரப்பு, பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான கலை, கலாச்சாரப் பண்பாடுகளுடையதும் சரித்திர பூர்வமாகப் பரிணமித்ததுமான நிலையான சமுதாயத்தையே தேசிய இனம் என்று நவீன சமுதாய விஞ்ஞானிகள் வரையறுத்துக் கூறுகிறார்கள். 

இத்தகைய தேசீய இனங்கள் (Nationalities) அல்லது மொழிவழி இனங்கள்தான் இன்றிருக்கின்றன. வருண வழி இனங்கள் (Races) 
இன்றில்லை.

இன்று திராவிடர் என்று ஓர் இனத்தாரில்லை. தமிழர், ஆந்திரர், கன்னடியர், கோனியர் (மலையாளிகள்) போன்ற தேசிய இனத்தார்கள் தான் இருக்கின்றனர். 

இன்று ஆரியர் என்று ஓர் இனத்தாரில்லை, மராட்டியர், குஜராத்தியர், பாஞ்சாலத்தார், இந்துஸ்தானியர், இரா ஜஸ்கானியர், பீகாரியர், வங்காளியர், ஆஸாமியர், ஒரியர் போன்ற தேசீய இனத்தார்கள் தான் இருக்கிறார்கள்.

"திராவிடநாடு" கோஷமோ, சரித்திரத்தில் மங்கி மறைந்து போன ஒரு புராதன மூலக் குழுவை ஜீவாதாரமாகக் கொள்ள கால வெள்ளத்தில் பிடிவாதமாக எதிர் நீச்சல் நீந்துகிறது. அதே பொழுதில், இந்த ஜனநாயக சகாப்தத்தில் கண்கூடாக மலைபோல் வளர்த்து நிற்கும் தேசிய இனங்களை ஏற்க மறுக்கிறது.

எனவே, "திராவிட நாடு" யதார்த்தத்தில் இல்லாத ஒரு கற்பனை கோஷம்.

1938ல் நீதிக்கட்சித் தலைவர்களாக இருந்த இன்றை திராவிட இயக்கத் தலைவர்கள், "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினர்.

1944லிலிருந்து “திராவிடநாடு திராவிடருக்கே " என்று முழங்குகிறார்கள். 38-வது வருஷத்திய "தமிழ்நாடு" 44-லிலிருந்து “திராவிடநாடு" ஆகவேண்டிய வகையில், யதார்த்தச் சூழ்நிலையில் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது ? ஒன்றுமில்லை.

"ஜின்னா பாகிஸ்தான் கேட்டார்- கிடைத்தது. நாங்கள் திராவிடஸ்தான் கேட்கிறோம் - கிடைக்கும்" என்கிறார்கள்.

 3 கோடி ஆந்திரர்கள் சென்ற 40 ஆண்டுகளாக விசால ஆந்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்; அதுபோல், தமிழர்களும், கன்னடியர்களும், மலையாளிகளும் முறையே ஐக்கிய தமிழகத்தையும், சம்யுக்த கன்னடத்தையும், ஐக்கிய கேரளத்தையும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

 இந்த உலகறிந்த உண்மையை, திராவிட இயக்கத் தலைமை கணக்கிலெடுக்கத் தயாராயில்லை. இந்த மொழி ராஜ்யக் கோரிக்கைகள் சரித்திரபூர்வமாக உருவாகி வருவதையும் அவர்கள் மதிக்கத் தயாராயில்லை. 

ஜின்னாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, பாகிஸ்தான் பாதையில் "திராவிடநாடு" பெற வழிகோலுகிறார்கள்.

"திராவிடநாடு" கோஷம், சரித்திர வளர்ச்சியை, யதார்த்தச் சூழ்நிலையை, மக்கள் தேவையை மதிப்பிட்டு ஏற்க மறுக்கிறது.

 இந்த கோஷம்,தி.க., தி.மு.க. தலைவர்களின் கற்பனையிலிருந்து உதித்த கோஷமே தவிர, மூன்று கோடித் தமிழர்களின் அல்லது 10 கோடி தென்னிந்தியர்களின் நடைமுறை வாழ்வில் உருவாகியதல்ல. 

எனவே, "திராவிடநாடு திராவிடருக்கே!" கோஷத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க வில்லை. மற்றப்படி, "கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை, அதனாலேயே திராவிட நாடு கோஷத்தை அது ஏற்க மறுக்கிறது" என்பதும் சரியுமல்ல. ஏனென்றால் கம்யூனிஸ்ட்கட்சியின் விருப்பு, வெறுப்பிற்கு இதில் இடமில்லை.

நித்திய நிகழ்ச்சிகள் திராவிடநாடு கோஷத்தை உறுதிப் படுத்தவில்லை. புதிய ஆந்திர ராஜ்யத்தின் பிறப்பு எதைக் காட்டு கிறது? 

ஐக்கிய கேரளம், சம்யுக்த கன்னடம் என கேரள, கன்னட மக்கள் தனி ராஜ்யங்கள் அமைக்கக் கோருவதன் அர்த்தமென்ன? "திராவிடநாடு " கோரிக்கைக்கும் பிரத்தியட்ச நிலைமைக்கும் வெகு தூரம் என்பதே. நம்நாட்டு மக்களின் நடைமுறை வாழ்விலிருந்து அது தோன்றியதல்ல என்பதே.

"திராவிடநாடு" வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கோஷம். இந்தக் கோஷம் சரித்திரத்தை உருவாக்குவதில் மக்களுக்குள்ள முதற்பெரும் பங்கை மறுக்கிறது. பெரியார்களும், அறிஞர்களும் சர்வ வல்லமையுடையவர்களென்று நிர்ணயிக்கிறது. "அடிக்கிற காற்றுக்கு ஆடுகிற நாணற் புல்" மாதிரி மக்களை மதித்து, அவர்களை எப்படி வேண்டுமாயினும் ஆட்டிப் படைக்கலாமென்று கருதுகிறது. 

இதன் விளைவாக, இதர மக்கள் கட்சிகளையும், இதர மொழிவழி மக்களையும், அவர்களுக்குரிய உரிமைகளையும் மதிக்கத் தவறுகிறது.

"திராவிடநாடு"- ஒரு பிரிவினை கோஷம்
=====================================

திராவிட இயக்கத்தார், இந்திய யூனியனிலிருந்து "திராவிட நாடு" ஒட்டும் உறவுமின்றிக் கத்தரித்துக் கொள்ள வேண்டுமென்கின்றனர்.

 டில்லியிலிருந்து பிரிவதுதான் சர்வரோக நிவாரணி என்பது அவர்களின் தாரக மந்திரம். 

ஜனநாயக உணர்ச்சியும் முன்னேற்ற ஆர்வமும் உலகில் அதிகரிக்க அதிகரிக்க, மக்களும் நாடுகளும் உலகக் கூட்டுறவையே மென்மேலும் நாடுகிறார்கள்.

 இதுதான் ஜனநாயக உலகத்தின் வளர்ந்துவரும் போக்கு. இதற்கு நேர் எதிரிடையான போக்கை "திராவிடநாடு " பிரிவினை கோஷம் எதிரொலிக்கிறது. ஆகவே இந்தப் பிரிவினைப்போக்கு, பிற்போக்குத் தன்மை வாய்ந்தது.

சென்ற இரண்டு தலைமுறைகளாக ஏகாதிபத்திய எதிர்ப்பு - நாட்டு விடுதலைப் போராட்டங்களிலும் சரி, நல்வாழ்வுக்காக பெற்ற வர்க்கப் போராட்டங்களிலும் சரி, இந்தியாவிலுள்ள பல்வேறு இன மக்களும், ஒருவரை ஒருவர் தழுவி நின்று, ஒன்றுபட்டே போராடி வந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் என்றும் காட்டிக் கொடுத்ததில்லை.

 இதில், ஆரியன் -திராவிடன், வடநாட்டான் - தென்னாட்டான் என்ற பேத உணர்ச்சி முன்னணிக்கு வந்ததேயில்லை. இன்றும் நேரு ஆட்சியின் பிற்போக்கை முறியடித்து மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்ட, ஒன்றுபட்டே போராடுகிறார்கள்.

மொழி ராஜ்யக் கிளர்ச்சி வெற்றி பெறும் பொருட்டு, நேரு ஆட்சியின் முட்டுக் கட்டையை எதிர்த்து முறியடிக்கப் பல்வேறு இனமக்களும் ஒன்றுபட்டே போராடுகிறார்கள்.

ஆகவே, மொழி ராஜ்யவாதிகள் இந்திய யூனியனிலிருந்து பிரிந்து தனித்துப்போக விரும்பினதுமில்லை; விரும்பவுமில்லை. ஏனென்றால் மொழிராஜ்யக் கோரிக்கை இந்தியக் கூட்டாட்சியில் அழிவை அல்ல - ஆக்கத்தை, பலவீனத்தையல்ல - பலத்தைக் காண்கிறது.

"திராவிடநாடு' கோரிக்கை, இந்திய யூனியனிலிருந்து பிரிந்து போவதில்தான், ஆக்கத்தை, வலுவைக் காண்கிறது. 

காரணம், அது ஜனநாயக சக்திகளிடையில் இந்தியாவில் சரித்திரபூர்வமாக வளர்ந்து வரும் ஒற்றுமையைப் பார்க்க மறுக்கிறது. மக்களுடைய கூட்டுப் போராட்டத்தின் இறுதி வெற்றியில் நம்பிக்கை வைக்க மறுக்கிறது. எனவே மொழி ராஜ்யக் கிளர்ச்சியின் வெற்றியும், பிற்போக்கு நேரு ஆட்சி ஒழிந்து மொழி ராஜ்யங்கள் தன்னிச்சையாக இணைந்து மலரப் போகும் மக்கள் ஜனநாயக இந்தியக் கூட்டாட்சியின் வெற்றியும் சர்வ நிச்சயமென்பதையும் தொலைநோக்குடன் பார்க்க மறுக்கிறது.

ஆகவே முற்போக்கு கோஷத்தோடு பிற்போக்கு கோஷத்தையும் போட்டு, குழப்ப வேண்டியது திராவிடத் தலைமைக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. 

ஒருபுறத்தில், ஸ்டாலினையும், மா-சே-துங்கையும் வானத்தில் தூக்கி வைத்துப் புகழுவதும், சோவியத் யூனியனையும் மக்கள் சீனத்தையும் அவற்றின் அரும்பெறல் பேறுகளையும் வாயாரப் பாராட்டுவதும் மறுபுறத்தில், ஜின்னாவின் பாதையில் சென்று திராவிடநாடு பெறுவோமென்று வீர முழக்கம் புரிவதும், பர்மா பிரிவினையை, பாகிஸ்தான் பிரிவினையை திரும்பிப்பார் என்பதும் அவர்களுடைய போர்த் தந்திரத்தின் கணிசமான அம்சமாக உருவாகி இருக்கிறது.

விசால ஆந்திரம், ஐக்கிய கேரளம் அமைப்பு என்பது, இந்தியக் கூட்டாட்சியிலிருந்து பிரிந்து போகும் பிற்போக்குப் பிரிவினை நோக்கம் உடையதல்ல; ஒவ்வொரு இன வளர்ச்சிக்கும் உத்தரவாதமளித்து சகல இனங்களும் நேசப்பாங்குடன் ஒரு குடும்பமாக வாழ அடிகோலும் தன்மை வாய்ந்தது.

 பிரிட்டிஷார் அமைத்த மாகாணங்களையும் சமஸ்தானங்களையும் உடைத்து, மெய்யான இந்திய ஒற்றுமை நிலைநாட்டும் மொழிவழி ராஜ்யங்களின் சீரமைப்பே அது.

 "திராவிட"ப் பிரிவினைக் கிளர்ச்சி பல்வேறு இன மக்களின் 
வளர்ச்சியையும், ஆட்சி உரிமையையும் மறுப்பதோடு, இனங்களுக்கிடையே உண்மையான ஒற்றுமை வளர வொட்டாமல் வேற்றுமையை வளர்க்கவே உதவுகிறது. எனவே திராவிடப் பிரிவினைக்கும் மொழிவழி ராஜ்யப் பிரிவினைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

"மொழிவழிப் பிரிதல் - இனவழிச் சேர்தல்”
================================
அண்மையில் இவ்வாறு ஒரு வரையறுப்புக் கொடுத்து வருகிறார்கள். தி.மு.க தலைவர்கள், இதன் பொருள் என்ன? 

ஐக்கிய தமிழகம், ஐக்கிய கேரளம், விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம் என்று மொழிவாரி ராஜ்யங்கள் பிரியட்டும். ஆனால், இந்த நான்கும் 'திராவிட இன' அடிப்படையில் 'திராவிட'க் கூட்டாட்சியாக இணைந்து நிற்க வேண்டும். இந்தியக் கூட்டாட்சியில் இணையக் கூடாது" என்பதே.

தி.மு.க. மொழி ராஜ்ய அமைப்பை அங்கீகரிப்பதை நாம் வரவேற்கிறோம். மற்ற அம்சம், "பழைய கருப்பன் கருப்பனே " என்ற கதை தான் என்று சொல்லாதிருக்க முடியவில்லை. இந்த நிலை தி. மு.க. மொழி ராஜ்ய வாதிகளோடு சமரசம் செய்து கொள் வதைக் காட்டுகிறது . 

" திராவிட நாடு" கோரிக்கையிலிருந்து மொழிராஜ்யக் கோரிக்கைக்கு, தடுக்க முடியாதபடியும் தவிர்க்க முடி யாதபடியும் இறங்கி வந்திருக்கிறதென்பதையே குறிக்கிறது. ஆனால் மொழி ராஜ்ய ராஜ்ய வாதிகள் ஏற்கும் இந்தியக் கூட்டாட்சியை ஏற்க மறுக்கிறார்கள்; "திராவிடக் கூட்டாட்சி" ஆக்க விரும்புகிறார்கள்.

அன்று "ஓர் இனம் ஒரு ராஜ்யம் " என்றவர்கள், இன்று "ஓர் இனம் நான்கு ராஜ்யங்கள்" என்று கூறத் தலைப்பட்டுள்ளனர். இந்தக் குழப்படி, மொழி ராஜ்ய உருவாக்கத்தின் சரித்திர யதார்த்தத்தை அவர்கள் மறுக்க முடியாதபடி அங்கீகரித்த போதிலும், "திராவிட இனம்' "திராவிட நாடு' என்ற கற்பனையில் அவர்கள் பெருமையுடன் கொண்டுள்ள பிடிப்பின் விளைவு தான் என்பதை நாம் நிதானமாக உணர வேண்டும்.

- ப.ஜீவானந்தம் எழுதிய 
"ஐக்கிய தமிழகம்" நூலிலிருந்து.
(1954)

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்